வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 19 ஏப்ரல், 2008

மின்னல் தரும் அதிரடிச் செய்திகள்

>>>மின்னலின் முன்னாள் பணியாளர்கள் தமிழுயிருக்கு விடுத்த மின்னஞ்சல்:-
அன்புத்தமிழ் இதயங்களே, நம் நாட்டில் , தமிழ் தழைத்து வாழ்ந்த இந்நாட்டில் தமிழை அழிக்கக்கூடிய வகையில் , மொழியை கொலைசெய்யக்கூடிய அளவில் தமிழன் ஒருவனே தமிழுக்கு எதிரியாக (தமிழர்களின் அரவணைப்பில் செயல்படுவதாக ஏமாற்றி பாசாங்Ì செய்துகொண்டு ) , பொதுமக்கள் முன்னிலையில் நல்லவனாக வேடம் புனைந்து தமிழை அழித்துக்கொண்டிருக்கிறான். நம்பமுடியவில்லை....

கடந்த ஆகசுட்டு மாதம் 2005ஆம் ஆண்டு , மின்னல் பண்பலைத் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் இந்த தமிழ்/தமிழர் அழிவுப் பணியை மிக அமைதியாக அதேவேளை பொதுமக்களுக்கும் தெரிந்தே மேற்கொண்டு வருகிறான் . தினந்தோறும் வானொலியை கேட்போர் முன்னிலையிலேயே இந்த அழிவுப்பணி மிக கச்சிதமாக நடைபெற்றுவருகிறது. இது பெரிதும் வருத்தத்தை அளிக்கிறது.

ஏற்கனவே தனியார் (தமிழ் வானொலி எனக் கூறிக்கொள்ளும் மின்னல் வானொலி) தமிழை அழிக்க நாம் விட்டு விட்டோம். இப்போது அரசாங்க வானொலியும் தமிழ் அழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது , நாம் அளித்த வாக்குகளுக்கு சக்தி இல்லை என்பதைக் காட்டுகிறது. இனியும் தமிழ்/தமிழர் எதிரிகளை விட்டுவைக்கக்கூடாது. அப்படியே விட்டுவைத்தோமானால் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பது மெய்ப்பட்டு நம் கண் முன்னேயே இந்த அழகு மொழி அழிக்கப்பட்டுவிடும். எனவே, திரண்டு இந்த அழிவைத் தவிர்க்க ஆவன செய்வோம்.

வானொலித் தலைவனாக இருக்கும் இந்தத் தமிழ்/தமிழினத் துரோகி செய்த சாதனைகளைக் காண்போம்:

அழகுத் தமிழ் பேசிய அறிவிப்பாளர்கள் காணாமல் போயினர்
இவர் பொறுப்பேற்றது ஆகசுட்டு 2005. செப்டெம்பர் தொடங்கி மு.சங்கர் மின்னலில் இல்லை. குமரன் காணாமல் போய்விட்டார். ராஜேசுவரியும் வேறு இடத்துக்கு பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டார். இப்படி நற்றமிழில் உரையாடிய அறிவிப்பளர்களை வானொலி இழந்தது. இப்பொழுது முருகையா முத்துவீரனைக் கேட்க முடிவதில்லை. மீனாகுமாரி எத்தனையோ உருட்டல் மிரட்டல்களை சமாளித்து பின்னர் தனியார் வானொலிக்குச் சென்றுவிட்டார். விஜயன், சில்லாழி போன்றவர்களையும் தற்போது கேட்க இயலவில்லை. கவிராஜன் விளையாட்டு நிகழ்ச்சியில் மட்டுமே வருகிறார். ஜமுனா வேலாயுதம் வஞ்சிக்கப்பட்டார். தயாளன் சண்முகம் துரத்தப்பட்டார். இப்படி பல நல்ல அறிவிப்பளர்கள் இந்த தலைவனின் பதவிக்காலத்தின்போது காணாமற்போயினர்.

அடுத்த மொழிக்கு அரை மணி நேரம் கூட்டித்தந்த வள்ளல்
முன்பெல்லாம் இந்திப்பாடல்கள் காலை நேரத்தில் 9 மணி செய்திகளுக்குப் பின்னர் 20 நிமிடங்கள் ஒலித்தன. இப்போது மொழி அழிப்போன் தலைவனாக வந்த பிறகு காலை 10 மணிச் செய்திகளுக்குப் பிறகு 55 நிமிடங்கள் இந்திப்பாடல்கள் ஒலிக்கின்றன. நம் மொழிக்கு என்று இருந்த நேரத்தை அதிகம் பேர் கேட்காத மொழிக்கு ஒதுக்கியது ஏனோ?

அற்புதமான நிகழ்ச்சிகள் அகற்றப்பட்டன
மக்கள் நடுவே எனும் நிகழ்ச்சி பலருக்குப் பயனாக அமைந்தது. அதை அகற்றிய பெருமை இந்த தலைவனுக்கே சேரும். இலக்கிய நிகழ்ச்சிகள் சிறிது காலம் இல்லாமலேயே இருந்தன. இசையரங்கம் போன இடம் தெரியவில்லை. சிறுகதை காணாமல்போய்விட்டது. உல்லாச ஊர்வலம் அகற்றப்பட்டது. பலர் சம்பளம் பெற உதவியது இந்நிகழ்ச்சி; கலைஞர்கள் பலர் வாழ வழிவகுத்தது இந்நிகழ்ச்சி இந்தத்லைவனுக்கு மட்டும் கசந்தது.

தகாத வார்த்தைகளை பயன்படுத்திய தலைவன்
‘நான் சனியன், என்னைத் தொட்டவனை விடமாட்டேன்’ , ‘ சௌக்கிட் ரோட்டில் சென்று வேலை செய்யலாம் நீங்களெல்லாம்‘, ‘இந்த ஆண் அறிவிப்பளர்கள் எல்லாம் சேலை கட்டிக் கொள்ளலாம்’ , ‘மின்னலிலிருந்து வெளியேற்றப்பட்டால் நாய் கூட உங்களை மதிக்காது’ . ‘ பணத்துக்கு அலையாதீர்கள்’ , ‘ நான் நல்ல பெற்றோருக்குப் பிறந்தவன், நீங்கள் எப்படியோ’ , ‘நான் உங்களை இíகிருந்து போகச் சொல்ல மாட்டேன், நான் செய்யும் கொடுமைகளில் நீங்களே ஓடிவிடுவீர்கள்’ இப்படிப் பலவகையாகப் பேசி பண்பற்ற முறையில் நடந்து கொள்ளும் தலைவன் எப்படித் தமிழை வாழவைக்க முடியும். (நாகரிகம் கருதி இன்னும் சில இணைக்கப்படவில்லை)

இறைவணக்கமும் தமிழ்வாழ்த்தும் நிறுத்தப்பட்டன
முந்தைய தலைவர் காலத்தில் ஒவ்வொரு சந்திப்பிலும் கூட்டத்திலும் தொடக்கத்தில் இறைவணக்கமும் தமிழ்வாழ்த்தும் ஒலித்தன. இந்தத் தலைவன் வந்த பிறகு அவை அகற்றப்பட்டன.

காலை நிகழ்ச்சியில் அரை மணி நேர தத்துவப் பாடல்கள் நிறுத்தப்பட்டன
காலை நிகழ்ச்சியில் காலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை ஓரிரு பக்திப்பாடல்களும் தத்துவப் பாடல்களும் ஒலியேற்றம் கண்டு வந்தன. இந்தத் தலைவன் வந்த பிறகு காலையிலேயே காதல் பாடல்கள் ஒலிக்கின்றன.

தனியார் வானொலியைப் பின்பற்றுங்கள்
‘என்ன அறிவிப்பு செய்கிறீர்கள்? நல்ல தமிழில் பேசினால் யார் கேட்பார்கள்? தனியார் வானொலியைப் போன்று பேசுங்கள் என அறிவிப்பளர்களை வற்புறுத்தி வானொலிப் பாரம்பரியத்தை அழித்த பெருமை இந்தத் தலைமைக்கே சேரும்.

தனித்தமிழ் பண்பாட்டை அழித்த அசுரன்
தூய தமிழைக் கேட்க முடிந்த காலம் ஒரு காலம். இப்போது தமிழினூடே ஆங்கிலம் அதிகம் ஒலிக்கிறது. என்ன பண்பாடு இது? தாராளமாக் ஆங்கிலத்தைப் பயன்படுத்துங்கள் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்லது. எவன் கேட்பான் நம்மை என்ற ஆணவம் . அண்மைய விளம்பரங்களைக் கேட்டீர்களா? எத்தனை ஆங்கில வார்த்தைகள் கலக்கப்பட்டுள்ளன. கலங்கியது மொழி மட்டுமல்ல மொழிக்கு உரிய இனமும்தான். இப்படியே ஒரு காலத்தில் அது தமிழ் வானொலியாக இருக்காது. பிற மொழி வானொலியாகிவிடும்.

தன் பலவீனங்களைக் களைய பிறரை குற்றம் சுமத்துதல்
தனக்குள்ளே ஆயிரம் ஓட்டைகளை வைத்துக்கொண்டு அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவது இந்தத் தலைவனுக்கு கை வந்த கலை. தான் எடுத்த அறிவிப்பாளர்கள் தமிழ் பேசத் தடுமாறிக்கொண்டிருக்கும்போது, செய்திகள் சரியாக வாசிக்கப்படுவதில்லை எனக் குறை கூறி தடுமாற்றங்களை குறிப்பெடுத்து மேலிடத்தில் கொடுத்து வந்தது தன் தவற்றை மறைக்கவே. விளையாட்டு நிகழ்ச்சி சரியில்லை என அதையும் குறை கூறி வம்பளந்தது பெரிய கதை. இசுலாமிய நிகழ்ச்சிப் பிரிவிலும் வம்பு. இப்படி எல்லாரிடமும் பிரச்சைனைகள் கொடுத்து தமது பிரச்சனையை மூடி மறைத்துக்கொள்ளவே என்பது தெளிவு.

அரிச்சுவடி தெரியாதவர்களெல்லாம் அறிவிப்பாளர்கள்
அறிவிப்ப்பாளர்களை கூர்ந்து கேளுங்கள். மிகச் சிலரைத் தவிர்த்து , பொதுவாக எல்லருமே நல்ல தமிழ் பேசத்தெரியாதவர்கள். பலருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இப்படிப் பட்டவர்களையே அறிவிப்பளர்களாகத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஆட்டிப்படைப்பது இந்தத் தலைவனின் வேலை. வேலைக்கு ஆளெடுப்பது வெளியே தெரியாது. இரகசியாமாகப் பலர் வந்தனர். பலர் போயினர். குறுந்தகவல் மூலம் யாராவது பணிக்கு ஆள் எடுப்பார்களா? இந்தத் தலைவனால்தான் முடியும். புதியவர்களை எடுக்கும் பணி அனுபவம் மிகுந்த சிறந்த அறிவிப்பாளர்களாலேயே பெரும்பாலும் நடத்தப்படும். ஆனால் இங்கே உருப்படியாக ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம் நேர்முகம் நடத்துகிறார்கள், பயிற்சி அளிக்கிறார்கள். அதைப்போலவே அறிவிப்புத் தரமும் நிகழ்ச்சிகளின் தரமும் இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

அழைக்கும் நேயர்களை தவிர்ப்பது
மக்களிடம் பேசி குறைகளைக் கண்டறிந்து திருத்திக்கொள்வது நல்ல தலைவனுக்கு அழகு. ஆனால் இங்கே, யார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும் பதில் கிடையாது. எல்லாரையும் சந்திப்பதும் கிடையாது.

யார் சொல்லி நாம் கேட்பது என்ற ஆணவம்
பத்திரிகைகள் எதை வேண்டுமானாலும் எழுதட்டும், நேயர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும். நாம் செய்வதே சரி. அதையெல்லம் பெரிது படுத்த வேண்டாம் என அறிவிப்பளர்களிடம் சொல்லி, தான் சொல்வதையே செய்யச் சொல்லி வற்புறுத்துவது. பிறர் கருத்துக்கு மதிப்பளிப்பது கிடையாது.

உள்ளூர் பாடல்கள்
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குறைந்தது ஓர் உள்ளூர் பாடல் ஒலிபரப்பப்பட்டு வந்ததை, உள்ளூர் பாடலே வேண்டாமென்று நிறுத்தியது இந்தத் தலைமை. பின்னர் பல குறைகூறல்கள் எழுந்தபின் ஏதோ ஒரு காரணத்துக்காக திரும்ப உள்ளூர் பாடல்களை நாளுக்கு 15 நிமிடங்கள் ஒலிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு பாடல் என்றால் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 50-60 நிமிடங்களுக்கு நல்ல உள்ளூர் பாடல்கள் தேர்ந்தெடுத்து ஒலிபரப்பப்பட்டு வந்தது. இப்போது 15 நிமிடங்கள் எந்த மூலை?

பழைய பாடல்கள் எங்கே?
இரவு 11.15 என்றால் பல்லாயிரக்கணக்கான நேயர்கள் வானொலி அருகில் அமர்ந்து பழைய பாடல்களைக் கேட்ட காலம் போயே போய்விட்டது இந்தத் தலைவன் வந்தபின். இப்போது பழைய பாடல்களை அபூர்வமாகவே ஒலிக்கின்றன. பழைய பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என கட்டளை வேறு அனைவருக்குமா?

உள்ளூர் கலை தொடர்பான செய்திகள் ஓரங்கட்டப்பட்டன
உள்ளூர் பாடல் தொகுப்பு வெளியீடு, உள்ளூர் நாடக வெளியீடு போன்றவை குறித்த பேட்டிகள் பின்னிரவு 12.15க்கு தள்ளப்பட்டன. ( மிகக் குறைந்த நேயர்கள் கேட்கும் பின்னிரவு நேரத்தில்) செவ்விசை சித்தர் ரெ.சண்முகம், மலேசிய வாசுதேவன் போன்றோருக்கும் இதே நிலை. ஆனால் அதே வேளை சினிமா நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என்றால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் அதிகமான நேயர்கள் கேட்கும் நண்பகல் வேளை. ஏன் இந்தப் பாரபட்சம்? உள்ளூர் இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய பேட்டி என்றால் பல விசாரிப்புகள் , பல ஆவணங்கள் தேவை. இதே சினிமா தொடர்பிலானது என்றால் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. விமான நிலையத்திலிருந்து நேரே நிலையத்துக்கு வந்து பேட்டி கொடுக்கலாம். நமக்கு மதிப்பு அவ்வளவுதான். நம்மை மதிக்கத்தெரியாதவர்கள் மிதிக்கப்பட வேண்டாமா?

உத்தமமான நிலையத்தை ஊழல் நிலையமாக்கியது
இந்த வானொலிக்கு எனத் தனி மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது. இந்தத் தலைவன் வந்த பின் அனைத்தும் விலை பேசப்பட்டது? குயில் விழா எவ்வளவு பணத்தைப் பெற்றுத் தந்தது? பணம் எங்கே போனது? அர்சியல் தலைவர்களை வைத்துக்கொண்டு சில கலை நிகழ்ச்சிகள் பெரிய செலவில் நடத்தப்பட்டன? கணக்கு எங்கே? இப்படி வானொலியை ஊழல்மயமாகியது இன்றைய தலைமை.

கண்ணியமான அறிவிப்புத் தொழிலை கன்றாவியாக்கியது
அறிவிப்பாளர்கள் சமுதாயத்தில் போற்றப்பட்டு வந்தவர்கள். ஓர் தகுதிநிலையைப் பெற்றிருந்தவர்கள். அவர்களை தெருத் தெருவாக ஆடவைத்தது இன்றைய தலைமை. கண்ணியமான பணிக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது.

சுழியத்தை ஒழித்த சுழியம்
சுழியம் என்ற நல்ல தமிழ் சொல்லை அறிவிப்பாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். அதற்கு, முந்தைய தலைமையும் ஆதரவு தந்தது. ஆனால், இந்த தலைவன் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் சுழியம் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நல்ல தமிழுக்கு எப்போதுமே இந்த தமிழர் துரோகி எதிரிதான்.

இந்தத் தலைவன் தலைமைக்கு வந்தது முதல், சிறு சிறு சிக்கல்கள் தோன்றத் தொடங்கின. பின்னர் நாளாக நாளாக சிக்கல்கள் பூதாகரமாக உருவெடுக்கத் தொடங்கின. வானொலிக்குள்ளேயே பற்பல பிரச்சினைகளினால் ( இந்தத் தலைவனது அடக்குமுறை தாங்க இயலாமல்) பற்பல பிரிவுகள் உருவெடுத்தன. அதில் சிலர் இந்தத் தலைவனது கொடுமை தாங்க இயலாமல், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். சாது மிரண்டால் காடு கொள்ளாதல்லவா? அதனை இந்த சுயநலவாதியால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. யாரும் எதிர்ப்பதோ, கேள்வி கேட்பதோ இந்த வானொலித் தலைவனுக்குப் பிடிக்காது. எனவே எதிர்க்குரல் கொடுத்தவர்களுக்கு சாவு மணி அடிக்க சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருந்த வேளையில், சரியாகப் பட்டது ‘ சமுதாயத்தின் தலைவிதியை மாற்றிய பேரணி’.

மகேந்திரன், மீனாகுமாரி, விஜயன், சில்லாழி, கவிராஜன் , ஜமுனா, தயாளன் ஆகியோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டார்கள் எனக் கதையைத் திரித்தான் இந்த பரிவுமிக்க தலைவன். அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

இவை அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
பேரன்புடையீர், சமுதாயத் துரோகத்துக்குச் சாவு மணி அடிப்போம். மெல்லத் தமிழ் இனிச் சாக நாம் வழி அமைத்துக்கொடுக்கக்ககூடாது. நம் காலத்தில் தமிழ் அழிந்ததாக இருக்கவேண்டாம்
வீறு கொண்டு எழுங்கள் நன்னெஞ்சங்களே! எழுமின் விழிமின் கருதிய கருமம் கைகூடும்வரை உழைமின்!
@ஆய்தன்: நல்லதமிழ்ப் பேசும் மின்னலை மீட்டெடுக்க 'தமிழுயிர்' விரும்புகிறது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மின்னல் வானொலிக்கு எதிரான குறைகூறல்கள் நாளுக்கு நாள் வலுவாகிக்கொண்டே இருக்கிறது. தமிழ்மொழி நலத்தோடு நல்லபல நிகழ்ச்சிகளை நெடுங்காலம் படைத்து வந்திருக்கும் மின்னல் எப்.எம் அண்மையக் காலத்தில் தமிழுக்கு எதிராகச் செயல்படுவது மனதிற்கு வேதனையளிக்கிறது. ஒரு தரமிக்க வானொலி நிலையத்தை.. நீண்டகால பாரம்பரியம் மிக்க வானொலியை.. காற்றலையில் தமிழைப் பரப்பி மொழி இன உணர்வை வளர்த்த வானொலி இன்று பொழிவிழந்து, கலையிழந்து காணப்படுகிறது. மின்னலின் இத்தனை பெரிய பின்னடைவுக்கு அதனுடைய தலைவர் முழுப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனத் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை விடுகின்றேன்.

தமிழால் பிழைக்கும் தமிழன்
வீரமாமணி - தலைநகர்

பெயரில்லா சொன்னது…

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் முற்றிலும் உண்மையே. தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் வானொலியைக் காப்பாற்றிட வேண்டும். இல்லையேல் தமிங்கில வானொலியாக மாறிவிடும். மின்னலின் தலைவரும் அவருடைய சில அடிவருடிகளும் தமிழ் அழிக்கும் வேலையைக் கனக் கச்சிதமாக செய்துவருகின்றனர். மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்த கதையாக டி.எச்.ராகா மாடும் மின்னல் மாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. ராகா மாடு நக்கினாலும் மின்னல் மாட்டுக்கு புத்தி வேண்டாமா? தமிழ் வானொலியில் தமிழைக் காப்பாற்ற தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

-தமிழ்ப்பற்றுள்ள
மின்னலின் அறிவிப்பாளர்