வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 30 செப்டம்பர், 2007

தமிழில் முதலெழுத்து எழுது குயிலே!


மலேசியத் தமிழ் மாணவர்களிடயே தமிழுணர்வுடன் கல்விப்பணி செய்துவரும் ஒரேயோர் இதழ் 'குயில்' மாணவர் இதழாகும். தமிழ் வானில் பறக்கும் இந்த ஜீவக்குயிலின் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பெரும் நன்மையைக் கொண்டுவந்துள்ளன என்றால் மிகையாகாது. இந்தத் தேசியத் தமிழ் மாணவர் இதழை நடத்திவரும் ஜெயபக்தி நிறுவன உரிமையாளர் கு.செல்வராஜூவைத் தமிழுயிர் மனந்திறந்து பாராட்டுகிறது. காரணம், தமிழ் மாணவர் குமுகாயத்தின் நலன்கருதி அவர் செய்யும் இந்த அரும்பணி போற்றுதலுக்குரியது.

குயில் செப்தெம்பர் திங்கள் இதழில் எமது கண்ணை உறுத்திய தமிழ்கேடு ஒன்றை இங்கே குறிப்பிட விழைகிறேன். அதாவது, சில பெயர்களின் முன்னால் உள்ள முதலெழுத்து(initial) தமிழில் குறிக்காப்படாமல் ஆங்கில எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. கு.செல்வராஜூ என்பதில் உள்ள முதலெழுத்து 'கு' தமிழில் எழுதப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில் மாண்புமிகு டத்தோ R.ராகவன் என்றும் டத்தோ (Dr) K.S.நிஜார் என்றும், திருமதி.A.தனலட்சுமி என்றும் பெயர்களில் ஆங்கில எழுத்தை முதலெழுத்தாக இதே இதழ் எழுதியிருக்கிறது. ஏன் இந்த முரண்பாடு? ஏன் இந்த மொழிக்கேடு? 'R' என்பதை 'இரா' என்று தமிழில் எழுதியிருக்கலாம் அல்லது குறைந்தது 'ஆர்' என்றேனும் தமிழ்ப்படுத்தி இருக்கலாம். அதைவிடுத்து மாண்புமிகு டத்தோ ராகவன் என்று வரிசைப்பிடித்து நிற்கும் தமிழ் எழுத்துகளுக்கு மத்தியில் 'R' என்ற ஆங்கில எழுத்தை எழுதி தமிழைச் சிதைத்திருப்பது முறையாகுமா? மேலும், 'ரா' என்பது தமிழில் முதலில் வாராது என்ற இலக்கணத்தை அறிந்து ராகவன் என்பதை இராகவன் என்று எழுதியிருக்க வேண்டும். அதுபோலவே மருத்துவர் கே.எஸ்.நிஜார் என்றும் திருமதி.A.தனலட்சுமி என்பதில் அ அல்லது ஆ அல்லது அந்த ஆங்கில எழுத்தை 'எ' என்று எழுதியிருக்கலாம்.

இது மிகச் சிறிய குறையாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் மொழி நலனைக் கொடுத்துவிடக்கூடிய சிக்கலாக உறுமாறிவிடும். அதுவும், மாணவர்கள் படிக்கக் கூடிய 'குயில்' இதழில் இதுபோன்ற குறைபாடுகளும் மொழிக்கேடுகளும் நிகழ்வது பெரும்பிழையென தமிழுயிர் கருதுகிறது. காரணம், மாணவர்களும் இதனைப் பின்பற்றி எழுதக்கூடும் அல்லவா? எனவே, தமிழ்மொழி நலம் கருதி இதுபோன்ற சிறுசிறு குறைபாடுகளைத் தவிர்த்து, தமிழ் வளர்க்கும் பணியைத் தொடருமாறு குயில் அண்ணா அவர்களைத் தமிழுயிர் வேண்டிக்கொள்கிறது.



  • ஆய்தன்: சிறு துளி பூமியில் பெரு வெள்ளம் ஆகிவிடும்; சிறு குறை மொழியில் பெருஞ் சிதைவு ஆக்கிவிடும்.

கருத்துகள் இல்லை: