வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007

தமிழ்ப் பழிப்பும்! தமிழர் விழிப்பும்!

18-08-2007 என்ற நாள் மலேசியத் தமிழ் வரலாற்றில் மறக்க முடியாத நாள். இந்த நாளில்தான் 'மலேசிய நண்பன்' நாளிதழ் தமிழ் நெடுங்கணக்கில் மாற்றம் செய்ய சில தரப்பினர் முனைகிறார்கள் என்று ஒரு அதிரடியான செய்தியை வெளியிட்டது. முந்துதமிழின் அடித்தளத்தையே ஆட்டம்காணச் செய்யும் இந்தக் கொடுஞ்செயலை அறிந்து தமிழ் உணர்வாளர்களும் உறவோர்களும்; அறிஞர்களும் அடிமட்டத் தொண்டர்களும், தமிழ்சார்ந்த அமைப்புகளும் தமிழ்ப் பற்றாளர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். தமிழுக்கு எதிராக செயல்பட்டதாக அடையாளம் கூறப்பட்ட பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். நெடுங்கணக்கில் மாற்றம் என்னும் செய்தியோடு 'தமிழ் நீசமொழி' என்று யாரோ ஒருவர் பேசிவிட்டார் என்னும் உணர்ச்சிமிகு செய்தியும் சேர்ந்துகொண்டதால் தமிழ் மக்கள் பெரிதும் கொதிப்படைந்து போய்விட்டனர் என்பது உண்மை. தேசிய அளவில் இதற்குக் கண்டனக் குரல்கள் உரக்க ஒலித்தன. மலேசியத் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிதான கொந்தளிப்பை உருவாக்கிய இந்த 'வரலாற்றுச்' சிக்கல் பற்றியும் அதனைத் தொடர்ந்து எழுந்த தீப்பிழம்புக்கு ஒப்பான கண்டன முழக்கங்கள் பற்றியும் இறுதியில் ஏற்பட்ட தீர்வு பற்றியும் இங்கே எமது 'தமிழுயிர்' தொகுத்து வழங்குகிறது.

செய்தி : பாடத்திட்ட மேம்பாட்டுத் திட்டக் குழுவில் தமிழ் மொழிக்காக நியமிக்கப்பட்டவர்கள் தமிழ்மொழியில் இதுவரை உள்ள நெடுங்கணக்கையே மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது எனத் தமிழ்ப் பற்றாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். கிரந்த எழுத்துகள் என்று ஜ, ஸ, ஷ, ஹ, ‚ ஆகிய எழுத்துகளை தனியாகச் சுட்டாமல் தமிழ் எழுத்துகளுடன் இணைத்து 252 எழுத்துகளாக அறிவித்துவிட வேண்டும். இல்லையெனில், தூயதமிழ் என்று சொல்லிக்கொள்வோரின் நீசமொழி (பாஸ்டர்ட் லாங்குவேஜ்) ஆகிவிடும் என்று பேசிய அந்தக் குழுவைச் சேர்ந்தவரை இழிமாந்தர் என்றுதானே எண்ணவேண்டியிருக்கிறது. மேலும், கிரந்த எழுத்தான 'ஜ' என்ற எழுத்திற்கு வலுவான அம்சம் இருப்பதால்தான் சிவாஜி திரைப்படம் வெற்றி பெற்றதாக அந்த அதிகாரிகள் கூறினார்களாம். தமிழ்மொழியால் வாழ்ந்துகொண்டு அந்த மொழியின் அடித்தளத்திற்கே வெடி வைக்கும் கேடான செயலைச் செய்ய சிலர் முற்பட்டுள்ளதாகத் தமிழ்ப் பற்றாளர்கள் இதனை வருணித்துள்ளனர். (மலேசிய நண்பன் செய்தி:18.8.2007)


கண்டனக் குரல்கள் : (இரா.திருமாவளவன், மலேசியத் தமிழ்நெறிக கழகத் தேசியத் தலைவர்) தமிழ் நெடுங்கணக்கை மாற்றிக் கிரந்த எழுத்துகளை இணைக்கும் திட்டமானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் எதிர்க்கத்தக்கதுமாகும். தூய தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் 'வேசி மொழி' (Bustard Language) என்று சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் துணிந்தது? தமிழைச் சூத்திர மொழி என்று ஆரிய பார்ப்பன நூல்களில் குறிப்பிட்டிருப்பதை இவர்கள் வழிமொழிகிறார்கள் என்றால் இவர்கள் எந்தப் பிறப்பினர்? தமிழுக்குச் சீரழிவை ஏற்படுத்த முனைந்தால் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

(ரெ.சு.முத்தையா, மலேசியத் திராவிடக் கழகத் தேசியத் தலைவர்) தமிழனாகப் பிறந்து தமிழில் பேசிக்கொண்டு தமிழால் பிழைத்துக் கொண்டு தமிழ்மொழியை வேசிமொழி என்று கூறுகிற ஒரு மனிதனைக் கொண்டுள்ள ஓர் இனம் உலகத்திலேயே தமிழினம்தான். இது மாகேவலம். எல்லாம் உடைத்தத் தமிழில் அயல்மொழிக் கலப்பு எதற்கு? தமிழை நீசமொழி என்று நினைப்பவர்கள் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் கேடர்களைப் போன்றவர்கள்.

(மு.மணிவெள்ளையன், மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர்) வெறும் பழம் பெருமைகளை மட்டுமே பேசி வாழும் தமிழர்களிடத்தில் மொழியுணர்வு குன்றிவிட்டதே என்று இத்தனை நாளும் உள்ளம் களைப்புற்றிருந்த நமக்கு தமிழால் பிழைக்கும் தமிழனே, தமிழை 'வேசிமொழி' என்று கூறியிருப்பது நிலைகுலையும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

(மா.தமிழன்பன், பாவலர் மன்ற பேரா மாநிலத் தலைவர்) "மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய்; உனக்கினிதாய்த் தோன்றிடும் அத்தமிழ்" என்று சிவஞான முனிவரின் கருத்துபடியும் மொழிப்பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் 'தமிழ் வரலாறு' நூல்படியும் தமிழ் நெடுங்கணக்கு வரையறுக்கப்பட்ட ஒன்று. எனவே, ஆக்க வேலைகள் ஏதும் இருந்தால் செய்யுங்கள்; இல்லாவிடில் சோம்பியாவது திரியுங்கள்.

(சு.வை.லிங்கம், சிலாங்கூர் மாநில தமிழ் இளைஞர் மனிமன்ற முன்னாள் தலைவர்) தமிழினத்திற்கு வேலியே தமிழ்தான். தமிழில் அரியது அத்தனையும் உரியதாய் இருக்க அடுத்ததைத் தேடும் அசட்டுத்தனத்தை விட்டுவிடுங்கள். தாய்மொழியைப் பழிக்கும் கீழ்ச்செயலையும் அறவே அறுத்து விடுங்கள்.

(திருவருள், செலாமா) தமிழ் நெடுங்கணக்கை மாற்றி அமைக்கும் எண்ணம் மின்னல் கீற்று போலக்கூட துளிர்க்கக் கூடாதே! எப்படி வந்தது இந்த ஏகடியத் துணிவு? இந்த மொழியை நம் மாணவர்களிடையே வளர்க்கவும் பாதுகாக்கவும் உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறதே தவிர சிதைக்க அல்ல! திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட 12 திருமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சொற்கள் நல்லதமிழ் சொற்களே! அவற்றின் வழிதானே 63 நாயன்மாரும் இன்னும் பிறரும் இறைமாட்சியின் அருந்துணையை நாடியுள்ளனர். நல்லதமிழைத் தாக்கும் முகமாக 'நீசமொழி' என்று பேசியவரின் நீச குணம் இன்றோடு ஒழியட்டும்.

(டத்தோ சுலைமான், போம்கா தேசிய உதவித் தலைவர்) கல்வி அமைச்சர் இதில் தலையிட்டு தமிழ் நெடுங்கணக்கை மாற்ற விரும்பும் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களை உடனே நீக்க வேண்டும். 'செம்மொழி' தகுதியைப் பெற்றது தமிழ். அதைச் சிதைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் சங்கம் போராட்டத்தில் இறங்கும்.

(கரு.யோகநாதன், திருவள்ளுவர் நன்னெறி மையத் தலைவர்) தமிழுக்கு மீண்டும் இழுக்கா? தமிழரே அதற்குத் துணையா? நெஞ்சம் பதறுகிறது. நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ் சார்ந்த இயக்கங்களும் வெறுமனே கைகட்டி வாய்மூடிக் கொண்டிராமல் ஒருமித்த குரல் எழுப்புவோம்.

(க.முனுசாமி, தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம்) 'தமிழ் எங்கள் உயிர்' என்று முழங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணி நிதி திரட்டி பல்கலைக்கழகத்திக் தமிழதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வெற்றி பெற்றார். அதனால், சமஸ்கிருதம் தவிர்க்கப்பட்டது. தற்போது பொறுப்பில் உள்ள பாடத்திட்டக் குழுவினர் 'சாஸ்திரி'யின் அதே முயற்சியில் மீண்டும் தமிழை வேரறுக்க துணிந்துள்ளனர். தமிழைத் தாயாக நினைக்கும் தமிழர்களின் இந்தப் பிரச்சினைக்குப் பொது அமைப்புகள் ஒன்றுகூடி கல்வி அமைச்சரைச் சந்தித்து விரைந்து தீர்வுகாண வேண்டும்.

(சி.சங்கர், பினாங்கு அறிவாலயத் தலைவர்) "மரபு திரிபின் பிறிது பிறிதாகும்" என்ற தொல்காப்பியச் சிந்தனைக்கேற்பத் தமிழ் மரபைக் காக்க வேண்டும். தமிழ் யாருடைய தனிப்பட்ட சொத்தல்ல. தமிழரின் சொத்து. மொழி அறிஞர்களிடமும் துறைசார்ந்த வல்லாண்மை பெற்றவர்களிடமும் ஆலோசனை பெற்ற பிறகே மொழி தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அதிகார பலத்தால் தனிப்பட்ட ஒரு சிலர் எடுக்கும் முடிவால் ஏற்படும் தமிழ்ச்சிதைவை இனியும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இதற்குப் பொறுப்பானவர்கள் விளக்கம் தரவேண்டும். இல்லையேல், கல்வி அமைச்சுக்கு முறையீட்டுக் கடிதம் அனுப்புவதோடு அமைதி மறியலும் நடத்தப்படும்.

தீர்வு : மலேசியத் தமிழுலகத்தைக் கிளர்ந்தெழச் செய்த இந்த உணர்ச்சிமிகு செய்தி கல்வி அமைச்சின் நாடளுமன்ற செயலாளர் மாண்புமிகு கோமளா கிருஷ்ணமூர்த்தியின் விளக்கத்தால் ஒரு நிறைவு பெற்றது. தமிழ் நெடுங்கணக்கில் நிலைத்திருக்கும் உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்துக்களான 247உடன் வடமொழி எழுத்துகளைச் சேர்க்கும் திட்டம் ஏதும் கல்வி அமைச்சுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். (தமிழ் நேசன் நாளிதழ் 22.8.2007)

  • ஆய்தன் : தமிழைத் தாயாக – தெய்வமாக - உயிராக – வாழ்வாக – மதிப்பவர் உணர்வோடு விளையாடுவது பெரும் பிழை! பிறவிப் பாவம்!

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2007

திருக்குறள் பள்ளிப் பாடமாகட்டும்!


உலகம் போற்றும் வாழ்வியல் நூலான திருக்குறளைத் தொடக்கப் பள்ளிகளில் தனிப்பாடமாகப் பயிற்றுவிக்க வகை செய்யும்படி கல்வியமைச்சுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத் தேசியத் தலைவர் மு.மணிவெள்ளையன் தெரிவித்துள்ளார். புனித நூலான திருக்குர்ஆன், பைபிள் நூல்களின் வரிசையில் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகத் திருக்குறளும் திகழ்கிறது. திருவள்ளுவர் இதனைத் தமிழில் இயற்றி இருந்தாலும் இதிலுள்ள 1330 அருங்குறட்பாக்களுள் எந்த இடத்திலும் தமிழ், தமிழர் என்னும் சொற்களைப் பயன்படுத்தாமல் 'மாந்தர்' போன்ற மாந்த இனத்தைப் பொதுவாகச் சுட்டும் சொற்களையே பயன்படுத்தி இருக்கின்றார். எனவேதான், இனம் கடந்து; சமயம் கடந்து; நாடு கடந்து உயர்ந்த கருத்துகளைக் கூறும் நூல் திருக்குறள் என்று ஆன்றோரும் சான்றோரும் அழுத்தம் திருத்தமாக உரைத்து வருகின்றனர்.

ஆகவே, தமிழர்களையும் தமிழைப் படித்துவரும் இந்தியர்களையும் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாழ்வியல் நூலாகவும் நன்னெறி நூலாகவும் விளங்கும் திருக்குறள், தொடக்கப்பள்ளிகளில் பாடநூலாக அமைந்தால், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.
(நன்றி: மலேசிய நண்பன் நாளிதழ் 6 ஆகத்து 2007 தலையங்கம் சில மாற்றங்களுடன்)

  • ஆய்தன் : ஐயா மு.மணிவெள்ளையனார் செயற்கரிய இப்பணியினைச் செய்துமுடிக்க எல்லாம்வல்ல இறைமை அருள்செய்ய வேண்டுகிறேன்.

தமிழை மதிக்காத தமிழர்


தமிழுக்கு முன்னுரிமை தராத தமிழர் உணவகங்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ கோ.இராஜு வலியுறுத்தினார். நமது நாடு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மேம்பாடு கண்டு வருகின்றது. அதுபோலவே நம்மின மக்களும் வணிகத் துறை உள்பட பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். அவ்வாறு முன்னேறும் தமிழ் வணிகர்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே தங்களின் தாய்மொழி வளர்ச்சிக்கும் துணைநிற்க வேண்டும். ஆனால், நமது வணிகர்களே தங்கள் வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவது கிடையாது. முழுக்க முழுக்க தமிழர்களையே நம்பி தமிழர்களளே நடத்தும் உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிக்கடைகள், பூசை பொருள் கடைகள் முதலான நிறுவனங்கள்கூட தமிழைப் புறக்கணிப்பு செய்கின்றன. அத்தகைய நிறுவனங்களைத் தமிழர்கள் புறக்கணிப்பதில் தவறேதும் இல்லை. தமிழன் வீட்டுப் பணம் மட்டும் வேண்டும், ஆனால் தமிழ் வேண்டாம் என எண்ணமுடைய தமிழ் வணிகர்களால் தமிழுக்கு இழுக்கு ஏற்படுவது வருத்தமளிக்கிறது. இதே நாட்டில் வாழும் சீனர்கள் எத்துணைப் பெரிய வணிகம் செய்தாலும் எத்தனை கோடி பொருள் ஈட்டினாலும் தங்களின் தாய் மொழியை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுப்பதில்லை. தங்கள் நிறுவனங்களில் சீனமொழிக்கு முன்னுரிமை கொடுக்கத் தவறுவதில்லை. இப்படிப்பட்ட சீன குமுகாயத்தோடு ஒட்டி வாழும் நம்மவர்களுக்கு மட்டும் ஏன் மொழியுணர்வு இருப்பதில்லை. சீனர்களைப் பார்த்தாவது மொழிச்சுரணை வரவேண்டுமல்லவா? (நன்றி : மக்கள் ஓசை செய்தி 6 ஆகத்து 2007)

  • ஆய்தன் : தமிழைப் புறக்கணிக்கும் வணிக நிறுவனங்களைப் புறக்கணிப்புச் செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கப் பொது அமைப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

தமிழ் மணக்கும் பினாங்கு


பினாங்கு மாநிலத்தில் 'மக்கள் மடல்' என்ற ஒரு செய்தியிதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த இதழ் பினாங்கு மாநில அரசினால் வெளியிடப்பெறுகிறது. முற்றும் முழுவதுமாக தமிழில் இந்த இதழ் வெளிவருகிறது. இந்த நாட்டில் ஒரு மாநில அரசு இத்தகையதோர் இதழை வெளியிட்டு வருவது; அதுவும் தமிழில் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியதும்; வியப்புக்குரியதுமாகும். தமிழுக்கும் எமது தமிழ் மக்களுக்கும் பினாங்கு அரசு வழங்கியிருக்கும் மிக உயர்வான மரியாதையாக இதனைப் போற்ற வேண்டும். பினாங்கு மாநில நடப்புகளையும் மக்களுக்குப் பயன்மிக்க செய்திகளையும் கட்டுரைகளையும் தாங்கி தரமான தாள்களில் அச்சிடப்பட்டு எட்டு கண்கவர் வண்ணப்பக்கங்களோடு இந்த 'மக்கள் மடல்' இதழ் வெளிவருவது, பினாங்கு வாழ் தமிழர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்கே பெருமைக்குரிய செய்தியாகும். மற்றைய மொழிகளுக்குத் தரப்படும் அதே மரியாதையையும் உரிமையையும் நடுவுநிலைமையோடு தமிழுக்கும் வழங்கியிருக்கும் பினாங்கு மாநில முதல்வர் தான்ஸ்ரீ கோ சூ கூன் அவர்களுக்கும் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிருக்கும் மாண்புமிகு பி.கே.சுப்பையா அவர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் 'தமிழுயிர்' வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

  • ஆய்தன் : மற்ற மாநில ஆட்சிக்குழு செவிகளில் நம்மின மாண்புமிகுகள் இதைப்பற்றி சங்கு ஊதலாமே!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2007

தமிழை மறந்த தமிழ் வாத்தி!


தமிழ் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய பெண் குழந்தைக்கு வைத்திருக்கும் பெயர் பற்றிய செய்தி ஒன்று எமக்கு மின்னஞ்சல் வழி வந்திருந்தது. அந்தத் தமிழ் வாத்தி தம் குழந்தைக்கு வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? 'ரோமனேஸ்வர்யா' என்பதுதான். இந்தப் பெயர் எந்த மொழி என்று அந்தத் தமிழ் வாத்தியும் அவர் மனைவியாகிய தமிழ் வாத்திச்சியும் அறியாமலா போனார்கள்? இவர்களின் ஆங்கில மோகம் அவமானத்திற்குரியது அல்லவா? இவர்களின் அன்னிய மொழி அடிமைப் புத்தி நகைப்புக்குரியது அல்லவா? தாய்மொழி மீது உயர்வெண்ணம் இல்லாத இவர்களின் தன்மானம் கேள்விக்குரியது அல்லவா? தமிழ் போட்ட பிச்சையில் இடைநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்களாகப் பணிபுரியும்(கூலிக்கு மாறடிக்கும்) இந்த இரண்டு தமிழ் வாத்தி இணையரின் மொழிப்பற்றை என்னவென்று சொல்லுவது? தன்னுடைய அரத்தத்திற்கு(இரத்தம்) பிறந்த குழந்தைக்குக்கூட நல்ல தமிழ்ப்பெயரை வைக்கத் தெரியாத அல்லது துணிவில்லாத இந்தத் தமிழ் வாத்திகள், அவர்களிடம் படிக்கும் எமது தமிழ் மாணவர்களுக்கு தமிழைக் கற்பிப்பது எங்ஙணம்? அல்லது அவர்கள் கற்பிப்பது தமிழாகத்தான் இருக்குமா? கொஞ்சம்கூட தாய்மொழி உணர்வோ பற்றோ இல்லாத இவர்களைப் போன்ற தமிழ் வாத்திகள் நிறையவே உள்ளார்கள் நம் நாட்டில். தாய் மொழிக்கான 'தார்மீக' பொறுப்பிலிருந்து தவறியிருக்கும் இவர்களைப் போன்றோர் தமிழால் பிழைப்பு நடத்துவது வெட்கக்கேடானது! தமிழ் வேண்டாம்; ஆனால் தமிழால் ஆயிரக்கணக்கில் வரும் ஊதியப்பணம் மட்டும் வேண்டுமா இவர்களுக்கு? இப்படி ஒரு கேவலமான பிழைப்பு தேவையா?

சமுதாயத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் ஆசிரியர்களே இப்படி பாமர மக்களைப் போல அறியாமையையும் ஆற்றாமையையும் கொண்டிருப்பது அவலத்திற்குரிய செய்தியாகும். மக்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி மொழிநலக் குருடர்களாக இருப்பது வேதனைக்குரியதாகும். போலியான நாகரிகத்தை நம்பி, படித்த பட்டப் படிப்பையும் அறிவையும் தன்மானத்தையும் விற்றுவிட்ட இதுபோன்ற தமிழ் வாத்திகள் எமது குமுகாயத்திற்குத் தேவையில்லை.

மேலே குறிப்பிட்ட தமிழ் வாத்திகளின் குருட்டுப் புத்திக்கும் அறிவுகெட்ட தனத்திற்கும் இன்னொரு எடுத்துக்காட்டும் உண்டு. அந்தக் குழந்தையின் பெயரைத் திரைச்சீலையில் பெரிதாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்களாம் இப்படி! ROOMANESHHWARRYA. இதனை எப்படித்தான் சரியாக படிப்பதோ தெரியவில்லை. குழந்தையின் பெயரில் கணியமும்(ஜாதகம்) எண்கணிதமும் புகுந்து விளையாடியிருக்கிறது என்பது மட்டும் நன்றாக புரிகிறது. படித்த தமிழன் புத்தி ஆரிய-ஆங்கில மலக்குழியில் சிக்கிச் சின்னபின்னமாகி போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.



  • ஆய்தன் : நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்! நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!

சனி, 4 ஆகஸ்ட், 2007

தமிழின் அடையாளம் தமிழ்ப்பள்ளி

இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் தமிழ்மொழியின்; தமிழினத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன. இனத்தின் அடையாளத்தை; தாய்மொழி உரிமையைக் காக்க வேண்டி தமிழ்ப்பள்ளிக்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகின்றது. ஆனால், சில தமிழ்ப்பள்ளிகளின் தலைவாசல்களை அலங்கரிக்கும் பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழி இடம்பெறவில்லை என்ற செய்தியைக் கேட்கும்போது வளர்ச்சிக்குள் ஒரு வீழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்ற அச்சமும் இதயத்தின் ஓரத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது.

தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழியில் பெயர்ப்பலகை இல்லை என்பது சிலருக்கு வேண்டுமானால் இயல்பான செய்தியாக இருக்கலாம். ஆனால், நாம் கடந்துவந்த பாதைகளை அலசிப்பார்த்தால், சிறு துளிதானே என்று எண்ணி சிந்திக்காமல் விட்டுவிட்ட குறைபாடுகள் எல்லாம் பின்னாளில் நமது அடையாளத்தை இழந்து நிற்பதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மைகள்.

ஒருவேளை, தமிழ்மொழியில் பெயர்ப்பலகை அணியம் செய்வது (தயாரிப்பது) பணவிரயம் என்று நினைக்கும் தரப்பினர் இருப்பார்களேயானால், அவர்கள் இழப்பது பணத்தை அல்ல! எதிர்கால தமிழ்மொழியின் உரிமையையும்தான்! நமது கட்டுப்பட்டுக்குள் இருக்கும் இந்த உரிமைக்கு உயிர் கொடுப்பதில் அலட்சியம் காட்டுவது நம் கண்களை நாமே குத்திக்கொள்வதற்கு ஒப்பாகும். மூலம்: மக்கள் ஓசை (26 சூலை 2007)
  • ஆய்தன் : தன்னைக் காக்கும் தமிழை, தான் காக்க மறந்தானை தூவென்று துப்புதல் தகும்!