வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 4 ஆகஸ்ட், 2007

தமிழின் அடையாளம் தமிழ்ப்பள்ளி

இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் தமிழ்மொழியின்; தமிழினத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன. இனத்தின் அடையாளத்தை; தாய்மொழி உரிமையைக் காக்க வேண்டி தமிழ்ப்பள்ளிக்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகின்றது. ஆனால், சில தமிழ்ப்பள்ளிகளின் தலைவாசல்களை அலங்கரிக்கும் பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழி இடம்பெறவில்லை என்ற செய்தியைக் கேட்கும்போது வளர்ச்சிக்குள் ஒரு வீழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்ற அச்சமும் இதயத்தின் ஓரத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது.

தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழியில் பெயர்ப்பலகை இல்லை என்பது சிலருக்கு வேண்டுமானால் இயல்பான செய்தியாக இருக்கலாம். ஆனால், நாம் கடந்துவந்த பாதைகளை அலசிப்பார்த்தால், சிறு துளிதானே என்று எண்ணி சிந்திக்காமல் விட்டுவிட்ட குறைபாடுகள் எல்லாம் பின்னாளில் நமது அடையாளத்தை இழந்து நிற்பதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மைகள்.

ஒருவேளை, தமிழ்மொழியில் பெயர்ப்பலகை அணியம் செய்வது (தயாரிப்பது) பணவிரயம் என்று நினைக்கும் தரப்பினர் இருப்பார்களேயானால், அவர்கள் இழப்பது பணத்தை அல்ல! எதிர்கால தமிழ்மொழியின் உரிமையையும்தான்! நமது கட்டுப்பட்டுக்குள் இருக்கும் இந்த உரிமைக்கு உயிர் கொடுப்பதில் அலட்சியம் காட்டுவது நம் கண்களை நாமே குத்திக்கொள்வதற்கு ஒப்பாகும். மூலம்: மக்கள் ஓசை (26 சூலை 2007)
  • ஆய்தன் : தன்னைக் காக்கும் தமிழை, தான் காக்க மறந்தானை தூவென்று துப்புதல் தகும்!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இந்தச் சிக்கலுக்கு உடனடி தீர்வு கண்ட பள்ளி நிருவாகத்தினருக்கு நன்றி.
-ஆய்தன்