வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 16 மார்ச், 2008

வண்டவாளம்..! (2)


என் பெயர்:- இராஜசோனகிரி

தொழில்:- தமிழ் வானொலி நிலையத் தலைவர்

கொள்கை:- தமிழ் வானொலியில் தமிழ் இருக்கக்கூடாது

விரும்பிச் செய்வது:-
நன்றாகத் தமிழ்ப் பேசும் அறிவிப்பாளர்களை நோட்டம் இடுவது

பிடித்தப் பழக்கம்:-
புதிய அறிவிப்பாளர்களைக் கொச்சை வார்த்தையில் திட்டுவது

அதிரடியாகச் செய்வது:-
நல்லதமிழ் பேசும் அறிவிப்பாளர்களுக்கு ஆப்பு வைப்பது

இதுவரை செய்த பெரிய சாதனை:-
சுழியம் என்பதைத் தடைசெய்து பூஜ்ஜியத்தை நிலைப்படுத்தியது

பூஜ்ஜியத்தை நிலைப்படுத்திய காரணம்:-
நானும் பூஜ்ஜியமாக இருப்பதால்

பிடித்த ஒருவர்:-
எனக்கு நன்றாக கூஜா தூக்கும் என்னுடைய துணை அதிகாரி சாந்தமான அம்மையார்.

எதிர்கால ஆசை:- அகில மலேசிய பூஜ்ஜிய சங்கம் தொடங்குவது.


  • ஆய்தன்:- தமிழ் வானொலியில் தமிழுக்குத் தடையாக இருக்கும் தமிழ் அதிகாரிகள் செத்தொழியும் நாளே தமிழர்க்கு நன்நாளாகும்.

வண்டவாளம்..! (1)


என் பெயர்:- சி.நாகப்பான்

எண்கணிதப்படி மாற்றிக்கொண்ட பெயர்:- சி.நக்பா

முழுநேரத் தொழில்:-
தமிழர்களின் நல்ல பெயர்களை எண்கணிதப்படி கோளாறாக்குவது

பகுதிநேரத் தொழில்:-
வானவில் தொலைக்காட்சியில் எண்கணிதம் பற்றி புழுகுவது

எண்கணிதத்தின் சிறப்பு:- பணம் பண்ணும் திருட்டுவழி

எனக்கு ஏன் இந்தத் தொழில்:-
உழைத்துச் சம்பாதிக்க சோம்பலாக இருப்பதால்

எண்கணிதம் எப்போது தோன்றியது:- தமிழன் அறிவுகெட்டுப் போன பிறகு.


என் வாடிக்கையாளர்:-
படிக்காத மக்குகளும் சில படித்த மடையர்களும்

என்னுடைய மூலதனம்:- மக்களின் முட்டாள்தனம்

நான் சூட்டிய சில அருமையான பெயர்கள்:-
ருப்பிவிஷி, ப்ரியவாஹினி, குவாமுஷன், ரிஷிகுஷி, பூக்பஜ்ஜன், குஷால் ராஜ், அஹோவஜன் இப்படி பல உள்ளன.

மறக்க முடியாதது சம்பவம்:-
Magenthiran என்பதை Mahkkheennddraan மாற்றிக் கொடுத்தேன். அவர் பெரிய பெரிய கோடிசுவரனாக வருவதற்குப் பதிலாக கேடியாக மாறிவிட்டார். பாவம்!

பிடித்தப் பாடல் வரி:- எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு இராமையா..!


  • ஆய்தன்:- தமிழா.. எத்தனைக் காலம்தான் ஏமாறுவாய் எண் கணிதத்திலே!

புதன், 12 மார்ச், 2008

நாடகத்தமிழ் வளர்க்கும் பாலா வாழ்க!


உலகில் பல்வேறு மொழிகளும் மக்களும் தோன்றுவதற்கு முன்பே செம்மாந்த நிலையினை அடைந்துவிட்ட மொழி தமிழாகும்; மக்கள் தமிழராவர். பல உலக மொழிகளுக்கு ஒலிக்குறிப்பு, வரிவடிவம் என எதுவுமே இல்லாத காலத்திலேயே இயல், இசை, நாடகம் என மூன்று தமிழாக முன்னிலை கண்டது நமது தமிழ்மொழி. இயலும் இசையும் இணைந்து இருப்பது நாடகத்தமிழில் தான். அதனால்தான் முத்தமிழில் நாடகத் தமிழ் சிறப்பிடம் பெறுகின்றது. அந்த நாடகத் தமிழைத் தமிழக மண்ணில் போற்றி வளர்த்தோர்கள் பற்பலர் ஆவர். நாடகத் தமிழானது புராண நாடகம், இலக்கிய நாடகம், தெருக்கூத்து, சமூக நாடகம், ஓரங்க நாடகம், நவின நாடகம் என பல்வேறு பரிணாமங்களைக் கண்டு இன்றளவும் வாழ்ந்து வருகின்றது. தமிழ் நாட்டில் திரைப்படம், சின்னத்திரை, தொலைக்காட்சி ஆகியவற்றின் தாக்குறவுகளுக்கு இடையில் நாடகத்துறை முற்றிலும் நலிந்துவிடாமல் அவ்வப்போது தலைக்காட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழ் மண்ணில் தோன்றி வளர்ந்த தமிழ் நாடகக் கலை காலங்களைக் கடந்து.. கடல்களைக் கடந்து நமது மலேசியத்திலும் ஓரளவு வாழ்ந்து வருகின்றது என்பதை நினைக்கும்போது மெருமிதம் ஏற்படுகின்றது. மலேசியத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பெருமிதம் ஏற்படுவதற்குக் காரணமாக விளங்குபவர் மலேசியத் தமிழ் மேடை நாடக இளம் இயக்குநர் எஸ்.டி.பாலா என்பவர்தான். மலேசியாவைப் பொறுத்தவரையில் நாடகத் துறையில் பெரும் பங்காற்றிய நாடகத் தந்தை ஆழி அருள்தாசன், சா.ஆ.அன்பானந்தன், பைரோஜி நாராயணன், பிரேம் கமால், வீ.கோவிந்தராஜ், நாடகக் காவலர் ஆர்.பி.எஸ்.மணியம் முதலான நாடகத்துறை முன்னோடிகளின் வரிசையில் தற்போது தமிழரின் இக்கலையைப் பேணிவருபவர் எஸ்.டி.பாலா என்றால் மிகையன்று.

அண்மையில் மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் வரலாற்று நாயகர் துன் சம்பந்தன் அவர்களின் இறவாப் புகழ் பேசும் 'சம்பந்தன்' என்ற மேடை நாடகத்தை அரங்கேற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் இளஞர் பாலாவைத் 'தமிழுயிர்' நெஞ்சாரப் பாராட்டுகிறது. ஏழைத் தமிழர்களுடன் ஏழையாகவே வாழ்ந்து, மக்களுக்குச் சேவை செய்வதையே தம்முடைய உயிர்மூச்சாகக் கொண்டு, தமிழர்தம் நல்வாழ்வுக்குப் பெரும் பாடாற்றிய மலேசிய இந்தியர் காங்கிரசு கட்சியின் ஐந்தாவது தலைவராகிய துன்.வி.தி.சம்பந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக மேடை நாடகமாக்கி அரங்கேற்றம் செய்துள்ள பாலாவை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

'சம்பந்தன்' மேடை நாடகம் கடந்த பிப்பிரவரி 29ஆம் நாள் தொடங்கி மார்ச்சு 4 வரையில் கோலலம்பூரில் நடைபெற்றது. நாட்டின் கலைத்துறைக்கு அடையாளமாக கம்பீரமாக வீற்றிருக்கும் 'இசுத்தானா புடாயா'வின் ஆதரவோடு இந்த நாடகம் அரங்கேறியிருப்பது கண்டு மலேசியத் தமிழ்க் குமுகாயம் பெருமைப்பட வேண்டும்.

மேடை நாடகத் துறையில் முழுமூச்சாக ஈடுபட்டுவரும் பாலாவுக்கு இது 19ஆவது நாடகமாகும். தமிழகம் வரையில் சென்று நாடக அரங்கேற்றம் செய்டுள்ள இந்த இளைஞர் தொடர்ந்து மேலும் பல நாடகங்களை நடத்தி வெற்றிபெற 'தமிழுயிர்' மனதார வாழ்த்துகிறது. தமிழரின் தொன்மைக் கலையும் முத்தமிழின் மூன்றாம் தமிழுமாகிய நாடகத்தைத் தொடர்ந்து பேணிவரும் பாலாவுக்கு ஒட்டுமொத்தத் தமிழர்களும் துணைநிற்க வேண்டும்; பாலாவைப் போற்றி ஊக்கப்படுத்த வேண்டும்.



  • ஆய்தன்: நாடகத் தமிழைக் காக்கும் பாலா தமது பெயரில் உள்ள 'எஸ்.டி' என்பதைத் தமிழாகவே எழுதி இயற்றமிழையும் காக்க வேண்டுகிறேன்.

சனி, 8 மார்ச், 2008

கலக்கப்போவது மக்குமண்ட ரம்பநாதா.!


தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாடத்திட்டத்தை அணியப்(தயார்)படுத்தும் கூட்டம் அண்மையில் நடைபெற்று உள்ளது. அதற்குத் தலைமையேற்ற முகமை அதிகாரி தம்முடைய தமிழ் எதிர்ப்புக் கொள்கையை மீண்டும் மிகவும் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார். தமிழுக்கு எதிராகவும் கிரந்தம், சமற்கிருதம், ஆங்கிலம் முதலான சொற்கள் தமிழில் கலப்பதற்கு ஆதரவாகவும் முன்பின் சிந்திக்காமல் உளறியிருக்கிறார்; வந்தவர்களை அறுஅறு என 'இரம்பமாக' அறுத்திருக்கிறார். தமிழ்ப் பாடத்திற்காக பணிசெய்ய அமர்த்தப்பெற்ற உயர் அதிகாரியான அவர் தமிழின் வளர்ச்சிக்கான செயலாக்கங்களைப் பற்றிதான் சிந்திக்க வேண்டுமே தவிர, தமிழைக் குலைக்கும் கொடுஞ்செயலைப் பற்றி எண்ணக்கூடாது. ஆழ்ந்த மொழி அறிவு, தமிழ் வரலாற்று அறிவு, மொழிபற்று என எதுவுமே இல்லாத மழுங்காண்டியான அந்த அதிகாரியின் உளறல்களை கேட்டு கூட்டத்தில் இருந்த அனைவரும் முகம் சுளித்துள்ளனர். சிலரோ, மிகத் துணிவாகத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து தமிழைத் தற்காத்துப் பேசியுள்ளனர். இப்படி கோணங்கித் தனமாக அந்த அதிகாரி நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஓர் அன்பர் தமிழுயிருக்கு விரிவான மின்னஞ்சல் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் அந்தப் பாடத்திட்ட அதிகாரியைக் கண்டித்து ஒரு பாடலும் எழுதி அதனைத் தமிழுயிரில் வெளியிட கேட்டிருந்தார். தமிழுணர்வு மிக்க அந்த அன்பரின் செயலைத் தமிழுயிர் பாராட்டுகிறது. இப்படி மற்ற மற்ற தமிழ் அன்பர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும், தமிழ்ப் பற்றாளர்களும் தங்கள் கண்முன் நடக்கும் தமிழுக்கு எதிரான கேடுகளையும் அதனைச் செய்கின்ற கேடர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டி 'போட்டுத் தாக்க' வேண்டும். 'கலக்கப் போவது யாரு' என்ற ஒரு திரைப்படப் பாடல் மெட்டில் இந்தப் பாடலைப் பாடிப்பார்க்கலாம். (குறிப்பு: அந்தத் தமிழன்பரின் நலன்கருதியும் அவருடைய வேண்கோளுக்கு இணங்கவும் அவருடைய பெயர் கமுக்கமாக (இரகசியமாக) வைக்கப்படுகிறது)

கலக்கப் போறவன் யாரு.. நீதான்
கெடுக்கப் போறவன் யாரு.. நீதான்
குழம்பிக் கிடப்பவன் யாரு.. நீதான்
கிரந்தப் பைத்தியம் யாரு.. நீதான்
உனக்குத் தானே கொடுக்க வேண்டும்
தேய்ஞ்ச செருப்படி!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட!

தமிழுக்கு நீதான் பணிசெய்ய வேண்டும்
தெரிஞ்சிக்கோடா டேய்!
தமிழைக் கெடுத்தால் செருப்படி விழுந்திடும்
புரிஞ்சிக்கோடா டேய்!
கிரந்தத்தைப் புகுத்தித் தமிழைக்
கெடுக்கவா பார்க்கிற...?
வடமொழி கலந்து தமிழை
முடக்கவா பார்க்கிற...?
நீ என்னா பெருசா.. அன்னைத் தமிழென்ன சிறுசா..
ஏண்ட இந்த வேலை.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட! (கலக்கப்)

தமிழச்சி பெத்த பிள்ளையா இருந்தா
தமிழைக் கெடுக்காது!
எவனோ பெத்த பிள்ளையா இருந்தா தமிழுக்கு உதவாது!
வடமொழி செய்த கேடுகள்
ஒன்றல்ல ஆயிரம்..
வடிகட்டி எடுத்த மடையன்கள்
உன்போல் ஆயிரம்..
வரலாறு படிடா.. அறிஞரை மதிடா..
ஏண்ட இந்த வேலை.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட!
நாதா.. ரம்பநாதா.. மக்குமண்ட! (கலக்கப்)

  • ஆய்தன்:தமிழ்ச்சுரணை இல்லாத தமிழ் அதிகாரிகளைக் கண்டால் மோதி மிதித்துவிட வேண்டும்! முகத்தில் உமிழ்ந்துவிட வேண்டும்!

தேர்தல் அலையில் அல்லாடும் தமிழ்ப்பள்ளிகள்

**பாயா பெசாரில் புதிய தமிழ்ப்பள்ளி
**அசாத்து தமிழ்ப்பள்ளிக்கு புதிய இடத்தில் நிலம்
**சிப்போட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட அடிக்கல்நாட்டு விழா
**சுங்கை சிப்புட்டில் புதிய தமிழ்ப்பள்ளி
**சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் நிலவரி 1 வெள்ளி மட்டுமே
**கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டித்தரப்படும்

இவையெல்லாம் கடந்த சில நாள்களாக நாளிதழ்களின் முகப்புகளை அலங்கரித்த செய்திகள். எதிர்வரும் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள் நாட்டில் நடைபெறவுள்ள 12ஆவது பொதுத் தேர்தல் சூடுபிடித்துள்ள காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் பற்றி மகிழ்ச்சியான செய்திகள் ஒவ்வொரு நாளும் வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் எண்ணிப்பார்க்காத அளவுக்குத் தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து பேரளவில் விவாதங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. அதற்கு ஏற்றாற்போல் அரசு தரப்பிலிருந்து எப்போதுமே இல்லாத அளவுக்கு அதிர்ச்சிக்குரிய அறிவிப்புகளும் உறுதிமொழிகளும் வந்த வண்ணமிருக்கின்றன.

தமிழ்ப்பள்ளிகள் மீதும் தமிழ்க்கல்வியின் மீதும் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வும் போராட்ட உணர்வும் தொடர வேண்டும். தமிழுக்கும்; தமிழ் இனத்திற்கும்; தமிழ்க் கலை, பண்பாடு, இலக்கியம், சமயம் ஆகிய அனைத்திற்கும் அடித்தளமாகவும் அரணாகவும் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை ஒவ்வொரு தமிழனும் காக்கவேண்டும்.

அதற்கு, தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய வரலாற்று அறிவும், தமிழ்ப்பள்ளிகள் தொடர்புடைய சட்டவரம்புகள் பற்றிய தெளிவும், தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி மீது நமக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய விவரமும், தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி ஆகிய இரண்டின் அவசியம் பற்றிய விளக்கமும் தமிழர்களுக்குக் கண்டிப்பாகத் தேவை. கீழே உள்ள இணையச் செய்திகளளைத் தமிழுயிர் அன்பர்கள் படித்துத் தெளியவும்.

http://www.malaysiaindru.com/?p=26
http://www.mozhi.net/TamilSchool/TamilSchool2.htm
http://www.mozhi.net/TamilSchoolArpattam/TamilSchool.htm
http://olaichuvadi.blogspot.com/2008/02/blog-post_5324.html
http://olaichuvadi.blogspot.com/2008/02/blog-post_27.html
http://vivegamm.blogspot.com/2008/01/blog-post_14.html

  • ஆய்தன்: தமிழ் நம் உயிர்! தமிழ்ப்பள்ளி நம் உடல்! உடம்பால் அழியின் உயிரால் அழிவர்!