வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 29 ஜனவரி, 2009

ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழக இளைஞர் தீக்குளிப்பு




இலங்கையில் தமிழருக்கு எதிராக நடக்கும் உச்சக்கட்ட போரில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழக இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.


உயிரை உறையவைக்கும் இந்தச் செய்தி உலகத் தமிழர் அனைவரையும் உலுக்கியுள்ளது; உணர்வுள்ள தமிழரின் உள்ளத்தைக் கலங்கடித்துள்ளது; ஒவ்வொரு தமிழனுக்கும் கண்ணைத் திறந்துள்ளது.

விரிவாகப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

1.ஈழத்தமிழர் படுகொலை: தமிழக இளைஞர் முத்துக்குமார் தீக்குளிப்பு

2.தீக்குளித்த முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்

3.இனமானத் தமிழன் முத்துக்குமார் பற்றி சில வரிகள்...

4.முத்துக்குமாரின் தீக்குளிப்பும் சில கருத்துகளும்

5.ஒரு பேனா தீக்குச்சியானது - இரங்கற்பா

6.கண்ணீரை அடக்க முடியவில்லையே தோழா..

7.ஈழத்திற்காகத் தீக்குளித்துத் தியாகியானான் ஒரு தமிழன்

8.உடன்பிறப்பே முத்துக்குமாரா.. நீ யார்?

ஈழத்தமிழன் உயிர்காக்க தமது இன்னுயிரை ஈகப்படுத்திக்கொண்ட இளைஞர் முத்துகுமாரின் ஆதன்(ஆத்மா) அமைதிபெற தமிழர் அனைவரும் இறைவனை இறைஞ்சுவோம்.

குறிப்பு:-ஈழத்தமிழர் சிக்கல் என்பது, உண்மை உணர்வுள்ள தமிழர்களின் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் உணர்ச்சிமயமான - உருக்கமான - உயிர்ப்போராட்ட சிக்கல்தான். இருந்தாலும்கூட, இதுபோன்ற முடிவுகளை எவரும் நாடவேண்டாம் என தமிழுயிர் அன்பொழுக வேண்டிக்கொள்கிறது.

@ஆய்தன்:-
ஈழத்தில் போர் ஓய்ந்து - தமிழர்
இன்னுயிர்கள் வாழட்டும்...!
எங்கிருக்கிறாய் இறைவா..? - தமிழர்
இன்னல்கள் தீரட்டும்...!!

திங்கள், 26 ஜனவரி, 2009

செயகாந்தனுக்குப் பத்மபூசன் விருதுங்கோ..!!



பார்ப்பனியத்திற்கு அடிபணிந்து சேவகம் செய்பவர்களுக்கு விருதுகள் அள்ளி வழங்கப்படும். அந்த வகையில் ஜெயகாந்தன் என்னும் நாய்க்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது. அதனை ஜெயகாந்தன் என்னும் நாய் நக்கி கொள்ளட்டும்.

ஜெயகாந்தனின் நாய் பேச்சினை இந்த விருது பெறும் நேரத்தில் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். 23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’

சமஸ்கிருதத்திற்கு வக்கலாத்து வாங்கிய ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ தமிழ் என்னும் நாய் மொழியில் நக்கி நக்கி ஏன் விருது வாங்கிக் கொண்டிருக்கிறாய்? சமஸ்கிருதத்தில் இலக்கியம் படைத்து வாங்க வேண்டியது தானே?அது மட்டும் அல்ல, வர்ணாசிரம வேறுபாடுகள் இருக்க வேண்டுமாம்.

ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்குமாம் ? ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ மலம் அள்ள வேண்டியது தானே? மலம் அள்ளி இருந்தால் இப்படி கூறியிருப்பாயா? இந்த நேரத்தில் சிலர் அந்த விருதுக்கே கொளரம் கிடைத்து விட்டதாக கூறுவார்கள்.

இந்தி நடிகர்கள், நடிகைகள் என எல்லோருக்கும் தான் கிடைத்துள்ளது இந்த அல்ப விருது. இந்த அல்ப விருது பார்ப்பனியத்திற்கு கூஜா தூக்குபவர்களுக்காக வழங்கப்படும் விருது தானே தவிர, திறமைக்கான விருது அல்ல.

பின் குறிப்பு :ஜெயகாந்தனை நாய் என எழுத வேண்டுமா, இது தரக் குறைவான சொல் அல்லவா என யோசித்தேன். ஆனால் தமிழறிஞர்களை நாயுடன் ஒப்பிட்ட ஜெயகாந்தனை நாய் என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதே. அவர் எழுதிய படைப்புகள் எனக்கு பிடிக்கும். ஆனால் அவரின் தனிப்பட்ட இயல்புகள் கொண்டாடக்கூடியதாக இல்லை.

ஜெயகாந்தனின் நாய் பேச்சின் பொழுது நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம்:-

அன்புள்ள அண்ணாச்சி, வணக்கம்.

‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக்குச் சொத்து’’ என்கிறீர்கள்.

எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?

@ஆய்தன்:-
தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே...!!!

வெள்ளி, 23 ஜனவரி, 2009

குகன் இறந்தது கொடுமையிலும் கொடுமை!


பூச்சோங்கைச் சேர்ந்த 22வயது இளைஞர் குகன், ஆடம்பர மகிழுந்து(கார்) திருட்டு தொடர்பில் சனவரி 15-இல் கைது செய்யப்பட்டார். சுபாங் செயா தைபான் காவல் நிலையத்தில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த குகன் 20-1-2009இல் மயங்கி விழுந்து இறந்து போனார்.

அவருடைய நுரையீரலில் தண்ணீர் இருந்ததால் குகன் இறந்ததாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், குகனின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருப்பதால், அவருடைய இறப்பில் சூதும் மருமமும் உள்ளது என அவருடைய குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குகனின் இறப்பு நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது; தமிழ் மக்கள் உள்பட அனைத்து மலேசியர்களின் உள்ளங்களும் எரிமலையாய் குமுறுகிறது.

குகனின் மரணம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசு படைத் தலைவர் மூசா அசான் கூறியுள்ளார். இது ஒரு கொலை என்று சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் வகைப்படுத்தியுள்ளார்.

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

ஐயத்தின் பேரில் புடிச்சிக்கிட்டு போறான்
ஐயகோ உயிரெடுத்துப் பிணமாக்கித் தாரான்
கேட்டாக்கா அதிகாரம் பண்ணுறான்
நேக்காத்தான் அறிக்கைய நீட்டுறான்

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

காவல்துறை எதுக்கு இருக்கு?
நீதித்துறை ஏண்டா இருக்கு?
தப்பு இருந்தா வழக்குப் போடு
தவறு இருந்தா தூக்குப் போடு
இதையெல்லாம் விட்டு புட்டு

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

இளம்வயது இரத்த மடா
இந்த நாட்டோட செல்வமடா
எண்ணிப்பார்க்க மூள வேணும்
இதயத்தில் கொஞ்சம் ஈரம் வேணும்
இதையெல்லாம் மறந்து புட்டு

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

அங்கே பாரு குலஉயிர எடுக்கிறான்
இங்கே பாரு தலமயிர புடுங்குறான்
கூப்பாடு நீ போட்டுகிட்டு இருக்கியே
குடும்பதில் நீ குள்ளநரியா வாழுறியே
இதையெல்லாம் புரிஞ்சிக்கிட்டோம்

என்னங்கடா கொடுமை யிது!
எளவு பிடித்த மண்ணா யிது?

இதையெல்லா தட்டிக் கேட்டா
இல்லாக்காட்டி வழக்குப் போட்டா
எங்க முதுகில் குதிரயேறுவ வந்து
வேண்டாம்பா... நமக்கேன் வம்பு...!!!

@ஆய்தன்:-
மனுசன மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே – இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே..!

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2,
கீழ்க்காணும் வகையில் நடைபெற உள்ளது.
நாள்:-25-1-2009 (ஞாயிறு)
நேரம்:-பிற்பகல் மணி 2.00 தொடக்கம்
இடம்:-தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா.
(பள்ளிவாசல் எதிர்ப்புறம் – ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அருகில்)

மேல்விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.

புதன், 21 ஜனவரி, 2009

மாண்புமிகு முதல்வருக்கு ஒரு கடிதம்...


இன்றைய சிக்கலான சூழலில் தமிழுணர்வோடு மின்னஞ்சல்தான் எழுத முடிகிறது. தமிழுணர்வு என்பது கையாலாகத்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டோ? என்று கூட தோன்றுகிறது.

தமிழன் யார்? தமிழனின் பழமை / பெருமை என்ன? இதற்கு முன் நடந்த பிரச்சினைகள் என்ன? நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்ன செய்யவில்லை? மற்றவர்கள் என்ன சாதித்தார்கள்? என்ன துரோகம் செய்தார்கள்? என்றெல்லாம் பட்டியலிட்டு காட்டி ஒருவரை ஒருவர் விமர்சித்து நம் துயரை மேலும் துயராக்க விரும்பவில்லை.

அல்லது பட்டியலிடுவதற்கு எனக்கு போதிய அறிவோ, என்னிடம் தகவலோ இல்லை என்று கூட நினைத்து கொள்ளலாம்.

ஆனால், “ இந்திய வல்லாதிக்கம் திட்டமிட்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தி விட்டது, கோரிக்கைகளை உதாசினப்படுத்திவிட்டது” என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்திருக்கிறான். நீங்களும் உங்களுடைய “ஏமாற்றம்” என்ற ஒற்றைச்சொல்லில் அதை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

எம்மை பொருத்தவரை போராளிகளும் தமிழர்களே! அவர்கள் போராளிகளாக தூண்டிய சிங்கள இனவெறிதான் தமிழின நீதிமன்றத்தில் குற்றவாளி.

இத்தனை ஆண்டுகாலமாக கொடுமைகளை இழைத்துவிட்டு, இப்பொழுது உரிமைக்கு போராட வந்தவர்களையும் அழிப்பது என்பது சிங்கள இனவெறியின் வெற்றிதானே தவிர வேறில்லை.

இதற்கு இந்திய அரசு துணைபோவதுஎன்பது தமிழர்களை இளித்தவாயர்கள் என்று கருதுவதுதானேயன்றி வேறென்ன இருக்க முடியும்?

தமிழர்கள் இந்திய/பார்ப்பன வல்லாதிக்கத்திற்குக் கட்டுபட்டு மொழியை, பண்பாட்டை தன்னடையாளத்தை இழந்தது போதாதா? உயிரையும் இழக்க வேண்டுமா,என்ன?

ஈழத்தமிழன் என் சகோதரன்! அதை எத்தனை வல்லாதிக்கம் வந்தாலும் மறைத்துவிட முடியாது. எத்தனை பார்ப்பன வந்தேறி கூட்டம் அறிக்கை விட்டாலும் அழிக்க இயலாது. இத்தனை வலிதோய்ந்த சொறகளுக்குள்ளும் இருப்பது கீழுள்ளவைதான்...

“ஈழத்தமிழனுக்கு செய்யும் துரோகம் என்பது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்யும் துரோகம், அவர்கள்தான் தமிழின் பெருமை, தமிழை உலகுக்கு எடுத்து சொன்னவர்கள், என்னை பொருத்தவரை இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமைப்பட்டதில்லை, ஆனால் எதிர்க்கவில்லை. ஆனால், இது தொடருமானால் அதுவும் நிகழ வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறியாதது அல்ல.

இது என்னுடைய சொந்த குரல் மட்டுமல்ல உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களின் கண்ணில் வழியும் கண்ணீரில் உள்ளது, சொற்களாக வெளிப்பட்டுவிடாமல் பாதுகாப்பது உங்கள் கடமை.

திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடும் பொழுது சொன்ன காரணங்கள் தீர்க்கபடாமல் இருப்பதாக கூறினார். ஆனால், இன்றைய நிலையில் காரணங்கள் கூடிக்கொண்டே இருக்கின்றன துரோக பட்டியலில்”

இறுதியாக ஒன்றே ஒன்று,
“நீங்கள் தமிழர்களின் முதல்வர்! இந்திய துணைக்கண்டத்தில் ஏதோ ஒரு பகுதியை நிர்வகிக்கும் நிர்வாகி அல்ல. தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.”

  • நன்றி:-மகிழ்நன்
@ஆய்தன்:-

தமிழாய்ந்த தமிழன் தமிழ்நாட்டின் தலைவராக இருந்தும்; தமிழன் ஆதரவின்றி அல்லல்படுவது சரியா? இது முறையா?

திங்கள், 19 ஜனவரி, 2009

ஈழப் போர்முனைக்கு ஒரு கடிதம்


களத்தில் நிற்கும்...

எனது அன்புள்ள அண்ணா அக்காக்களே !

உங்களின் உடன்பிறவா சகோதரி எழுதிக்கொள்வது......

என்னுடைய முகத்தை நீங்கள் அறியாத போதிலும் என்னுடைய உள்ளத்தை நீங்கள் அறிய நான் விரும்புகிறேன்.

நான் ஈழத்தில் பிறந்தவள் அல்ல. என்னுடைய முன்னோர்கள் ஈழத்தாய்க்கு பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கவில்லை.

ஆனால், தமிழர்களாகப் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தனர். தமிழர்களாய் பிறந்ததால் தங்களை எங்கள் உறவுகளாய் பெற்றிருக்கிறோம்.

தமிழினத்தின் வீரம் என்பது - அன்று சேர,சோழ,பாண்டியனின் வீரத்திலிருந்து - இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தங்களின் மாபெரும் வீரம் வரைக்கும் வந்து நிற்கிறது.

இந்தப் போராட்டம் ஈழத்தமிழர்களின் விடுதலையை மட்டும் தழுவி நிற்கவில்லை - இது ஒட்டுமொத்த தமிழர்களின் விடுதலையையும் தழுவி நிற்கிறது.

தமிழர்கள் என்ற வகையில், இன்று நாம் ஒரே சேனையில், ஒரே தலைமையின் கீழ் எழுச்சி கொண்டு நிற்கிறோம்.

பகைவனிடம் இருந்து தமிழர்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்ட களத்தில் நீங்கள் ஒரு புறமும் - உலக நாடுகள் எங்கள் உரிமைப் போரட்டத்தை அங்கிகரி என்ற உணர்வெழுச்சியுடன் உலகத் தமிழர்களாகிய நாங்கள் மறுபுறமுமாக தங்களுடன் கலந்து நிற்கிறோம்.

எங்களுடைய மக்கள் சுதந்திரம் பெற உலக தமிழர்கள் ஐக்கிய நாடு சபைக்கு எழுதாத மனுவும் அல்ல விடுக்காத கோரிக்கையும் அல்ல, ஏன் நடத்தாத கண்டன ஊர்வலமும் அல்ல.

எந்தெந்த நாடுகள் அவர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தி பின்பு தங்கள் நாட்டை பெற்றுக்கொண்டார்களோ - அந்தந்த நாடுகளிலிருந்தும் - அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் - அவர்களின் மொழியில் எமது உரிமை
போராட்டத்தை அங்கிகரிக்குமாறு - தொடர்ந்து குரலை எழுப்பி வருகிறோம்.

காலையில் எழும்பி நாங்கள் முழிப்பது சூரியனின் முகத்தில் அல்ல. கணினியின் முகத்தில் தான்.

ஏன் தெரியுமா ?

உலக தேசத்தில் எங்கு வாழ்ந்தாலும் எமது உயிர்நாடி உங்களைப் பற்றியே துடித்துக்கொண்டு இருக்கிறது.
உலகப்படை பலத்தை எல்லாம் திரட்டி - பகைவனவன் போர் மோகம் கொண்டு எங்களின் தமிழின போராட்டத்தை இந்தா அழித்துவிடுகிறேன் என்று போர் தொடுத்து நிற்கும் வேளையில் - எது வருகினும் தமிழின போராட்டத்தை அழித்துவிட முடியாது என்று நீங்கள் வீரமுடன் களத்தில் களமாடும் வேளை, எங்கள் இதயத்துடிப்பு உங்களைப்பற்றியே தினமும் துடித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், அண்ணா அக்கா...

எப்படி உறங்கிக் கொண்டிருப்பவர்களைப் போல் நடிப்பவர்களை ஒரு போதும் தட்டியெழுப்ப முடியாதோ அப்படி தான் ஈழத்தமிழர்களின் அவல நிலைமையை இந்த உலகத்திற்கு எடுத்துரைப்பதென்பதும் ஒரு கடினமான விடயமாகிவிட்டது.

ஆனால், எங்கள் மனம் தளர்ந்துபோகவில்லை. தீவிரவாதம் என்ற பெயரில் எங்கள் சுதந்திரப் போராட்டத்தை முடக்க அவர்கள் எண்ணினாலும், தடைகள் ஒரு போதும் உலக தமிழர்களின் சுதந்திர தாகத்தை அடக்கி விட முடியாது.

உலகத்தில் எந்த மூலையாக இருக்கட்டும் அங்கங்கே எங்களுடைய குரலை எழுப்பிக் கொண்டே இருப்போம் - ஒவ்வொரு நாளும் எழுப்பிக் கொண்டே இருப்போம்.

களத்தில் நிற்க்கும் உங்களை எனது உறவாய் பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

உங்களை என் இனத்தவர் என்று கூற நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.

களத்தில் நிற்பது நீங்கள் மட்டும் அல்ல உலக தமிழர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கையும் தான்.

அண்ணா அக்காக்களே...

நீங்கள் வீரமுடன் களத்தில் களமாடும் வேளை, எங்கள் இதயத்துடிப்பு உங்களைப்பற்றியே தினமும் துடித்துக்கொண்டிருக்கும் !

அன்புடன்,
உங்கள் உடன்பிறவா சகோதரி,
-கலைவாணி-

  • நன்றி:தமிழ்த்தேசியம்

@ஆய்தன்:-

எமது உடன்பிறப்பே கலைவாணி..

இந்த மடலில் ஒட்டுமொத்த உலகத்தமிழரின் மனத்தைப் படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் அம்மா..!

உலகத் தமிழரின் ஒவ்வொரு இரவும் ஈழத்தின் விடியலை எண்ணியே முடிகிறது; ஒவ்வொரு பகலும் ஈழத்தின் விடுதலையை எதிர்பார்த்து விடிகிறது.

வியாழன், 15 ஜனவரி, 2009

ஈழத்தமிழருக்குக் கை(எழுத்து) கொடுங்கள்


மாபெரும் கையெழுத்து வேட்டையில் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்': ஒன்றுதிரண்டு ஆதவளிக்குமாறு உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்
[செவ்வாய்க்கிழமை, 13 சனவரி 2009, 06:35 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]


அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி இல்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது.

தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் "புதினம்" செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இணையம் ஊடாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்படும் இக்கடிதம்

*தமிழர் தேசிய இனப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன்

*இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழினப் படுகொலையை நிறுத்தி

தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய அரச தலைவரையும், வெளியுறவுச் செயலரையும் கேட்டுக்கொள்கின்றது.

"உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால் ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்." என்று 'ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின்' ஊடகத் தொடர்பாளர் புதினத்திடம் தெரிவித்தார்.

"காலத்தின் மிக அவசரமான தேவை கருதி எல்லோரும் இதனை உடனடியாகச் செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட விரும்புவோர் கீழே உள்ள இணைப்பு (link) ஊடாக கையெழுத்திடும் பக்கத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' கேட்டுக்கொள்கின்றனர்.

கையெழுத்திடும் இணைப்பு:

http://www.tamilsforobama.com/sign/usersign.html

கடிதத்தின் தமிழாக்கம்:

மாண்புமிகு அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா அவர்களுக்கும் மற்றும் மரியாதைக்குரிய அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் இல்லாறி கிளிண்டன் அவர்களுக்கும்!

இக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கும் நாங்கள், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் -

இந்தப் போரானது தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வட-கிழக்கு பகுதி மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும் அழிப்வை ஏற்படுத்தி, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் இருந்து அவர்களை அகற்றி இனச்சுத்திகரிப்பச் செய்வதே இந்தப் போரின் நோக்கமாகும். முதலாம் நூற்றாண்டு காலத்தில், றோமன் இராச்சியத்தில் பலஸ்தீனத்திலிருந்து யூதர்களைத் துரத்தியது போன்ற பெரும் மக்கள் இடப் பெயர்வு அங்கு இப்போது நிகழ்கின்றது.

2. ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலேயே இந்த தமிழின அழிப்பு ஆரம்பித்து விட்டது. தமிழர் நிலங்களைப் பறித்து, அவற்றுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி, அவற்றில் சிங்களக் குற்றவாளிகளைக் குடியேற்றி, அவற்றில் இராணுவ முகாம்களை நிறுவுதல் என இந்த இனச் சுத்திகரிப்பு ஆரம்பித்தது. தொடர்ந்து, தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழர்களது பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டது. மேலும், கடந்த 25 வருட காலமாக தமிழர் படுகொலைகளும், கைதுகளும், காணாமல் போதலும், மட்டுமன்றி தமிழர் வாழ்விடங்கள் மீது வான், தரை, மற்றும் கடல் வழியான தொடர்ச்சியான குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

3. சிறிலங்கா அரசாங்கமானது புத்த மதத்தை நாட்டின் அரச மதமாக்கி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை குண்டு வீசி அழித்து விட்டு, பின்னர் அந்த இடங்களில் புத்த விகாரைகளைக் கட்டுகின்றது.

4. அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து, சமரச உடன்பாடுகளையும் கிழித்தெறிந்த சிறிலங்கா அரசாங்கங்கள், இப்படியான முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளையும் போடுகின்றன.

5. தமிழ் மக்களுக்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியதோடு, சிறிலங்கா அரசாங்கமானது, அந்த நிறுவனங்களை நாட்டை விட்டும் துரத்தியது. சில சந்தர்ப்பங்களில், அவர்களைக் கொலைகளும் செய்துள்ளது.

இந்த இனப்படுகொலைப் போரை நிறுத்துவதற்கு, புதிய ஒபாமா அரசாங்கம் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை எடுக்குமென்றும், தமிழர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

எங்களது இந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்தமைக்கு எமது நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

நன்றி:-

http://www.tamilsforobama.com/sign/usersign.html

@ஆய்தன்:-

இப்பதிவிடும் நேரம் வரை மலேசியாவிலிருந்து கையொப்பம் இட்டவர்கள் 994 பேர்கள் அதாவது 1.28% மட்டுமே! அதேவேளையில், கனடா முதலிடத்தில் 17936(22.02%) பேர், இங்கிலாந்து 2ஆம் இடம் 12055(15.47%), இந்தியா 3ஆம் இடம் 11221(14.4%) என கையெழுத்திட்டுள்ளனர். மலேசியா 13ஆவது இடத்தில் உள்ளது. நம்மைவிட குறைவான தமிழ்மக்கள் வாழும் சிங்கப்பூர் 12ஆவது இடத்தில் உள்ளது. மலேசியத் தமிழர்களே, நமது இன வேர்களை - நமது தொப்புள்கொடி உறவுகளை - நமது தமிழ் உடன்பிறப்புகளைக் காப்பதற்கு இந்த உதவியையாவது உடனே செய்யுங்கள். தமிழினம் நம் கண் முன்னாலேயே அழிவதை உடனே தடுப்பதற்குக் கை(எழுத்து) கொடுங்கள்.

செவ்வாய், 13 ஜனவரி, 2009

தமிழ்ப் புத்தாண்டே தமிழீழம் கொடு!

ஆங்கிலம் 14.1.2009, சுறவம்(தை) 1ஆம் நாள் திருவள்ளுவராண்டு 2040 பிறக்கிறது. அந்தத் தமிழ்ப் புத்தாண்டு நன்நாளை வரவேற்று இந்தப் பதிவு....


தமிழ்ப் புத்தாண்டே
தமிழ்ப் புத்தாண்டே – 2040
திருவள்ளுவர் தொடராண்டே...

எங்களுக்குப் புத்தாண்டில்
என்ன கொண்டு வருகிறாய்?
எந்தமிழர்க்குப் புத்தாண்டில்
என்ன தரப் போகிறாய்?

நலமான உடல் வேண்டாம்
நலிவற்ற உள்ளம் வேண்டாம்
நாடுகேட்டுப் போராடும் – ஈழத்
தமிழன் மண்ணை மீட்டுக்கொடு!

வளமான வாழ்வு வேண்டாம்
வேளைக்கு உணவு வேண்டாம்
வீடிழந்து வாடுகின்ற – ஈழத்
தமிழன் வாழ்வை திருப்பிக்கொடு!

கைநிறைய காசு வேண்டாம்
காலடியில் கம்பளம் வேண்டாம்
காட்டுக்குள் சிறைபட்ட – ஈழத்
தமிழு டன்பிறப்பை விடுதலையிடு!

காதுக்கினிய கவிதை வேண்டாம்
கண்ணுக்கினிய கனவு வேண்டாம்
காலத்தைத் தொலைத்துநிற்கும் – ஈழப்
பிஞ்சுகள் துயரை ஆற்றிவிடு!

சூரியப் பொங்கல் வேண்டாம்
சுவைகூட்டும் செந்தேன் வேண்டாம்
சோர்வின்றி படைநடத்தும் – ஈழப்
போராளிக்(கு) இறவா நிலைகொடு!

இத்தனையும் கேட்கின்றோம் எதற்காக?
ஈழத்தமிழ் மண்ணொன்றே - உலகத்
தமிழர்க்குக் கதியாகும்; அதற்காக!
தமிழீழம் மலர்வதொன்றே – உலகத்
தமிழர்க்கு விடிவாகும்; அதற்காக!




  • @ஆய்தன்

வெள்ளி, 9 ஜனவரி, 2009

தமிழ் நாள்காட்டி; மலேசியத்தில் சாதனை

  • தமிழ்க்கூறு நல்லுலகின் முதல் தனித்தமிழ் நாள்காட்டி.
  • மக்கள் தொலைக்காட்சியின் பாராட்டைப் பெற்ற நாள்காட்டி.
  • தமிழுக்குப் பெருமை சேர்க்கும் உலகின் ஒரே நாள்காட்டி.
  • மலேசியத்தில் உருவாக்கப்பட்ட உலகம் வியக்கும் நாள்காட்டி.
  • தமிழரின் வானியல் அறிவை மீட்டெடுக்கும் புரட்சி நாள்காட்டி.
  • மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் உருவாக்கிய சாதனை நாள்காட்டி

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட தமிழ் நாள்காட்டி 2009 எமது மலேசியத் திருநாட்டில் இப்போது மூன்றாவது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகில் இதுவொரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

தமிழ் நாள்காட்டி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், வரும் தைத்திங்கள் முதல் நாளாகிய (ஆங்கிலம் 14.1.2009) திருவள்ளுவர் ஆண்டு 2040 தமிழ்ப்புத்தாண்டு நாளை முதலாகக் கொண்டு இந்த நாள்காட்டி தொடங்குகிறது.

இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழிலும் தமிழ் எண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இராசி, நட்சத்திரம், திதி ஆகியன தனித்தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் சோதிடக் குறிப்புகளும் உள்ளன. 30க்கும் மேற்பட்ட தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்களின் சிறப்பு நாட்களும், குரு பூசைகளும் உருவப்படங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது ஆங்கில நாள்காட்டியையும் உள்ளடக்கி உள்ளது.

வள்ளுவரையும் வள்ளலாரையும் முகப்புப் படமாகக் கொண்டு முழு வண்ணத்தில் மிகத்தரமாக வெளிவந்துள்ள இந்த நாள்காட்டியின் விலை ஐந்து வெள்ளி மட்டுமே. (விரிவான செய்தி)

@ஆய்தன்:-

ஆண்டு; தமிழர் ஆண்டு... திரு
வள்ளுவர் பெயரைப் பூண்டு
யாண்டும் பரவும் ஆண்டு... இன்(று)
எழுந்த துணர்வு மூண்டு! -(தரங்கைப் பன்னீர்செல்வம்)

புதன், 7 ஜனவரி, 2009

மெல்லத் தமிழ்ப்பள்ளிகள் இனி எழும்!

2009 கல்வியாண்டு தொடங்கிவிட்டது. தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் இந்தக் கல்வியாண்டு மிகச் சிறப்பாகவே தொடங்கியுள்ளது எனலாம். காரணம், தமிழ்ப்பள்ளிகளில் பதிந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2008இல் பதினெட்டாயிரம் (18,000) மாணவர்கள் மட்டுமே முதலாம் வகுப்புக்குப் பதிந்தனர். ஆனால், இவ்வாண்டில் ஏறக்குறைய இருபதாயிரம் (20,000) மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பதிவுசெய்துள்ளனர். இதன்வழி தமிழ்ப்பள்ளிகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை 125,000 (ஒரு இலக்கத்து இருபத்து ஐயாயிரம்) வரையில் உயரக்கூடும்.

இது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்; தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் பெரும் எழுச்சியுடன் வளர்ந்து வருகின்றன என்பதற்குப் சான்றுபகரும் செய்தியாகும்.

மேலும், இவ்வாண்டில் புதிதாக 1522 தற்காலிக ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*நாட்டின் அரசியல் சூழ்நிலை மாற்றம்

*தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு

*தமிழ்ப்பள்ளிகளின் கல்வித்தர உயர்வு

முதலானவை இவ்வாண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

உண்மையில், தமிழ் மக்களின் முதல் தேர்வாகத் தமிழ்ப்பள்ளிகள் அமைந்திட வேண்டும். தமிழர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்குத்தான் அனுப்பவேண்டும் என்பதில் குறியாக இருக்க வேண்டும்.


ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது? ஏறக்குறைய 90,000 தமிழ்(இந்திய)க் குழந்தைகள் வேற்றுமொழிப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது சங்கடத்திற்குரிய உண்மையாகும்.

இந்த நிலைமை வெகு விரைவில் மாற வேண்டும் – மாற்றப்பட வேண்டும்.

கட்டடம் சரியில்லை – வசதிகள் இல்லை - திடல் இல்லை - போக்குவரத்து இல்லை - ஆசிரியர்கள் சரியில்லை - தலைமையாசிரியர் சரியில்லை என்று நொண்டிச் சாக்குகளைச் சொல்லிச் சொல்லித் தமிழ்ப்பள்ளிகளைத் தட்டிக்கழிக்கும் எமது மக்கள் இனியும் தாமதியாமல் சிந்திக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழர்(இந்தியர்)கள் தமிழ்ப்பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க முன்வந்தால்.....

*தமிழ்ப்பள்ளி கட்டடங்களைப் புதிதாகக் கட்டிவிடலாம் அல்லது அரசாங்கத்தைக் கட்டச் சொல்லி வற்புறுத்த முடியும்.

*இல்லாத வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திவிட முடியும். (இப்போதுகூட அனைத்து வசதிகளையும் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை அரசாங்கத்தின் உதவி இல்லாமலே எமது தமிழ் மக்கள் சொந்தமாக உருவாக்கியுள்ளனர்.)

*தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் புதிய பள்ளிகளைக் கட்ட ஆவனசெய்ய முடியும்.

*சரியில்லாத தலைமையாசிரியர்களையும் ஆசிரியர்களையும் கண்டித்தோ அல்லது தேவையானால் தண்டித்தோ சீர்படுத்த முடியும்.

*நாட்டில் வானுயர்ந்து நிற்கும் தேசியப் பள்ளிகள், சீனப்பள்ளிகளுக்கு நிகராக எமது தமிழ்ப்பள்ளிகளையும் சீரும் சிறப்புமாக வளர்த்தெடுக்க முடியும்.

இத்தனையும் நடக்குமா என்றால் கண்டிப்பாக நடக்கும்!! எப்போது தெரியுமா?

நம்மோடு வாழும் மலாய்க்காரர் போல் - சீனர்கள் போல், நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்க் குழந்தைகளும் இந்தியக் குழந்தைகளும் ஒருவர் பாக்கியில்லாமல் எப்போது தமிழ்ப்பள்ளிக்குச் செல்கிறார்களோ அப்போது..!!

@ஆய்தன்:-

இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்

துன்பங்கள் நீங்கும் - நெஞ்சினில்

தூய்மை உண்டாகிடும்; வீரம் வரும்! (-பாரதிதாசனார்)

வெள்ளி, 2 ஜனவரி, 2009

தமிழில் காசோலை எழுத முடியும்

பொருளக் காசோலைகளைத் தமிழிலேயே எழுத முடியுமா?

முடியும் என்கிறார், திருவாளர் செபசுதியன் அவர்கள்.
அதன் விவரம் அறிய தொடர்ந்து படிக்கவும்.


கன்னித்தமிழில் காசோலை எழுதுவதற்கு அரசாங்கம் நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை நம்மவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக எம்.சி.ஐ.எசு சூரிக் காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த திருவாளர் செபசுதியன் தெரிவித்தார்.

நம்மிடையே பெரிய பெரிய வணிகர்கள் நிறைய பேர் உள்ளனர். பெரிய அளவிலே அவர்களின் பணம் வங்கிகளில் புரள்கிறது. இவர்கள் அனைவரும் தமிழிலேயே காசோலையை எழுதினால் பொருளகத்தில் நம்மவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இப்படி ஒரு அரிய வாய்ப்பை நாம் ஏன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று திருவாளர் செபசுதியன் நமது வணிகர்களைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்.

தமிழில் காசோலை எழுதுவதில் எந்தச் சிரமமும் இல்லை. ஒருவேளை வங்கியில் முடியாது என்று சொன்னால் உடனடியாக தேசியப் பொருளகத்தைத் (பேங்க் நெகாரா) தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தொடக்கத்தில் தமக்கும் இந்தச் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிவித்த அவர், இன்று எந்தவித தடங்கலும் இல்லாமல் மாதத்திற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான காசோலைகளைத் தமிழிலேயே எழுதி வருவதாகக் கூறினார்.

பெரும்பாலும் பலருக்கு இந்தத் தகவல் தெரியும். இருப்பினும் தெரியாதது போல இருக்கும் தன் நண்பர்கள் மேல் கோபத்தை வெளியிட்டார் அவர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று சிந்தித்துக் கொண்டிராமல், நமக்கு உள்ள இந்த அரிய வாய்ப்பை நாம் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

இது குறித்து உதவிகள் தேவைப்படுவோர் தம்மை நாடினால் முழு விளக்கம் அளிக்கவும் காத்திருப்பதாகவும் உடனே தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் திருவாளர் செபசுதியன் கேட்டுக்கொண்டார்.

வங்கியில் தமிழில் காசோலை எழுதும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்த அகப்பக்கத்திற்கு சென்று விவரம் அறியலாம்:- http://www.bnm.gov.my.infobank/

இது குறித்து மேல் விவரம் அறிய திருவாளர் செபசுதியன் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்:- 012-5291990

  • நன்றி: மக்கள் ஓசை 23.12.1008
@ஆய்தன்:-
தமிழிலேயே காசோலை எழுதிவரும் திரு.செபசுதியன் அவர்களின் தமிழ்ப்பற்றுக்கும் தமிழ் உணர்வுக்கும் தமிழுயிர் தலைவணங்குகிறது. அவரைப் போல் நாட்டில் உள்ள மற்ற வணிகர்கள், தமிழர்களின் பணத்தின் மீது மட்டுமே குறியாக இல்லாமல் தமிழைக் காப்பதிலும் வளர்ப்பதிலும் விழிப்பாக இருக்க வேண்டும். வாழும் காலத்தில் தமிழுக்கும் தமிழர்க்கும் இப்படி ஏதாவது நன்மை செய்யுங்கள் வணிகப் பெருமக்களே..!

தனக்கென்று வாழ்ந்தது போதும் - இனி

தமிழ்க்கென்று வாழ்தல் வேண்டும்..!

  • பி.கு:கேமரன் மலை திருவள்ளுவர் நன்னெறி மையம் பல ஆண்டுகளாகத் தமிழில் காசோலை எழுதிவரும் தகவலைத் தமிழன்பர் கரு.யோகா அவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார். இப்படி, தமிழில் காசோலை எழுதும் அன்பர்கள் இருந்தால் தமிழுயிருக்குத் தகவல் தெரிவிக்கவும். இதனால் பலர் பயனும் தன்னம்பிக்கையும் பெறுவர்.

வியாழன், 1 ஜனவரி, 2009

2009 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்


தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை அதிகம் நேசிக்கும் அடிமைகளுக்கும்

தமிழைத் தூக்கியெறிந்துவிட்டு ஆங்கிலத்திற்கு வெண்சாமரம் வீசும் அடிவருடிகளுக்கும்

தமிழில் பேசுவதைத் தாழ்வாக நினைத்து ஆங்கிலத்தில் பேசவே விருப்பப்படும் பேதைகளுக்கும்

தமிழ்ப் பண்பாட்டுக்கு வேட்டு வைத்துவிட்டு ஆங்கிலப் பண்பாட்டைக் கட்டியழும் கேடர்களுக்கும்

தமிழ்க்கல்வி வேண்டாமென்று உதறித்தள்ளிவிட்டு ஆங்கிலத்தின் காலை நக்கிப் பிழைக்கும் கயவர்களுக்கும்

தமிழின் பெயரால் பிழைத்துக் கொண்டே ஆங்கிலத்தை வாழவைக்கத் துடிக்கும் துரோகிகளுக்கும்

தமிழுக்குச் சாவுமணி அடித்துவிட்டு ஆங்கிலத்தை நீரூற்றி வளர்க்க அரும்பாடுபடும் அன்னாடங்காட்சிகளுக்கும்

தமிழைத் தமிழாக இருக்கவிடாமல் தமிழில் ஆங்கிலத்தைக் கலந்திட நினைக்கும் கபோதிகளுக்கும்

தமிழனாக வாழாமல் ஆங்கிலேயனாக வாழ்ந்துகொண்டிருக்கும் தண்டங்களுக்கும்

தமிழோடு வாழாமல் ஆங்கிலத்தோடு குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கும் முண்டங்களுக்கும்

"2009 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்"