வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 25 டிசம்பர், 2008

தமிழ்ப் பற்றாளர்களைப் பழிப்பது நியாயமா?

*தமிழில் அன்னிய மொழிகளைக் கலக்காதே என்று தமிழ்ப்பற்றாளர்கள் சொன்னால்.. உடனே தமிழ்ப் பண்டிதர்கள் என்று முத்திரைக் குத்துவது..!

*அச்சு - ஒலி ஒளி - மின்னியல் ஊடகங்களில் தமிழைச் சிதைப்பவர்களைத் தமிழ்ப்பற்றாளர்கள் கண்டித்தால்.. உடனே தமிழ் வெறியர்கள் என்று பறைசாற்றுவது..!

*அறிவியலும் கணிதமும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்ப்பற்றாளர்கள் குரல் கொடுத்தால்.. உடனே பிற்போக்குவாதிகள் என்று பகடி பண்ணிவது..!

*எங்கும் – எதிலும் – எப்போதும் நல்லதமிழே பயன்பட வேண்டும் என்று தமிழ்ப்பற்றாளர்கள் அறிவுரை கூறினால்.. உடனே குறுகிய மனப்பான்மை என்று மட்டம் தட்டுவது..!

இப்படியாக, தமிழை முன்னிறுத்தி சிந்திக்கும் தமிழ்ப்பற்றாளர்களை ஏளனமும் இழிவும் செய்வதையே சிலர் ஆயுள்கால பணியாகச் செய்துவருகின்றனர்.

இவர்கள் யாரென ஆராய்ந்து பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும்.

1.அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள்
2.அதிகார பலம் படைத்தவர்கள்
3.செல்வச் செழிப்பு கொண்டவர்கள்
4.பெரும் வணிகர்கள் - தொழில்முனைவர்கள்
5.சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள்
6.உயர்ப் பதவிகளில் இருப்பவர்கள்
7.ஆங்கில / மலாய் கல்விவழி முன்னேறியவர்கள்
8.தமிழர் அல்லாதவர்கள்
9.தமிழ் மொழியின உணவற்ற தமிழர்கள்
10.பிழைப்புக்காக மட்டும் தமிழைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்
11.ஏதேனும் ஒரு நயப்புக்காக நத்திப் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள்
12.தமிழின் மீது தாழ்வுமனப்பாண்மை கொண்டிருப்பவர்கள்

என இப்படிப்பட்டவர்கள்தாம் காலந்தோறும் காலந்தோறும் தமிழையும் தமிழரையும் தமிழ்ப் பற்றாளர்களையும் ஏளனம் செய்து வருகின்றனர் – இழிவுபடுத்தி வருகின்றனர்.

இவர்களைப் பொறுத்தவரையில் தமிழ் – தமிழர் பற்றி பேசுபவர்கள் வெறியர்கள்; தீவிரவாதிகள்; பிற்போக்குவாதிகள்; பழமைவாதிகள்; பிழைக்கத் தெரியாவர்கள்; காலத்திற்கேற்ப சிந்திக்காதவர்கள் என்றுதான் ஆழமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மொழி - இனத்துக்காகப் போராடுவதும் குரல்கொடுப்பதும் குறுகிய எண்ணம் என்று நம்பியும் மற்றவரை நம்பவைத்தும் வருகின்றனர்.

மேலே அடுக்கிச் சொல்லப்பட்ட அத்தனை பேரையும் ஒரு கேள்வி கேட்க வேண்டும்! அதற்குமுன் பின்வரும் செய்தியைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்!!

"அறிவியல், கணிதம் ஆகிய இரு பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கத்தின் மீது நீதிமன்ற வழக்கு போடுவோம். எதிர்வரும் திசம்பர் 31க்குள் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்" என்று காபேனா (GAPENA) எனப்படும் மலாய் எழுத்தாளர் கூட்டமைப்பு கடந்த 24.12.2008இல் அறிவித்துள்ளது.

(மேல்விவரம் காண கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும்)

தமிழ்ப்பற்றாளர்களை மொழி வெறியர்கள் – தீவிரவாதிகள் – பழமைவாதிகள் – குறுகிய மனப்பான்மையர் என மட்டம் தட்டுகின்றவர்களை நாம் கேட்க விரும்பும் கேள்வி..!

மலாய்மொழியைக் காக்க தற்போது துடித்து எழுந்திருக்கும் 'காபேனா' என்ன மலாய்மொழி வெறியர்கள் இயக்கமா?

மலாய்மொழியின் தூய்மையைப் பேண துடிகின்ற 'காபேனா' என்ன மலாய்மொழி தீவிரவாத இயக்கமா?

மலாய்மொழியைக் கல்வி மொழியாக்க அரசாங்கத்தைக் கோரும் 'காபேனா' மலாய் பண்டிதர் இயக்கமா?

அறிவியலையும் கணிதத்தையும் மலாயில் கற்பிக்காவிட்டால் வழக்கு போடுவோம் என அரசாங்கத்தையே மிரட்டும் 'காபேனா' பிற்போக்கு இயக்கமா?

ஆங்கிலமும் அன்னியமொழிகளும் கற்றுவிட்டு – கையில் கொஞ்சம் காசுபணம் சேர்த்துவிட்டு – அரசாங்கம் பிச்சையாகப் போட்ட அதிகாரத்தை வைத்துக்கொண்டு வாய்கிழிய தமிழ்ப்பற்றாளர்களைப் பற்றி பழித்தும் இழித்தும் பேசும் நம்மின மேதாவிகள் இதற்குப் பதில் சொல்ல முடியுமா?


தாய்மொழி என்பது ஒருவரின் பிறப்புரிமை

சொந்த மொழியைப் பற்றி சிந்திப்பதும் – சொந்த தாய்மொழியை வளர்ப்பதும் – சொந்தத் தாய்மொழியைக் காப்பதும் ஒவ்வொருவருக்கும் பிறப்புரிமை அல்லவா?

சொந்த மொழியைக் கற்க மாட்டாதவன் – சொந்த மொழியயைக் கற்பிக்க மாட்டாதவன் – சொந்த மொழியைக் காக்க மாட்டாதவன் நல்ல அறிவும் தெளிவும் பெற்றவனா?

ஆகவே, தமிழ் முப்பாட்டன் தொல்காப்பியன் தொடங்கி இன்றுள்ள கொள்ளுப்பேரன் தமிழ்ப்பற்றாளன் வரையில் தமிழைக் காத்து நிற்பவர் ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்.

வாழையடி வாழையென வந்த தமிழ்மரபினரான தமிழ்ப்பற்றாளர்களைக் குருட்டுத்தனமாக இனி எவரும் ஏளனம் பேச வேண்டாம். காரணம்,

அவனவன் வாயாலன்றிப் பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணாலன்றிப் பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியாலன்றிப் பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே!

@ஆய்தன்:-
BAHASA JIWA BANGSA (மொழியே இனத்தின் உயிர்நாடி)

செவ்வாய், 23 டிசம்பர், 2008

தமிழோடு உயர்க தமிழ் இளைஞர் மணிமன்றம்


கடந்த 21-12-2008இல், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 41ஆவது பேராளர் மாநாடு மிகச் சிறப்புற நடத்தேறியது. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஐந்தாவது தலைவராக இருந்த திரு.பொன்னையா பிரம்பன் பதவி விலகிய வேளையில், நெகிரி மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் திரு.முரளி புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மணிமன்றத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்டெடுத்தது, தமிழ் அலை சொற்போர் போட்டியை மாபெரும் அளவில் நடத்தியது, தமிழ்ப்பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பும் இயக்கத்தை முடுக்கிவிட்டது, நாடளாவிய நிலையில் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தை மீண்டும் எழுச்சியுற வைத்தது, இடைநிலைப்பள்ளி பாடநூலில் மலேசியத் தமிழர்கள் பற்றிய இழிவான சொற்களை நீக்க போராடியது முதலானவற்றை மணிமன்றத்தின் முன்னாள் தலைவர் பொன்னையாவின் சாதனைகளாகக் குறிப்பிடலாம். தமிழ்க் குமுகாய நலன்கருதி அவர் மேற்கொண்ட பணிகள் பாராட்டப்பட வேண்டியவை - போற்றப்படவேண்டியவை.

என்ன செய்யப் போகிறார் முரளி?

தற்போது, புதிதாகத் தேர்வு பெற்றிருக்கும் முரளி மணிமன்றத்தில் தொடக்கக்கால சாதனைகளைப் போல அல்லது முன்னாள் தலைவர் பொன்னையா போல தமிழ் இளைஞர்களுக்கும் – தமிழுக்கும் – தமிழர்க்கும் என்ன செய்யப் போகிறார் என்பது சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

திரு.முரளி தன்னுடைய தலைமைத்துவத்தில் மணிமன்றத்திற்குப் புதிய தோற்றத்தையும் புத்தெழுச்சியையும் ஏற்படுத்துவதோடு, "தமிழோடு உயர்வோம்" என்ற மணிமன்றத்தின் முழக்கத்தைச் செழிக்கச் செய்யவேண்டுமென தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் இளைஞர் மணிமன்றம் என்ற சத்திமிக்க பேரமைப்பு எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் – எவ்வித நயப்புக்கும் அடிமையாகாமல் – எந்த அரசியல்கட்சிக்கும் அடிவருடாமல் – எந்தவொரு தனிமனிதருக்கும் துதிபாடாமல் – எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ்சாமல் தமிழ் இளைஞர்களுக்காகவும் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் குரல்கொடுக்க வேண்டும் – பணியாற்ற வேண்டும்.

நாட்டில் நாளுக்குநாள் நலிந்துகொண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தையும் இளைஞர்களாக வளர்ந்துவரும் இடைநிலைப்பள்ளி மாணவர்களையும் முதல் இலக்காகக் கொண்டு சீறிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

நாட்டில் தமிழுக்கும் – தமிழ்ப்பள்ளிக்கும் – தமிழ்க்கல்விக்கும் மணிமன்றம் தொடர்ந்து அரணாக இருந்து செயல்பட வேண்டும்.

தமிழ் இளைஞர்களிடையே தமிழ் மொழியின உணர்வை ஊட்டி - தமிழின வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக் காட்டி – தமிழிய மரபுகளை விளக்கிச் சொல்லி தமிழ் இளைஞர்களை தமிழினத்தின் உயர்வுக்கு உதவுகின்ற 'மாந்த மூலதனமாக' உருவாக்கிட வேண்டும்.

மலேசியத்தில் தமிழ் இளைஞர் மணிமன்றம் தோன்றி ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சியும் மறுமலர்ச்சியும் மீண்டும் ஏற்பட வேண்டும். அதற்காக, புதியத் தலைவர் திரு.முரளி பல்லாற்றானும் பாடாற்றிட வேண்டும்.

நடந்துமுடிந்த பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஏட்டளவில் மட்டும் எழுதப்பட்டதாக இருத்துவிடக் கூடாது. அந்தத் தீர்மானங்கள் அனைத்தும் செயல்வடிவம் காண்பதற்கு அரயாது பாடுபட வேண்டும் என தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.

மேலே சொல்லப்பட்ட பல எதிர்ப்பார்ப்புகளோடு , தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் திருவாளர் முரளிக்குத் தமிழுயிர் மனமார்ந்த நல்வாழ்த்துகளை வழங்குகிறது.

@ஆய்தன்:-
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் (அதி:48 குறள்:471)

வெள்ளி, 19 டிசம்பர், 2008

ஓட்டம் 100 வகை:- வாங்க பார்க்கலாம்!

  • நாட்டின் முன்னணித் தமிழ்... மன்னிக்கவும் இந்திய தொலைக்காட்சி வண்ணவில் பெரும் பாடுபட்டு நடத்தும் மகா சிறப்பான இறுதிப் போட்டி நிகழ்ச்சி..

எங்கே:- சொகூரில்
எப்போது:- வரும் சனிக்கிழமை 20-12-2008
எத்தனை மணிக்கு:- எட்டு மணி முதல் விடிய விடிய கும்மாளம்

உங்கள் நெஞ்சங்களில் குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கும் உள்ளூர் ஓட்டக்காரன்களும் ஓட்டக்காரிகளும் கும்பல் கும்பலாக வந்து ஓடுவார்கள்..!

நிறைய பணம் செலவுபண்ணி தம்மா துண்டு துணியில் உடைகளைப் போட்டுக்கொண்டு கவர்ச்சியாக குதித்து குதித்து ஓட்டம் போடுவார்கள்..!

மேலும்.. இடுப்பில் தூக்கிவைத்து ஓடுவது..
முதுகில் உப்புமூட்டை தூக்கி ஓடுவது..
அதிலும் குறிப்பாக பெண்கள் மாணாவாரியாக காலைத்தூக்கி ஓடுவது போன்ற ஓட்டங்கள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன..!

இத்தனைக்கும் ஒரே நிகழ்ச்சி



அதுமட்டுமல்ல இரசிகர்களே..

உங்கள் மனங்களில் எச்சில் தடவி ஒட்டிக்கொண்டிருக்கும் உங்கள் உயிருக்கும் உயிரான அறிவிப்பாளர்கள்.. முத்தமிழுக்கு ஒப்பான முத்தான மூன்று அறிவிப்பாளர்கள்.. அவர்களைக் நேரடியாகக் கண்டு அவர்களோடு கும்மாளமும்.. இடையிடையே குத்தாட்டாமும் போட நல்லதோர் வாய்ப்பு..!

கேட்க.. கேட்க தெவிட்டாத அறிவிப்புகளும்.., சிரிக்கச் சிரிக்க சலிக்காத நகைச்சுவைகளும்.. கடிகளும்.. வெடிகளும்.. நிறைய உள்ளன..!

கூடவே.. இரசிகர்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து வைத்திருக்கும் 'மப்பு'லுவின் கொப்புறுவும் நிறைய உண்டு..!

இடையிடையில், மண்ணின் மைந்தர்களின்
கால்பகுதி தமிழும் முக்கால் பகுதி ஆங்கிலமும் கலந்த கலக்கல் இசையும்
உங்கள் செவிகளில் தேனாகப் பாயும்..!

இப்படி வரலாற்றுச் சிறப்புகுரிய ஒரே ஒற்றை நிகழ்ச்சி..


இதுவெல்லாம் போதாது என்று..
உங்களுக்காகவே ஒரு சிறப்பு விருந்தினர் வருகிறார்.
மலேசியாவில் திறமையுள்ள நடுவர்கள் யாருமே இல்லாத காரணத்தால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மாபெரும் திரைப்பட நடிகர்.. உங்களுக்காகவே வருகிறார்..!

இதையெல்லாம் தவற விடலாமா?

வாழ்க்கையில் இப்படிப்பட்ட கும்மாளமும் கூத்தடிப்பும் எவ்வளவு முக்கியம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே..!

உங்களுக்காவே..
உங்கள் மகிழ்ச்சிக்காகவே..
உங்கள் எதிர்கால முன்னேற்றத்தைக் கருதி..
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
"ஓட்டம் 100 வகை"

இறுதிப் போட்டிக்கு மறவாமல்.. தவறாமல் வாருங்கள்..!

உங்கள் குடும்பம் குட்டிகள்.. அக்கா தங்கை தம்பி எல்லாரையும் அழைத்து வாருங்கள்..! குடும்பத்தோடு.. கூட்டமாக சேர்ந்து... குத்தாட்டம் போடுவோம்..!

வர முடியாத இரசிகர்களே...
கவலையை விடுங்கள்! கண்ணீரைத் துடையுங்கள்!
உங்களுக்காகவே வண்ணவில் தொலக்காட்சியில்
நேரலையில் நிகழ்ச்சியைக் காட்டுவோம்..!

திடலில் நடக்கும் ஓட்டங்களையும்.. அறிவிப்பாளர்களின் கொட்டங்களையும்.. நிகழ்ச்சியைப் பார்க்கவரும் இரசிகர்களின் கொண்டாட்டங்களையும் மிக நெருக்கமாக.. எல்லாவற்றையும் பெரிசு பெரிசாகத் தொலைக்காட்சித் திரையில் காட்டுவோம்..!

நேரடியாக வர மறவாதீர்கள்..
தொலைக்காட்சியில் காண மறவாதீர்கள்..
ஆகா.. சிறந்த போட்டி நிகழ்ச்சி..


@ஆய்தன்:-
ஓடாதடா ஓடாதடா மனிதா – ரொம்ப
ஓட்டம் போட்டா ஓடஞ்சிடுவ மனிதா..!


தமிழில்தான் அறிவியல் கணிதம்:- ம.இ.கா முடிவு


"தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழிமொழியில்தான் கற்பிக்க வேண்டும்" மலேசியன் இந்தியன் காங்கிரசு (ம.இ.கா) நடுவண்(மத்திய) செயலவை முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

18-12-2008இல் ம.இ.கா தலைமையகத்தில் நடந்த நடுவண் செயலவை கூட்டத்தில் இந்த முடிவு காணப்பட்டதாக கூறிய அவர், கடந்த 16-12-2008இல் புத்திராசெயாவில் நடந்த அறிவியல் கணிதப் பாடம் மீதான வட்டமிசை மாநாட்டிலும் ம.இ.காவின் சார்பில் இதே முடிவுதான் வலியுறுத்தப்பட்டதாகவும் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளின் உயர் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆகியோருடன் கடந்த 5-12-2008இல் ம.இ.கா ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினர் "அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்கள்.

"தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு எது நன்மை தருகின்றதோ அதுவே எங்களின் முடிவு" என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலமொழி எதிர்காலத்திற்கு அவசியம் என்றாலும்கூட தமிழ்ப்பள்ளிகளின் தோற்றமும், அடையாளமும் பாதிக்கப்படக் கூடாது. தமிழ்ப்பள்ளி - தமிழ்மொழியின் எதிர்காலம் கருதிதான் அறிவியல் கணிதப் பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என ம.இ.கா. பரிந்துரைத்துள்ளது.

ம.இ.காவின் இந்த முடிவை மனிதவள அமைச்சரும் ம.இ.காவின் தலைமைச் செயலாளருமாகிய டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கல்வியமைச்சர் டத்தோ ‚ இசாமுடின் துன் உசேனிடமும் பின்னர் அமைச்சரவையிலும் ஒப்படைப்பார். இவ்வாறு, டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

ம.இ.காவின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் தமிழ்மொழியிலேயே கற்பிக்கப்படும் நிலைமை ஏற்படுமானால், அது டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் செய்யும் மாபெரும் கைமாறாக அமைவதோடு அவர்தம் புகழ் வரலாற்றில் கண்டிப்பாக இடம்பெறும்.

@ஆய்தன்:-
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல் (அதி:24 குறள்:233)

செவ்வாய், 16 டிசம்பர், 2008

அறிவியல், கணிதம் தமிழ்மொழியில் வேண்டும்


தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழ்மொழியிலேயே கற்பிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம், கல்வி சமூக நல ஆய்வு நிறுவனம் ஆகிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:-

மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ரெ.சு.முத்தையா அறிக்கை

மலாய் – சீன பள்ளிகளில் அவர்களின் தாய்மொழிகளில் பாடம் நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதுபோல, தமிழ்ப் பள்ளிகளிலும் தாய்மொழியில் கற்பிக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியில் கற்பிக்கப்படும் நேரம் குறைந்து வருவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழ்மொழிக்கு மாற்ற வேண்டும். தொடக்கப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே எந்தக் கல்வியையும் எளிதாக அறிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பர் என்பதை அரசு உணர வேண்டும்.

இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்குச் செவிசாய்த்து அவ்விரு பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்க வழிவிடவேண்டும்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத் தேசியத் தலைவர் பி.பொன்னையா அறிக்கை

அறிவியல் – கணிதப் பாடங்களைத் தாய்மொழியாம் தமிழிலேயே கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் உறுதியாக இருக்கிறது.

'தமிழோடு உயர்வோம்' என்பது மணிமன்றத்தின் மூலமந்திரமாகும். தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து நிலைபெறுவதற்குத் தாய்மொழிக் கற்றல் கற்பித்தல் மிக அவசியமாகும்.

ஒவ்வொரு மாணவனும் தனது தாய்மொழியில் அறியும் பாடங்களே பின்னர் அவனுக்கு விளங்கக்கூடிய வகையில் அமையும். நாட்டிலுள்ள அனைத்து இந்திய அமைப்புகளும் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழில் கறிபிக்க பேராதரவு வழங்க வேண்டும். அதோடு, அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டுசென்று அவ்விரு பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்கக் குரல்கொடுக்க வேண்டும்.

தமிழ்ப்பாட பயிற்றுமுறை தமிழ்ப்பள்ளியில் குறைந்து வருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்ப்பள்ளி என்பது பெயருக்கு மட்டும் இருக்குமே தவிர, அங்கே தமிழ்மொழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று பொன்னையா எச்சரித்துள்ளார்.

கல்வி சமூக நல ஆய்வு நிறுவனத் (EWRF) தலைவர் வழக்கறிஞர் பசுபதி அறிக்கை

'தமிழே தமிழனுக்கு உயிராம்; அந்தத் தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்' என்று கவிஞர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போது உண்மையாகிவிடும் போல் இருக்கிறது.

அரசாங்கமும் கல்வி அமைச்சும் காலம் தாழ்த்தாமல் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தாய்மொழியில் நடத்துவதற்குரிய ஏற்பாட்டை உடனே செய்ய வேண்டும். எந்தவொரு பாடத்தையும் தய்மொழியில் படித்தால்தான் அந்தச் சிறுவயதில் மாணவர்களுக்கு விளங்கும். அதை வேற்றுமொழியில் படிக்கவைத்து விளங்கச் செய்வது கடினமாகும்.

கல்வி அமைச்சு குறிப்பிட்ட சிலரின் கருத்தை மட்டும் கேட்டுக்கொண்டிராமல், நாடிலுள்ள தமிழ் சார்ந்த அமைப்புகளின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தமிழ்க்கல்வி தொடர்பான சிக்கல்கள் குறித்து தமிழ்க் கல்விமான்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசியல்வாதிகளின் கருத்துகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதுவொரு தாய்மொழிச் சிக்கல் என்பதால் அரசாங்கம் இந்தியச் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுக்க வேண்டும்.
  • (நன்றி:மக்கள் ஓசை 16.12.2008)
@ஆய்தன்:-
வாய்மொழி பலவும் வழித்துணை யாகலாம்
தாய்மொழி என்பது தடயம் அன்றோ!
காலணி தொலைந்தால் வேறணி வாங்கலாம்
கால்களை இழந்தால் முடந்தான் ஆகலாம்

சனி, 13 டிசம்பர், 2008

காசி ஆனந்தன் நறுக்குகள் - 2

"தமிழைத் தொடுவதும் என் உயிரைத் தொடுவதும் ஒன்றே" எனக் கூறியவர் தமிழ்த் தேசியப் பாவலர் காசி ஆனந்தன்.

தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த் தாயகம் – இவற்றின் வாழ்வும் வளமும்தான் இவருடைய ஆளுமையின் ஆதாரம் என்பதில் ஐயமில்லை.



1.மாடு

ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுகிறது...

கொம்பை
மறந்த
மாடு.


2.அறுவடை

திரைப்படச்
சுவரொட்டியைத்

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.


3.புரட்சி

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.

குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்!


4.விளம்பரம்

விளம்பரம்.

குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை...

தொலைக்காட்சியில்!


5. மந்தை

மேடை

"தமிழா..!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ"
என்றேன்.

கை
தட்டினான்!


6.கண்ணோட்டம்

செருப்பைப்
பார்க்கையில்

நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.

நான்
செய்தவனின்
கையைப்
பார்க்கிறேன்..!


@ஆய்தன்:-

நகரப்பெண்

ஒப்பனைப் பெட்டி
கைப்பேசி
மஞ்சள் பத்திரிகை
ஆணுறை

தோளில்
மாட்டிய
கைப்பையில்..!

வெள்ளி, 12 டிசம்பர், 2008

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு

இணையத் தமிழ் வாசகர்களுக்கோர் அறிவிப்பு!

எதிர்வரும் திசம்பர் 14-ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை), முதன்முறையாக மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு தலைநகரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.


இச்சந்திப்பின் விவரங்கள் பின்வருமாறு:-

நாள் : 14 திசம்பர் 2008(ஞாயிற்றுக் கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00
இடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல் (செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)
தொடர்புக்கு :விக்னேஸ்வரன் - 012 5578 257 / மூர்த்தி - 017 3581 555


பி.கு:- புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்களுக்கு அங்கு பயிற்சி வழங்கப்படும்.

தமிழ் வலைப்பதிவர்களும் விருப்பமுள்ளவர்களும் நண்பர்களோடு வந்து கலந்து கொண்டு பயன்பெறவும்.

@ஆய்தன்:-

முதன் முறையாக ஏற்பாடாகி இருக்கும் இந்தச் சந்திப்பு வெற்றிபெற மனமார்ந்த நல்வாழ்த்துகள் தெரிவிப்பதோடு எல்லாம் வல்ல இறைவனின் பேரருளையும் இறைஞ்சுகிறேன்.

ஆழமான கருத்துகள் பரிமாற்றம் ஆகட்டும்..!
ஆக்கமான ஏடல்கள் செயல்வடிவம் காணட்டும்..!

கலந்துகொள்ள முடியாத இக்காட்டான நிலையில் இருக்கிறேன். ஏற்பாட்டாளர்கள் தயவுகூர்ந்து பொறுத்தருள்க!!

புதன், 10 டிசம்பர், 2008

தமிழ் நாளிதழ்களின் கோமாளிக் கூத்து


மலேசியத்தில் தமிழ் – தமிழர் தொடர்பான செய்திகளை அல்லது சிக்கல்களை முன்படுத்தி பல்வேறு வலைப்பதிவுகளில் வரும் தகவல்களைத் தமிழுயிரில் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்பட்டது. அவ்வெண்ணத்தின் எதிரொளிப்புதான் 'அக்கம் பக்கம்' என்ற இந்தப் பகுதி. தமிழியம் தொடர்பான சிந்தனைக்குரிய பதிவுகள் இங்கே 'தொடுப்பாக' வழங்கப்படும். 'அக்கம் பக்கம்' இனி தொடராக அவ்வப்போது தமிழுயிரில் வரும். @(ஆய்தன்)

நூறுக்கு தொண்ணுற்று ஒன்பது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

குறிப்பாக தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள். மேடை, வானொலி, தொலைக்காட்சியில் பேசும் தமிழ் மொழி அறிஞர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பியவர்கள்.

இன்று தமிழ் நாளிதல்களில் கண்டன அறிக்கை விடும் பல தலைவர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பியவர்கள்.

மலேசியாவில் இந்திய ஆய்வியல் துறை உள்ள ஒரே பல்கலைகழகம் என்று பீத்தி கொள்ளும் பல்கலைகழக விரிவுரையளர்கள், பேராசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள்.

தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கடமை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் இளைஞர் மன்ற தலைவர்கள், இந்து சங்க தலைவர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள்.

தமிழ் பள்ளிகள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாத போது நம் நாட்டில் ஏன் தமிழ் பள்ளிகள் வேண்டும்???? (மேலும் படிக்க)

சனி, 6 டிசம்பர், 2008

சீனரைப் போல் தமிழன் சிந்தித்தால்...

மலேசியம் பல்லினம் வாழும் நாடு. அதில் மலாயர், சீனர், தமிழர்(இந்தியர்) மிகப்பெரிய இனங்களாவர். ஒவ்வொரு இனத்தாருக்கும் இந்த நாட்டில் தனிப்பட்ட அரசுரிமைகள் இருக்கின்றன.

அந்த அரசு உரிமைகளை முறையாகப் பெற்றுகொள்ள மலாய், சீன இனங்களைச் சார்ந்தவர்கள் மிகக் கவனமாகவும் – விழிப்பாகவும் – துணிவாகவும் – தொலைநோக்காகவும் இருந்து செயல்படுகின்றனர்.

மலாயரும், சீனரும் அவர்களின் தாய்மொழியை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் இனத்தை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் பள்ளிகளை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் எந்தவொரு உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

ஆனால், நமது தமிழர்கள் மட்டும்
தாய்மொழியாகட்டும்
தமிழ் இனமாகட்டும்
கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகளாகட்டும்
தமிழ்ப்பள்ளிகளாகட்டும்
தமிழ்க்கல்வியாகட்டும்
வேறு எந்த உரிமைகளாகட்டும்

இப்படி எதையுமே தற்காப்பது இல்லை! பேணுவது இல்லை!
இவை எதைப்பற்றியும் ஆழமாகவும் தொலைநோக்கோடும் சிந்திப்பதே இல்லை!
இவற்றின் தனித்தன்மைகளைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணுவதே இல்லை!

எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்போம்:-

1)அறிவியல் கணிதப் பாடங்களைத் தாய்மொழியிலும் கற்பிக்க மலாயரும் சீனரும் முடிவெடுத்து முனைப்புக் காட்டும் வேளையில் தமிழன் மட்டும் தாய்மொழிக் கல்வியைத் தட்டிக்கழிக்கிறான்.

2)மலாயரும், சீனரும் தங்களின் மொழிவழிப் பள்ளிகளுக்கே முதலிடம் கொடுக்கிறான். ஆனால், தமிழன் மட்டும் தமிழ்ப்பள்ளியைத் தட்டிக்கழித்து தேசியப்பள்ளியையும் சீனப்பள்ளியையும் நாடி ஓடுகிறான்.

3)மலாயரும் சீனரும் தங்களின் மரபுவழி கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பாடாற்றும் வேளையில், தமிழன் மட்டும் தன் சொந்தக் கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றாமல் இந்தியக் கலை, பண்பாட்டு, இலக்கியப் பணிகளில் ஈடுபாடு காட்டுகிறான்.

4)மலாயரும் சீனரும் தங்களது பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்திருப்பதற்கு மிகத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்படுகின்றனர். ஆனால், தமிழன் மட்டும் தன்னுடைய சொந்தத் தமிழ்ப்பள்ளியை இணைக்கலாமா? வாவாசான் பள்ளியாக மாற்றலாமா? அல்லது மூடியே விடலாமா? என்று சிந்திக்கிறான்.

5)மலாயரும் சீனரும் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகள்வழி தங்கள் தாய்மொழிக் கல்வியைப் பற்றி ஆழமான ஆய்வுகளை நடத்தி முறையாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுசொல்கின்றனர்; ஏற்ற தீர்வுகளையும் காண்கின்றனர். தமிழக்கோ அப்படி எந்த ஒரு அமைப்பும் இல்லை. அப்படியே எதாவது தமிழ் அமைப்பு ஆய்வு நடத்தி அறிவிப்பு செய்தாலோ மொழிவெறி - இனவெறி எனத் தமிழனே குற்றம் சாற்றி காட்டிக்கொடுப்பான்.

இப்படியாக,
தமிழனுக்கு மட்டும் ஏன் இப்படி இந்த இழிந்த குணம்?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி முட்டாள்தனம்?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தன்னம்பிக்கையின்மை?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தொலைநோகின்மை?

இந்த நாட்டில் – இனிவரும் காலத்தில் நமது தமிழ் மக்கள் நலமாகவும் நன்றாகவும் வாழ வேண்டுமானால், தமிழர்கள் சீனர்களைப் போல சிந்திக்க முற்பட வேண்டும்.

ஏனென்றால். சீனர்களும் தமிழர்களும் பூமிபுத்திராக்கள் அல்லர்; சீனர்களும் தமிழர்களும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற குடிமக்கள்.
அதனால், தமிழர்கள் பூமிபுத்திராக்களைப் போல சிந்திப்பதைவிட சீனர்களைப் போல சிந்திப்பதே நல்லது - நலமானது - பாதுகாப்பானது.

ஆகவே, சீனர்கள் தங்கள் குடியுரிமையையும் - அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள உரிமைகளையும் தற்காத்துக் கொள்ள எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள் என்று பார்த்தாவது தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!

குறிப்பாக, பின்வரும் உரிமைகளைப் பாதுகாக்க சீனர்கள் ஏன் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் – ஒன்றுபட்டு குரல் எழுப்புகிறார்கள் - உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள் என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!

1)சீனப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும். (தமிழ்ப்பள்ளி நிலைத்திருக்க வேண்டும் என்ற அக்கறை பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை)

2)மூடப்படும் சீனப்பள்ளிகளின் உரிமத்தைப்(லைசன்சு) பயன்படுத்தி வேரொரு இடத்தில் புதிய பள்ளியைத் திறக்க வேண்டும். (இதுவரை மூடப்பட்ட எந்த ஒரு தமிழ்ப்பள்ளி உரிமத்தையும் பயன்படுத்தி புதியத் தமிழ்ப்பள்ளி கட்டப்படவில்லை)

3)சீனப்பள்ளிகள் பகுதி உதவி பெறும் (பந்துவான் மோடால்) பள்ளிகளாகவே இருந்துவிட வேண்டும். (தமிழ்ப்பள்ளிகள் அரசுப்பள்ளிகளாக மாறவேண்டும் என்று தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்)

4)தொலைநோக்குப் பள்ளியைச் (வாவாசான் பள்ளி) சீனர்கள் வரவேற்கவில்லை. (தமிழ்ப்பள்ளிகள் தொலைநோக்குப் பள்ளிகளாக இணைக்கப்பட வேண்டும் என தமிழர்கள் ஆசைப்படுகிறார்கள்)

5)அறிவியல் – கணிதப் பாடங்களை ஆங்கிலம் சீனம் ஆகிய இருமொழிகளில் கற்பிக்கை சீனர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டனர். (தமிழர்கள் இன்னும் கூட்டம் போட்டுச் சிந்தியோ சிந்தி என்று மூளையைக் கசக்கிச் சிந்திக்கிறார்கள்)


6)சீனர்களின் மளிகைக் கடை தொடங்கி பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் சீனமொழிக்கு முதலிடம் தருகின்றனர். (தமிழர்கள் மலாயையும் ஆங்கிலத்தையும் மட்டுமே நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

7)எவ்வளவு வசதி வந்தாலும் எந்த ஒரு சீனரும் தன்னுடைய தாய்மொழியையும் பள்ளியையும் மட்டும் விட்டுக்கொடுப்பதே இல்லை. (தமிழனுக்குக் கொஞ்சம் காசுபணம் சேர்ந்துவிட்டால் அவன் முதலில் ஒதுக்கித் தள்ளுவது தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் தான்)

8)ஒரு துண்டு அறிக்கை எழுதுவதாக இருந்தாலும் சீனர் தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். (தமிழன் ஒரு மாநாடே நடத்தினாலும் மேடையில் ஒரு தமிழ் எழுத்தை எழுத மாட்டான்)

இப்படி இன்னும் பற்பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழனிடன் மண்டிக்கிடக்கும் இத்தனைக் கோளாறுகளுக்கும் குளறுபடிகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் என்ன?

இந்த வினாவுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பைத் தமிழுயிர் அன்பர்களிடம் விடுகின்றேன். தமிழுயிர் அன்பர்களே.. தவறாமல் மறுமொழி கூறுங்கள்.

@ஆய்தன்:-
தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு

செவ்வாய், 2 டிசம்பர், 2008

தாய்மொழிப் பள்ளியை மூடுங்கடா..!

மலேசியத்தில் தமிழ் - சீனப் பள்ளிகள் செயல்படுவதற்கு அரசியலமைப்பின்படி முழு உரிமை உள்ளது. இருப்பினும், டத்தோ முக்ரிசு மகாதீர் "தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும்" என்று 1-12-2008இல் பேசியுள்ளார். அதனைக் கண்டித்து..


அப்பன் மவனே
அப்பன் மவனே
அறிவிருக்கா உனக்கு?
வரலாற்றுத்
தெளிவிருக்கா உனக்கு?

தமிழ்ப்பள்ளியை மூடு
சீனப்பள்ளியை மூடு
கூப்பாடு போடலாமா?
மலிவான
விளம்பரத்தைத் தேடலாமா?

ஒற்றுமை வேண்டும்
ஒற்றுமை வேண்டும்
தொடக்கப் பள்ளியிலா?
இல்லையந்த
இடைநிலைப் பள்ளியிலா?

குட்டிப்போட்ட பூனையாய்
குட்டிப்போட்ட பூனையாய்
தொடக்கப்பள்ளியைச் சுற்றலாமா?
மூவினத்தின்
இடைநிலைப்பள்ளியை மறக்கலாமா?

*நீ வெற்றிபெற
நீ வெற்றிபெற
எங்களை அழிக்கலாமா?
உனக்கிந்த
ஈனப்புத்தி வரலாமா?

நாங்கள் பேசினால்
நாங்கள் பேசினால்
எல்லாமே இனவாதமா?
நீங்கள்
பேசினால் தேசியவாதமா?

இப்படிக் கண்டித்தால்
இப்படிக் கண்டித்தால்
எங்களை மிரட்டுவீர்கள்..!
இல்லாவிட்டால்
ஐ.எசு.ஏவைக் காட்டுவீர்கள்..!

ஏனிந்த பொல்லாப்பு.. நமக்கேனப்பா வம்பு..!

*(அம்னோ இளைஞர் பகுதி தலைவர் போட்டியில்)

கீழே உள்ள சுட்டிகளைத் தட்டி மலேசியாஇன்று செய்திகளைப் படிக்கவும்.

1.தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும்

2.தமிழ்ப்பள்ளிகள்: அப்பனைப் போல பிள்ளை

@ஆய்தன்:-
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.." என்று இந்நேரம் முக்ரிசின் தந்தை பாடிக்கொண்டிருப்பார்.