வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2007

தமிழை மதிக்காத தமிழர்


தமிழுக்கு முன்னுரிமை தராத தமிழர் உணவகங்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ கோ.இராஜு வலியுறுத்தினார். நமது நாடு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மேம்பாடு கண்டு வருகின்றது. அதுபோலவே நம்மின மக்களும் வணிகத் துறை உள்பட பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். அவ்வாறு முன்னேறும் தமிழ் வணிகர்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே தங்களின் தாய்மொழி வளர்ச்சிக்கும் துணைநிற்க வேண்டும். ஆனால், நமது வணிகர்களே தங்கள் வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவது கிடையாது. முழுக்க முழுக்க தமிழர்களையே நம்பி தமிழர்களளே நடத்தும் உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிக்கடைகள், பூசை பொருள் கடைகள் முதலான நிறுவனங்கள்கூட தமிழைப் புறக்கணிப்பு செய்கின்றன. அத்தகைய நிறுவனங்களைத் தமிழர்கள் புறக்கணிப்பதில் தவறேதும் இல்லை. தமிழன் வீட்டுப் பணம் மட்டும் வேண்டும், ஆனால் தமிழ் வேண்டாம் என எண்ணமுடைய தமிழ் வணிகர்களால் தமிழுக்கு இழுக்கு ஏற்படுவது வருத்தமளிக்கிறது. இதே நாட்டில் வாழும் சீனர்கள் எத்துணைப் பெரிய வணிகம் செய்தாலும் எத்தனை கோடி பொருள் ஈட்டினாலும் தங்களின் தாய் மொழியை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுப்பதில்லை. தங்கள் நிறுவனங்களில் சீனமொழிக்கு முன்னுரிமை கொடுக்கத் தவறுவதில்லை. இப்படிப்பட்ட சீன குமுகாயத்தோடு ஒட்டி வாழும் நம்மவர்களுக்கு மட்டும் ஏன் மொழியுணர்வு இருப்பதில்லை. சீனர்களைப் பார்த்தாவது மொழிச்சுரணை வரவேண்டுமல்லவா? (நன்றி : மக்கள் ஓசை செய்தி 6 ஆகத்து 2007)

  • ஆய்தன் : தமிழைப் புறக்கணிக்கும் வணிக நிறுவனங்களைப் புறக்கணிப்புச் செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கப் பொது அமைப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: