வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வேண்டும்

நாட்டின் விடுதலைக்கு முன் அரசாங்கத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் தமிழ்மொழிக்கு சம உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது அது சிறிது சிறிதாக மறைந்துவிட்டது என்று பாடாங் செராயைச் சேர்ந்த மூத்த அரசியளாளர் இலெட்சுமணன் என்ற காடுராஜா கூறியுள்ளார். இந்தச் செய்தி 31.3.2008 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது.

எடுத்துக்காட்டாக, பொருளகம், அஞ்சலகம் மற்றும் மற்ற மற்ற அரசு அலுவலகங்களில் எல்லாம் தமிழ் எழுத்தைப் பயன்படுத்திய பொழுது வயதான நம் பெரியோர்கள் சொந்தமாகவே படித்துப் பயனடைந்தார்கள். தங்கள் சிக்கல்களுக்குத் தமிழிலேயே தீர்வு கண்டனர். மேலும், எல்லா அலுவலகங்களிலும் பரவலாகத் (இந்திய)தமிழர்கள் வேலை செய்து வந்தனர். ஆனால், காலப் போக்கில் தமிழ்ப் பணியாளர்கள் குறையக் குறைய நம் தமிழ்மொழியும் எழுத்தும் அங்கு மறைந்துவிட்டது.

மீண்டும் தமிழைப் பரவலான நிலையில் நிலைநிறுத்த அரசாங்கம் முயல வேண்டும் என அவர் தம்முடைய அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.


  • ஆய்தன்: மலேசிய நடுவண் அரசு அலுவலகங்களில் தமிழ் காணாமல்போய் பலகாலம் ஆகிவிட்டது. மலாய் ஆன்கிலத்திற்கு அடுத்து சீன மொழிக்கு வானூர்தி நிலையம், பொருளகம் முதலான இடங்களில் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், ஏதுங்கெட்ட நம்முடைய தமிழ்மொழி மட்டும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழின் பெயரால் இயங்கும் பொது இயக்கங்கள் இதற்கான செயல்பாடுகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். குறிப்பாக, கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் புதிதாகப் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள 'மக்கள் முன்னணி' அரசாங்கம் மாநில ஆட்சி அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் உள்ள அறிவிப்புப் பலகைகளில் தமிழையும் இடம்பெறச் செய்யவேண்டும். 18 கோரிக்கைகளை முன்வைத்துள்ள இண்டிராப்பு குழுவினரும், அரசியல் சுனாமியையை ஏற்படுத்திய மக்கள் சக்தி குழுவினரும் 'மக்கள் முன்னணி'யின் மாநில அரசுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். உரிமை போராட்டம் நடத்தும் இண்டிராப்பும், மக்கள் சக்தியும் தமிழுக்கும் சேர்த்துப் போராட வேண்டும். செய்வார்களா?

கருத்துகள் இல்லை: