வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

தமிழன்னை மகுடத்தில் தொழிநுட்ப முத்து


செம்மொழியான தமிழ்மொழிக்கு மற்றொரு மகுடம் வைத்தாற்போல தமிழ்க்கணினி உலகில் முதலிடம் வகிக்கும் முரசு நிறுவனம் தமிழில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி பெருமை சேர்த்துள்ளது. கைப்பேசி பயன்பாட்டில் முரசு செல்லினம் இசைப் பதிப்புச் சேவையை ஏற்படுத்தி வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது முரசு நிறுவனம்.

உலகின் முதல் தமிழ்க் குறுஞ்செய்தி சேவையை இந்நிறுவனம் 2005ஆம் ஆண்டில் சிங்கையில் அறிமுகப்படுத்தியது. பின்னர் மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது புதிய தொழில்நுட்பமாகிய இந்த முரசு செல்லினம் இசைப் பதிப்பு அறிமுகமாகிறது.

இது தமிழ்கூறும் நல்லுலகில் உருவெடுத்துள்ள புதிய தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் இனிமேல் கைப்பேசியிலேயே திருக்குறள், தேவார, திருமுறை அருட்பாடல்களைக் கேட்கலாம்; பாடல் வரிகளைப் படிக்கலாம்; பாடியும் மகிழலாம்.

இந்த முரசு செல்லினம் இசைப் பதிப்பானது கைப்பேசியில் இயங்கும் ஒரு செயலி. பாடல்களைப் பதிவிறக்கம் செய்யும் பணியை எளிதாக்கக் கூடியது. ஆன்மிக அருட்பாடல்களை உள்ளடக்கியது. திருக்குறளைக் கைப்பேசிவழி பரப்பக்கூடியது. தமிழ்மறையாம் திருக்குறள் கருத்துகளையும் தமிழ்த் திருமுறைப் பாடல்களையும் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்களிடையே கொண்டு சேர்க்கக் கூடியது. பதிவிறக்கம் செய்யப்பட்ட அருட்பாடல்களை வேண்டும் போதெல்லாம் ஒலிக்கச் செய்யலாம். பாடல் ஒலிக்கும்போது திரையில் தோன்றும் பாடல் வரிகளைப் பாடியும் மகிழலாம். இதுவே முரசு செல்லினம் இசைப் பதிப்பின் தனிச்சிறப்பாகும்.

தொழில்நுட்பத்தின் வழி தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள இந்த நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி நா.ஜெயசுப்பிரமணியம் அவர்களையும் முரசு நிறுவனத்தின் நிறுவனரும் நிருவாகியுமான முத்தெழிலன் அவர்களையும் தமிழுயிர் மனமார பாராட்டுகிறது.

உலகம் வியக்கும் மின்னியல் தொழிநுட்பத்தில் தமிழுக்கும் தனிச்சிறப்பான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் முத்தெழிலன் அவர்களுக்கு உலகத் தமிழர் அனைவரும் நன்றியும் பாராட்டும் கூறவேண்டும். தமிழால் முடியாது; தமிழுக்கு எதிர்காலம் கிடையாது; தமிழ் அறிவியலுக்கு ஆகாது என்பன போன்ற மூடக்கருத்துகளையும் முட்டாள்தனங்களையும் அடித்து நொறுக்கும் வகையில் புதிய வகை தொழில்நுட்பத்தைத் தமிழ்மொழியில் ஏற்படுத்தி மாபெரும் சாதனையைப் படைத்திருக்கும் முத்தெழிலன், ஜெயசுப்பிரமணியம் ஆகியோரை நினைந்து தமிழ்க்கூறும் நல்லுலகம் கண்டிப்பாகப் பெருமைபட வேண்டும்.

இன்றையக் கணினி, இணையம், கைப்பேசி உலகில் தமிழையும் தூக்கி நிறுத்தியதோடு, அறிவியல் தொழில்நுட்பத் துறையில் உலக மொழிகளுக்கு நிகராகத் தமிழன்னையை அமரவைத்திருக்கும் இந்த அரிய சாதனை எமது மலேசியத்தில் நிகழ்ந்திருப்பது மலேசியத் தமிழரின் மொழி மாண்பையும் மதிப்பையும் உயர்த்தியுள்ளது. உலகம் முழுவதும் தமிழும் தமிழரும் எழுச்சிபெற்று வருகின்ற இன்றைய நாளில், கைப்பேசி உலகத்தை அதிர வைத்திருக்கும் இந்த அரிய சாதனை தமிழரிடையே தன்னம்பிக்கையையும் தமிழ்நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது உறுதி.

@ஆய்தன்: எல்லாச் செயலும் தமிழால் முடியும்! தமிழால் முடியாதது எதுவுமில்லை! தமிழனால் முடிந்தால் தமிழால் முடியும்!

கருத்துகள் இல்லை: