வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 30 செப்டம்பர், 2007

தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமா?

தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஏற்படுத்திவிட்ட புயல் அடங்குவதற்குள் "தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்ற மேலும் ஒரு விவாதம் தமிழ் நாளிதழ்களில் மிகச் சூடாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆளும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான ம.இ.காவும் பி.பி.பியும் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கி மாறிமாறி அனல்பறக்க அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்ப்பள்ளி என்ற தடத்திலிருந்து அரசியல் களத்திற்குப் போய்விட்ட இந்த விவகாரத்தைப் பற்றி தமிழுயிர் கருத்துரைக்க விரும்பவில்லை. ஆயினும், தமிழ்மொழியைத் தேசியப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கருத்தை ஒட்டி தமிழுயிர் தனது எண்ணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறது.

மலேசியாவில் தற்சமயம் 523 பள்ளிகள் இருப்பதாகவும் அவற்றில் ஓரிலக்கத்து ஐயாயிரத்து அறுநூற்றுப் பதினெட்டு (105,618) மாணவர்கள் பயின்று வருவதாகக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேவேளையில் தேசியப் பள்ளிகளில் பயிலும் தமிழ் அல்லது இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், தேசியப் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாகுவது தமிழ்மொழியின் நீடுநிலவலுக்கு நல்லது என்னுமொரு கருத்தும் நிலவுகிறது. இக்கருத்தில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது? தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதால் அது வளர்ந்து விடுமா? காலத்திற்கும் நிலைத்திருக்குமா? இதனால் தமிழ்க் குமுகாயத்திற்கு நன்மையா? தமிழ்ப் பண்பாட்டுக்கும் சமயத்திற்கும் ஆக்கமா? ஆகிய வினாக்களுக்கு ஆழமான ஆய்வுகளின் மூலமாக விடைகளைக் காணவேண்டும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வுக்குள், தமிழை ஏற்கனவே கட்டாயப் பாடமாக்கியுள்ள நமது அண்டை நாட்டையும் இணைத்துக்கொளவது மிக மிக அவசியமாகும். காரணம், தமிழைக் கட்டாயப் பாடமாக்கியதால் அந்நாட்டில் தமிழ்மொழி, இன, சமய, கலை, இலக்கிய, பண்பாட்டு, பாரம்பரிய, வரலாற்று அடையாளங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் பின்னடைவுகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இதன் தொடர்பில், நமக்கு நிறைவளிக்கும் முன்னேற்றங்கள் எதுவும் பெரிதாக அங்கே நடந்துவிடவில்லை என்பது வெள்ளிடைமலை. ஆக, அதுபோன்றதொரு நிலைமை நாளை நம்நாட்டிலும் நிகழ வேண்டுமா என்பதைத் "தமிழைக் காட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்று போராடும் அன்பர்கள் தயவுகூர்ந்து சிந்திக்க வேண்டும்.

தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் எண்ணம் கல்வி அமைச்சுக்கே இல்லாதபோது நம்மில் சிலர் ஏன் அதற்குச் சப்பைக்கட்டு கட்ட வேண்டும்? இப்படியொரு திட்டம் நிகழுமானால் அது நிச்சயமாகத் தமிழைக் கருணைக் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். தமிழைச் சுவடு தெரியாமல் அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் தொலை நோக்குத் திட்டத்திற்கு ஒப்பானதாகும். தமிழ் வரலாற்றில் குமரிக்கண்டத் தமிழ் அழிவுக்குப் பின்னர் நடைபெறும் மிக பெரிதான தமிழ் அழிவுக்கு ஒப்பானதாகும்.

தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதை விரும்பும் அன்பர்கள் தயவுகூர்ந்து கீழ்க்காணும் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தமிழுயிர் தாழ்மையுடன் வேண்டுகிறது.

1.தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையும். 2.மாணவர்கள் குறைந்தால் இயல்பாகவே தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும். 3.இப்போது இருக்கும் 523 தமிழ்ப்பள்ளிகள் படிப்படியாகக் குறைந்து ஒருகாலக் கட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பள்ளிகள் மட்டுமே மிஞ்சும். 4.தலைமையாசிரியர் என்ற துறைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழர் அல்லது இந்தியரின் எண்ணிக்கை படிப்படியாகக் கணிசமாகக் குறையும். 5.தமிழ்ப்பள்ளிக் கண்காணிப்பாளர், மொழி அதிகாரி, உதவி இயக்குநர் முதலான உயர்ப்பொறுப்புகள் காணாமல் போகும். 6.தமிழ்மொழி கலைத்திட்ட மேம்பாட்டு மையம், தேர்வு வாரியம், பாடநூல் பிரிவு, ஆய்நர் பிரிவு முதலானவற்றில் உள்ள தமிழ்மொழிக்குரிய பிரிவுகளும் உயர் பொறுப்புகளும் இல்லாமல் போகும். 7.ஆசிரியர் பயிலகம், பல்கலைக்கழகம் முதலிய உயர்க்கல்விக் கழகங்களில் தமிழைப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழ்ப் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் காலப்போக்கில் குறையும். 8.ஆசிரியர் பயிலகம், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் விரிவுரைஞர், பேராசிரியர், இணைப்பேராசிரியர் முதலான பொறுப்புகளும் தமிழின் பெயரால் இயங்கும் உயர்ப்பதவிக்கான இருக்கைகளும் காணாமல் போகும். 9.தற்போது தமிழ்மொழியில் கற்பிக்கப்படும் வட்டாரக் கல்வி, நன்னெறிக் கல்வி, வாழ்வியல் திறன், உடற்கல்வி, நலக்கல்வி, குடிமையும் குடியுரிமைக் கல்வியும், இசைக்கல்வி, கலைக்கல்வி முதலான பாடங்களும் பாடநூல்களும் இல்லாது போய்விடும். 10.தமிழ்ப் பள்ளிகளுக்கான மேற்கண்ட பாடநூல்களை எழுதும் அதிகாரிகளுக்கு வேலை இல்லாமல் போகும்; அப்பாடநூல்களை ஆச்சிடும் பல தமிழ் நிறுவனங்களும் பதிப்பகங்களும் முடங்கிப்போகும். 11.தமிழ்ப்பள்ளிகள் குமுகாய பண்பாட்டு நடுவங்களாகச் செயல்படும் நிலை கெட்டுப் போகும். 12.தேவார வகுப்பு, சமய வகுப்பு, திருக்குறள் வகுப்பு, கலைமகள் வழிபாடு, பொங்கல் விழா, தேர்வுக்கால சிறப்பு பூசை, கல்வி யாத்திரை முதலான சமயப் பணிகள் ஆற்றி ஆன்மிக வளர்ச்சிக்கும் வித்திடும் தமிழ்ப்பள்ளிகளின் அரும்பணிகள் அழிந்துபடும். 13.தமிழ் மக்களே முழுவதுமாக ஆட்சி செய்யும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி நிருவாக வாரியங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள் ஆகியவை பூண்டோடு காணாமல் போய்விடும். 14.தமிழ்பள்ளி மாணவர்களுக்காகச் சில சிறப்பான கல்வித் திட்டங்களை மேற்கொண்டுவரும் இந்தியர் அரசியல் கட்சிகள், தமிழர்/இந்தியர் சார்ந்த அரசு சார்பற்ற இயக்கங்கள், பொது இயக்கங்கள் ஆகிய தரப்புகளின் பங்களிப்பும் பணிகளும் முடங்கிப் போகும். 15.கபடி, சிலம்பம் முதலான தமிழ் விளையாட்டுகளைப் பேணிக்காத்துவரும் சில தமிழ்ப்பள்ளிகள் இல்லாமல் போகும்; தமிழ் விளையாட்டுகள் மறைந்துபோகும். 16.தமிழ்மொழி சார்ந்து நடைபெறும் மொழிப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள், திருமுறை ஓதும் போட்டிகள், மாணவர்த் திறன் போட்டிகள் முதலானவற்றின் தளங்கள் தகர்ந்துபோகும். 17.தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், தேவாரம், திருவாசம் முதலிய இன்னும்பல அருமை நூல்களின் அடிபடையில் இன்று தமிழ்ப்பள்ளியில் இயங்கும் தமிழ்மொழி காணாமல் போய் குமுகவியல் மொழி (social language) ஆட்சி பெறும். இதனால், தமிழின் தரம் குறைந்துபோய்; உண்மை அடையாளம் மாறிப்போய்; இறுதியில் அழிந்துபடும். 18.தமிழ்மொழியில் ஏற்படும் சிதைவும் மாற்றங்களும் தமிழ் இனத்தின் அடையாளத்தை உருமாற்றிவிடும்; கலை பண்பாட்டை உருமாற்றிவிடும். இதற்கு நம்மோடு நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் உடன்பிறப்புகளான 'மலாக்கா செட்டிகளே' நற்சான்று. 19.தமிழ்மொழி திரிந்தோ அல்லது சிதைந்தோ போகுமானால் இந்த இனமும் தன்நிலை மாறிப்போய் வேறு மொழியாகவும் வெவ்வேறு இனமாகவும் பிரிந்து போகும். இதற்கு, தமிழினத்திலிருந்து பிரிந்துபோன தமிழ்த் தோழமை இனத்தாரான தெலுங்கரும், மலையாளிகளும், கன்னடர்களும் சான்று. 20.தமிழ்மொழி நம் இனத்தின் உயிர் என்பதால் மொழியின் சிதைவும் அழிவும் பத்தாயிரம் ஆண்டுக்கும் குறையாத தமிழ் இனத்தின் அடிச்சுவட்டையே அழித்துவிடும். இதற்கு, இந்தோனிசியா, மியான்மார், மொரிசியசு, பிஜி, இரியூனியன் முதலான நாடுகளில் வாழும் தமிழர்களே சான்று. 21."மரபு திரிபின் பிறிது பிறிதாகும்" என்ற தொல்காப்பியர் கூற்றுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளியிலும், தமிழ்மொழியிலும், தமிழினத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் ஏற்படும் திரிபுகள் இறுதியில் உலக வரலாற்றில் தொன்மை இனமாகிய தமிழினத்தின் பேரழிவுக்கே வித்திடும். 22."தமிழ் எம் உயிர்; தமிழ்ப்பள்ளி எம் உடல்" என்று முழங்கி மலேசியத்தில் தமிழை நிலைபெறச் செய்த தமிழவேள் கோ.சா ஐயா அவர்களின் திருக்கூற்றின்படி தமிழ்ப்பள்ளி என்ற உடல் அழித்தால் தமிழ் என்ற உயிர் அழியும்! தமிழ் அழிந்தால் தமிழினமே அழியும்! தமிழின அழிவுக்கு இட்டுச் செல்லும் எந்த ஒரு திட்டத்தையும் வழிமொழிந்து அடுத்து வரும் ஏழேழு தலைமுறையின் சாபத்திற்கு இன்றைய தலைமுறை ஆளாக வேண்டாம்.

இத்தனை விளைவுகளையும் இன்னும் விரிந்துச் செல்லும் பற்பல விளைவுகளையும் தீர்க்கமாகச் சிந்தித்தப் பிறகுதான் "தேசியப் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது" பற்றி எவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையாகவே தமிழ்பள்ளி; தமிழ்மொழி நலம் நாடுவோர் கண்மூடித்தனமாகக் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிராமல் ஆழமான ஆய்வுகளின் அடிப்படையில் பேசுவதே நலம்.

  • ஆய்தன்: தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதைச் சிந்திக்கும் மூளைகள் இடைநிலைப்பள்ளிகளில் இதனைச் செய்ய முனைந்தால் தமிழுக்கு ஆக்கம் விளையுமே! இதனைச் சிந்திக்கவும் பேசவும் எவரும் துணிவதில்லையே! ஏன்? ஏன்?

தமிழில் முதலெழுத்து எழுது குயிலே!


மலேசியத் தமிழ் மாணவர்களிடயே தமிழுணர்வுடன் கல்விப்பணி செய்துவரும் ஒரேயோர் இதழ் 'குயில்' மாணவர் இதழாகும். தமிழ் வானில் பறக்கும் இந்த ஜீவக்குயிலின் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பெரும் நன்மையைக் கொண்டுவந்துள்ளன என்றால் மிகையாகாது. இந்தத் தேசியத் தமிழ் மாணவர் இதழை நடத்திவரும் ஜெயபக்தி நிறுவன உரிமையாளர் கு.செல்வராஜூவைத் தமிழுயிர் மனந்திறந்து பாராட்டுகிறது. காரணம், தமிழ் மாணவர் குமுகாயத்தின் நலன்கருதி அவர் செய்யும் இந்த அரும்பணி போற்றுதலுக்குரியது.

குயில் செப்தெம்பர் திங்கள் இதழில் எமது கண்ணை உறுத்திய தமிழ்கேடு ஒன்றை இங்கே குறிப்பிட விழைகிறேன். அதாவது, சில பெயர்களின் முன்னால் உள்ள முதலெழுத்து(initial) தமிழில் குறிக்காப்படாமல் ஆங்கில எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. கு.செல்வராஜூ என்பதில் உள்ள முதலெழுத்து 'கு' தமிழில் எழுதப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில் மாண்புமிகு டத்தோ R.ராகவன் என்றும் டத்தோ (Dr) K.S.நிஜார் என்றும், திருமதி.A.தனலட்சுமி என்றும் பெயர்களில் ஆங்கில எழுத்தை முதலெழுத்தாக இதே இதழ் எழுதியிருக்கிறது. ஏன் இந்த முரண்பாடு? ஏன் இந்த மொழிக்கேடு? 'R' என்பதை 'இரா' என்று தமிழில் எழுதியிருக்கலாம் அல்லது குறைந்தது 'ஆர்' என்றேனும் தமிழ்ப்படுத்தி இருக்கலாம். அதைவிடுத்து மாண்புமிகு டத்தோ ராகவன் என்று வரிசைப்பிடித்து நிற்கும் தமிழ் எழுத்துகளுக்கு மத்தியில் 'R' என்ற ஆங்கில எழுத்தை எழுதி தமிழைச் சிதைத்திருப்பது முறையாகுமா? மேலும், 'ரா' என்பது தமிழில் முதலில் வாராது என்ற இலக்கணத்தை அறிந்து ராகவன் என்பதை இராகவன் என்று எழுதியிருக்க வேண்டும். அதுபோலவே மருத்துவர் கே.எஸ்.நிஜார் என்றும் திருமதி.A.தனலட்சுமி என்பதில் அ அல்லது ஆ அல்லது அந்த ஆங்கில எழுத்தை 'எ' என்று எழுதியிருக்கலாம்.

இது மிகச் சிறிய குறையாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் மொழி நலனைக் கொடுத்துவிடக்கூடிய சிக்கலாக உறுமாறிவிடும். அதுவும், மாணவர்கள் படிக்கக் கூடிய 'குயில்' இதழில் இதுபோன்ற குறைபாடுகளும் மொழிக்கேடுகளும் நிகழ்வது பெரும்பிழையென தமிழுயிர் கருதுகிறது. காரணம், மாணவர்களும் இதனைப் பின்பற்றி எழுதக்கூடும் அல்லவா? எனவே, தமிழ்மொழி நலம் கருதி இதுபோன்ற சிறுசிறு குறைபாடுகளைத் தவிர்த்து, தமிழ் வளர்க்கும் பணியைத் தொடருமாறு குயில் அண்ணா அவர்களைத் தமிழுயிர் வேண்டிக்கொள்கிறது.



  • ஆய்தன்: சிறு துளி பூமியில் பெரு வெள்ளம் ஆகிவிடும்; சிறு குறை மொழியில் பெருஞ் சிதைவு ஆக்கிவிடும்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

தனக்கொரு நீதி தமிழுக்கொரு நீதியா?



“தமிழ் நெடுங்கணக்கை மாற்றவேண்டுமா?” என்ற சிக்கலில் பொங்கியெழுந்த அத்தனை உணர்ச்சிகளையும் தமிழ் உணர்வாளர்களையும் சீண்டிப்பார்க்கும் வகையில் வார இதழ் ஆசிரியர் ஒருவர் தலையங்கம் தீட்டியுள்ளார். ஆறிப்போன புண்ணைச் சொறிந்து பார்த்திருக்கும் அந்த வார இதழ் ஆசிரியரைத் ‘தமிழுயிர்’ நினைத்துப்பார்த்தது... கற்பனை சிறகடித்துப் பறந்தது; காட்சி பிறந்தது! இப்படி..

வித்யா :- டேய் சாகர், மஞ்சள் சட்டைய மாட்டிகிட்டு எங்கேடா கிளம்பிட்டே?

சாகர் :- 'தொன்றல்' வார இதழ் வாங்கிட்டு வரலாம்னு போறேன்.

வித்யா :- ஆமா, அண்மையில் பாடத்திட்ட அதிகாரி ஒருவர் நம்ம தமிழைப்பற்றி கேவலமாய் பேசியிருப்பது பற்றி என்னடா நினைக்கிற?

சாகர் :- ‘தமிழ்த்துரோகிகள்.. கண்டிக்கவேண்டும்.. தமிழ் எங்கள் மூச்சு.. பொங்கி எழுவோம்.. குரல் கொடுப்போம்.. மகஜர் வழங்குவோம்.. முழங்கு சங்கே! என்று ஆவேசமாய் பொங்கி எழுவதால் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியாது.

வித்யா :- நல்லபடியா புத்தி சொன்ன எவன்டா கேட்கிறான்? அவனவனுக்குப் பெரிய அதிகாரி, அறிவாளி, பெரிய ஆள் என்று நினைப்பு!

சாகர் :- தவறு, அறியாமை, தடுமாற்றம் என்பதெல்லாம் எல்லாரிடமும் உண்டு! அதனால் உட்கார்ந்து அமைதியாய் பேசி பிரச்னைகளை நமக்குள் தீர்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

வித்யா :- டேய் தமிழைப் பழிப்பதும் தாயைப் பழிப்பதும் ஒன்னுடா? அதுவும் எப்ப பார்த்தாலும் சொந்த தாய்மொழியையே பழிக்கும் ஒருவனைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதுடா.. நல்லா போட்டுத் தாக்கனும்!

சாகர் :- உணர்ச்சிகரமாய் எதையும் எதிர்கொள்ளாமல் உணர்வுப்பூர்வமாய் கைகோர்த்து செயல்பட வேண்டும்.

வித்யா :- டேய் நீயா இப்படி பேசுற? அன்னிக்கு ஒருத்தன் உன்னைப் ‘பொட்டப்பயன்னு’ சொல்லிட்டான்னு வானத்துக்கும் பூமிக்குமா என்னமா குதிச்ச! ஒரு தனிமனிதன் உன்னை ஏசுனதுக்கே உனக்கு அவ்வளவு கோபம் வருதே.. இது ஆறுகோடி தமிழ் மக்களோட தாய்மொழி! தமிழ் இனத்தோட உயிர்மூச்சு! எல்லா மொழிக்கும் மூத்தமொழி! இலக்கணம் இலக்கியத்துல உயர்ந்த மொழி! ஞானிகள் கூட போற்றி புகழும் மொழி! இந்த மொழிய வச்சுதான் நிறைபேர் பொழப்பு நடத்துறான்! நீயும்கூட பொழைக்கிற! அந்தத் தமிழை ஒருத்தன் கேவலமா பேசும்போது அமைதியா உட்கார்ந்து பேசனும்னு சொல்றியே உனக்கு எங்கேயாவது சூடு, சொரணை இருக்குதாடா? உனக்கு ஒரு நியாயம் தமிழுக்கு ஒரு நியாயமாடா? நீயும் தமிழ்த் துரோகிதாண்டா? உன்னோட ‘கலர’ காட்டிட்ட பாத்தியா?

சாகர் :- ??????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • ஆய்தன் : தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்; எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை? ஏற்றசெயல் செய்வதற்கும் ஏன் அஞ்சவேண்டும்? (பாவேந்தர்)

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டுமா?



"மலேசியாவில் செயல்படும் தமிழ்ப் பள்ளிகள் ஒழிக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன்" என்று ஓய்வுபெற்ற முறையீட்டு நீதிபதி டத்தோ.வி.சி.ஜார்ஜ் என்பவர் பேசினார் என்ற செய்தி கடந்த 4-9-2007ஆம் நாள் தமிழ் நேசன், மலேசிய நண்பன் ஆகிய தமிழ் நாளிதழ்களில் வெளிவந்தது. 'ரிலெவன்' எனப்படும் வழக்கறிஞர் மன்ற செய்தியிதழுக்கு வழங்கிய நேர்க்காணலில் அந்த முன்னாள் நீதிபதி அவ்வாறு கருத்து தெரிவித்திருந்ததை வழக்கறிஞர் அ.சிவநேசன் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 'ரிலெவன்' இதழுக்கு ஆங்கிலத்தில் வழங்கிய நேர்க்காணலில் முன்னாள் நீதிபதி டத்தோ வி.சி.ஜார்ஜ் "I would like to see tamil schools abolished" என்று சொன்னது நாட்டில் உள்ள எமது தமிழ் மக்களிடையே எரிமலையாய் வெடித்தது. நாடெங்கிலும் அனைவரும் குமுறிப் போயினர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அரசு சார்பற்ற இயக்கம், ஆசிரியர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பொதுமக்கள், மாணவர்கள் என குமுகாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் ஒன்றாய்ச் சேர்ந்து முன்னாள் நீதிபதிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நின்றனர். அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் நாடெங்கெங்கிலும் தமிழ்த் தலைவர்களும் மக்களும் பொங்கி எழுந்தனர்; கண்டனம் தெரிவித்தனர்; அமைதி மறியல் நடத்தினர்; எதிர்ப்புப்போராட்டம் நடத்தினர். மலேசிய வரலாற்றில் தனிப்பட்ட வேற்றுமைகளை மறந்து எமது தமிழ்மக்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் நின்று தமிழ்ப்பள்ளிக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுத்தது வரலாற்றுப் பெருமையாக அமைந்தது. 50 ஆண்டுகாலத்தில் மலேசியத் தமிழ்க் குமுகாய விடியலுக்கான முன்னுரையாகவும் அமைந்தது. இந்தக் குமுகாயப் போராட்டத்தின் நடப்புகளைத் 'தமிழுயிர்' இங்கே நாட்குறிப்பாக வழங்குகின்றது.

4.9.2007:- *'ரிலெவன்' எனப்படும் வழக்கறிஞர் மன்ற இதழுக்கு வழங்கிய ஒரு நேர்க்காணலில் முறையீட்டு வழக்குமன்ற முன்னாள் நீதிபதி டத்தோ வி.சி.ஜார்ஜ் "தமிழ்ப்பள்ளிகள் ஒழிக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன்" என்று கூறியிருப்பதாக வழக்கறிஞர் ஆ.சிவநேசன் பொதுவுக்கு வெளிப்படுத்தினார். அதற்காக கடுமையான கண்டனமும் தெரிவித்தார். தன்னுடைய பேச்சினை முன்னாள் நீதிபதி மீட்டுக்கொள்ள வேண்டும் எனவும் இல்லையேல் காவல்துறையில் புகார் செய்யப்படும் எனவும் கூறினார்.

5.9.2007:- *முன்னாள் நீதிபதி வி.சி.ஜார்ஜ் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தும் பல இயக்கத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா, மனித உரிமை ஆணையர் டத்தோ.என்.சிவசுப்பிரமணியம், மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ.அ.வைத்தியலிங்கம், ஐ.பி.எப். கட்சியின் தேசிய உதவித் தலைவர் எம்.சம்பந்தன், சிலாங்கூர் மக்கள் வளர்ச்சிக் கழகத் தலைவர் கே.பஞ்சமூர்த்தி, மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் பெ.தர்மலிங்கம், மலேசியத் தமிழ் இளஞர் மணிமன்றத் தலைவர் பி.பொன்னையா, பயனீட்டாளர் சங்கத் தலைவர் டத்தோ சுலைமான் ஆகியோர் தங்கள் கண்டனங்களை வெளியிட்டனர்.

* இவ்விவகாரம் பற்றி விளக்கம் பெற சென்ற மலேசியநண்பன் செய்தியாளர் நக்கீரனிடம் நீதிபதி மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதோடு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. *மேலும், வழக்கறிஞர் அ.சிவநேசனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரனும் காவல்துறையில் புகார் செய்யவிருப்பதாகக் கூறினர். *முன்னாள் நீதிபதியின் வரப்புமீறிய பேச்சைக் கண்டித்தும் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கெடா, சுங்கை பட்டாணி மகா ஜோதி தமிழ்ப்பள்ளி பெற்றோர்களும் மாணவர்களும் அமைதி மறியல் நடத்தினர்.

6.9.2007:- *முன்னாள் நீதிபதியின் கருத்துக்கு ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோ சிறி ச.சாமிவேலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். கல்வி அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் மாண்புமிகு கோமளாதேவி, ம.இ.கா.தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முதலான இன்னும் பிறருடைய கண்டனங்கள் தொடர்ந்தன.

*இதற்கிடையில், முன்னாள் நீதிபதிக்கு எதிரான காவல்துறை புகாரை ஒத்திவைப்பதாகவும் தமது பேச்சு தொடர்பாக விளக்கம்தர அவருக்கு வாய்ப்பு வழங்குவதாகவும் வழக்கறிஞர் அ.சிவநேசன் குழுவினர் அறிவித்தனர்.

7.9.2007:- *இந்தச் சிக்கல் தொடர்பாக விளக்கம் அளிப்பதாக முன்னாள் நீதிபதி முன்வந்த செய்தியை நாளிதழ்கள் அறிவித்தன. அ.சிவநேசன், எம்.குலசேகரன் முதலான தமிழ் வழக்கறிஞர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள், இதழாளர்கள் ஆகிய தரப்பினரைச் சந்திக்க அவர் முன்வந்திருக்கும் செய்திகள் வந்தன.

8.9.2007:- *"தமிழ்ப்பள்ளிகள் தொடர்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன். தமிழ்ப்பள்ளிகள் மேசமான நிலையில் இருப்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன்" என்று முன்னாள் நீதிபதி தம் கருத்தில் உறுதியாக இருக்கும் செய்திகள் வெளிவந்தன. தம் தாய்மொழி மலையாளம்; சமயம் கிறித்துவம் தாம் மலேசிய மலையாளிகள் சங்க நிருவாகக் குழு உறுப்பினர், தன்னுடைய பிள்ளைகளை மலையாள மொழி படிக்க கேரளாவிற்கு அனுப்பி வைத்ததாகத் தன்னை அறிமுகப்படுத்திகொண்ட அவர் கூட்டத்தில் கலந்துகொண்டோர் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்ததாகவும் அப்படியே சொன்ன பதில்கள் குழப்பமாக இருந்ததாகவும் நாளிதழ்கள் கூறின. *நீதிபதியின் கூற்று தமிழ் மக்களை மேலும் சினமடையச் செய்தது.

9.9.2007:- *டத்தோ.வி.ஜார்ஜ் மன்னிப்பு கேட்க மறுத்ததைத் தொடர்ந்து 8.9.2007இல் தலைநகர் பிரிக்பீல்ட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட செய்தி வெளிவந்தது. *ஜார்ஜை கைது செய்க என்ற கோரிக்கையும் செய்தி தலைப்பாக வெளிவந்தன. *மேலும், இன்னும் 10 நாட்களில் கோலாலம்பூரில் மிகப் பெரிய கண்டனô பேரணி நடத்தப்படும் என்றும் அ.சிவநேசன் தெரிவித்தார்.

10.9.2007:- *முன்னாள் நீதிபதியின் உருவ பொம்மை தலைநகர் பிரிக்பீல்ட்டு சாலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காலணியால் அடித்து பின்னர் தீயிடப்பட்ட செய்திகள் நாளிதழ்களை அலங்கரித்தன. மக்கள் செயலணித் தலைவர் கலைவாணர் தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. *காஜாங் இந்து நடவடிக்கைக் குழு காவல்துறையில் புகார் செய்தனர். *மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசிய இந்தியர் சங்கம், பினாங்கு ஜனநாயக செயல் கட்சி, பினாங்கு ஐ.பி.எப், பினாங்கு இந்து சங்கம், பினாங்கு அறிவாலயம் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு அலைகள் கண்டன அறிக்கைகளாக வெளிவந்தன.
11.9.2007:- பேரா, பாரிட் புந்தாரில் இயங்கும் செயிண்ட்மேரி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்றத்தினரும் காவல்துறையில் புகார் செய்ததாக ம.நண்பன் செய்தி கூறியது. தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து முடிவுசெய்ய வேண்டியவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களே அன்றி யாரோ ஒரு பார்வையாளர் அல்ல. நாட்டின் அரசியல் சட்டத்தை அவமதித்ததற்காகவும் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் குந்தகம் விளைவித்ததற்காகவும் முன்னாள் நீதிபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.ஆ.சங்கத் தலைவர் முருகையா தம் அறிக்கையில் குறிப்பிட்டுளார்.

12.9.2007:- டத்தோ ஜார்ஜுக்கு எதிராக மேலும் ஒரு புகார் பினாங்கு நிபோங் திபாலில் செய்யப்பட்டது. செபராங் பிறை வட்டாரத்திலுள்ள கலிடோனியா இளைஞர் மன்றச் செயலர் கோ.அமிதலிங்கம், ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி பெ.ஆ.சங்கத் தலைவர் பெ.சுப்பிரமணியம், டிரான்ஸ் கிரியான் தோட்ட கெராக்கான் கிளையின் சார்பில் எம்.நலிங்கம், பினாங்கு மாநில இந்திய மாணவர்களின் பெற்றோர் சங்கத் தலைவர் ம.தமிழ்செல்வன் ஆகியோர் புகார் செய்தனர். தனது அறிக்கையைத் திரும்பப் பெறுவதோடு பொது மன்னிப்பும் கேட்க அவர் மறுப்பாரேயானால் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ம.தமிழ்செல்வன் கேட்டுக்கொண்டார்.
  • ஆய்தன்: தமிழ்ப்பள்ளியின் நலன்காக்க துடித்தெழுந்த தமிழ்த் தாயின் வீரத்திரு மக்களுக்குத் எமது வீரவணக்கம்! இவர்களைப் போல் ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை; உள்ளத்தில் தமிழ்த்தாய் ஆட்சி புரியும்வரை தமிழ் நிலைக்கும்! தமிழ்ப்பள்ளிகள் நீடிக்கும்!