வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 2 பிப்ரவரி, 2009

மலேசியத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்


சிறி லங்காவில் படுகொலை செய்யப்பட்டுவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அத்தமிழ் இன அழிப்பிற்கு ஆதரவு வழங்கும் இந்திய அரசின் கொள்கையைக் கண்டித்தும், தமிழ் நாட்டு இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்தார். உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு நேற்று மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் சிங்கள அரசாங்கம் தமிழ் இனத்தைப் படுகொலை செய்து வருகிறது. சிறி லங்கா அரசின் அப்படுகொலையை தடுத்து நிறுத்த தமிழக அரசு தவறிவிட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். இந்திய அரசாங்கம் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்குத் தேவையான ஆயுதங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

ஈழத்தில் நடக்கும் தமிழினப் படுகொலை நிறுத்தப்பட வேண்டும். தாயகத் தமிழர்கள் தமிழின மானம் காக்கப் புறப்பட வேண்டும். அதற்காக தமிழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாற வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தன்னையே தீப்பிழம்பாக்கிக் கொண்டார் முத்துக்குமார்.

முத்துக்குமார் செய்த தியாகம் “தமிழினப் போராட்டம் தொய்வடையாது, ஓயாது என்பதை உறுதிப்படுத்துகிறது”, என்று முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் இரங்கல் உரையாற்றிய உலகத் தமிழர் நிவாரண அறவாரியத்தின் அறங்காவலர் சி. பசுபதி கூறினார்.

சுமார் 300 பேர் கலந்து கொண்ட முத்துக்குமார் வீரவணக்கம் நிகழ்வு நேற்று இரவு மணி 8.30 க்கு கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் நடைபெற்றது.
இரங்கல் உரைகளுக்கிடையே தியாகி முத்துக்குமாருக்கு மரியாதையும் வீரவணக்கமும் தெரிவிக்கும் கவிதைகள் வாசிக்கப்பட்டன.

சிங்கள ஆட்சியாளரின் கபட நாடகம்

தமிழினப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஓடுக்க வேண்டும், தமிழர்களை அழிக்க வேண்டும் என்று சிங்கள அரசு நடத்தும் போரை எதிர்த்துப் போராடுகிறார் தலைவர் பிரபாகரன் என்று பசுபதி கூறினார்.


“தலைவர் பிரபாகரன் அவருடைய மாவீரர் தின உரையில் இந்தியாவின் ஆதரவைக் கோரினார். ஆனால், இந்திய அரசாங்கம் சிங்கள அரசுக்கு ஆதரவான, தமிழினப் போராட்டத்திற்கு எதிரான கொள்கையை பின்பற்றி வருகிறது”, என்று அவர் கூறினார்.

சிறி லங்கா அரசு நடத்திக் கொண்டிருக்கும் போரில் பொதுமக்கள் தாக்கப்படவில்லை; அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது; வழங்கப்படும் பாதுகாப்பிற்கு குறுக்கே நிற்பது புலிகள்தான், என்று பரப்புரை செய்து நாடகமாடி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“ஈழத் தமிழ் மக்கள் படுகொலையை நிறுத்த முன்வராமல் அக்கொலைக்கு ஆதரவு அளிக்கும் இந்திய அரசையும், தமிழக மக்களை ஏமாற்றி வரும் தமிழக அரசையும் கண்டித்து, தமிழர்களின் மானம் காக்க, ஈழத் தமிழர்களின் உயிரையும் உரிமையையும் காக்க தமிழக மக்கள் எழுச்சி பெற வேண்டும், உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்பதற்காக தீக்குளித்தார் தமிழக இளைஞர் முத்துக்குமார். அவ்வீரனுக்கு நாம் இன்று வீரவணக்கம் செலுத்துகிறோம்”, என்று பசுபதி கூறினார்.

முத்துக்குமாருக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவது உண்மையென்றால், ஈழத் தமிழர்களுக்கான நமது போராட்டம் தொடர வேண்டும் என்று அறைகூவல் விடுத்த பசுபதி, வரும் வெள்ளிக்கிழமை பெப்ரவரி 6 ஆம் தேதி டூத்தா சாலையில் (ஜாலான் டூத்தா) இருக்கும் இந்தியத் தூதரகத்தின்முன் நடைபெற விருக்கும் இந்திய அரசிற்கு எதிரான ஆட்சேபக் கூட்டத்தில் கலந்துகொள்ள பெரும் திரளாக வருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

நம் இதயத்தில் முத்துக்குமார்

தமிழக இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து இறக்கவில்லை. நமது நெஞ்சங்களில் தீப்பிழம்பாக நிறைந்துள்ளார். “நாம் நாதியற்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு இனி அந்த நிலை கிடையாது என்று பரைசாற்றியிருக்கிறார், முத்துக்குமார்”, என்று முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழ் நெறிக் கழகத்தின் ஆலோசகர் தமிழ் அழகன் கூறினார்.

தமிழகத்தின் மூலைமுடுக்களில் எல்லாம் இளைஞர்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டுள்ளனர். தமிழகம் பழையத் தமிழகமாக இருக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார் முத்துக்குமார் என்று அவர் கூறினார். “சலுகை கேட்கும், மனு கொடுக்கும் இனமாக நாம் இருந்து வந்துள்ளோம். அந்த நாடகம் இனி நடத்த முடியாது”, என்றாரவர்.

“அரசியல் விடுதலை, தமிழ் ஈழம் பிறப்பு, இவைதான் நமது எதிர்காலம்.”
“இது பிரபாகரன் காலம். போராடுவது புலிகளின் பங்குமட்டுமல்ல. நமக்கும் பங்குண்டு என்பதை முத்துக்குமார் நிரூபித்துள்ளார். தனது உயிரைக் கொடுத்து தமிழர்களைத் தட்டி எழுப்பியுள்ளார்”,
என்று தமிழ் அழகன் கூறினார்.

ஆணையாத தீபமாய் தொடர்ந்து போராடுவோம்

இன்றையச் சூழ்நிலையில், தமிழ் ஈழப் போராட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அது தோல்வியல்ல. நாம் தொடர்ந்துப் போராடுவோம் என்று மலேசியத் திராவிடக் கழகத்தின் தலைவர் ரெ.சு முத்தையா கூறினார்.
“முத்துக்குமாரின் தியாகத்தை மதிக்கிறோம், தலை வணங்குகிறோம். ஆனால், தமிழன் எரிந்து கொண்டே போகக்கூடாது, ஏனென்றால் ஆள் இல்லாமல் போய்விடும்”, என்றாரவர்.

“பிரபாகரனுக்கு நாம் உதவ வேண்டும். போராட்டத்திற்கு நாம் உதவ வேண்டும் என்ற நமது எண்ணத்திற்கு முத்துக்குமார் புத்துயிர் ஊட்டியுள்ளார்”, என்று அவர் மேலும் கூறினார்.

தமிழன் மீண்டும் எழுச்சி பெறக்கூடாது என்பது பலரின் விருப்பம். அக்கருத்தை முறியடிக்க பொதுமக்கள் எழுச்சி பெற வேண்டும். இந்நாட்டு தமிழர்களுக்கும் ஆபத்து உண்டு என்று அவர் எச்சரித்தார்.

வெளிநாட்டிலிருந்து, வீட்டிலிருந்து ஆதரவு

தமிழ் ஈழ மக்கள் சிங்கள இனவெறியை எதிர்த்துப் போராடும் திண்மையை விவரித்த மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வுத்துறை ஆய்வாளர் குமரன், ஈழப் புலிகளுக்கு ஆதரவு தேவைப்படுகிறது என்றார்.

உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களிடமிருந்து ஈழப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்பார்ப்பது ஆயுதங்கள் அல்ல, பொருள் அல்ல. உலகத் தமிழர்களிடமிருந்து பிரபாகரன் கோருவதெல்லாம் “இருக்கும் நாட்டிலிருந்து, வீட்டிலிருந்து ஆதரவுக் குரல் கொடுங்கள்”, என்பதுதான் அவரின் கோரிக்கை என்று குமரன் கூறினார்.

தலைவர் பிரபாகரனின் கோரிக்கைக்கு தமிழக முத்துக்குமார் புத்துணர்வு அளித்துள்ளார்; உணர்சி அலைகளைத் தூண்டி விட்டுள்ளார் என்று முத்துக்குமாருக்கு வீரவணக்கம் தெரிவித்த குமரன் கூறினார்.

குமரன் ஒன்றை நினைவு கூர்ந்தார், "போராட்டம் நடந்து கொண்டிருக்கும் ஈழத்தை விட்டு பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். சுகமான, வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். நம்முடைய நாட்டிலும் அவ்வாறான சூழ்நிலை இருக்கிறது.”

கடுந்தொனியில் கண்டனம்

முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி இரங்கல் உரையாற்றிய தொழிலதிபர் சாமுவேல்ராசு மற்றும் தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கே உரித்தான சிம்மக் குரலில் சிறி லங்காவில் நடந்து கொண்டிருக்கும் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்தனர்.
தமிழக அரசையும், இந்திய அரசையும் மிகக் கடுமையாகச் சாடினர். தமிழக முதல்வர் ஒரு கோழை என்றார் சாமுவேல்ராசு. அவர் தமிழனே அல்லர் என்று இடித்துரைத்தார் திருமாவளவன்.

முத்துக்குமார் என்ற ஒரு தமிழக இளைஞரின் தியாகம் உலகமுழுவதிலுமுள்ள தமிழர்களின் உணர்வுகளைத் தட்டி விட்டுள்ளது. தீக்குளிப்பதற்குமுன் முத்துக்குமார் எழுதியிருந்த அவரின் சாசனம் முழுவதையும் வாசித்து தனது கருத்தை வெடித்துக் கொட்டிய திருமாவளவன், “நாம் இனிமேல் இந்தியர்கள் அல்லர்; நாம் தமிழர்கள்”, என்று இடிமுழக்கம் செய்தார்.

காப்பாரிலும் வீரவணக்கம் தெரிவிக்கப்பட்டது

தீக்குளித்த தமிழக இளைஞர் முத்துக்குமாருக்கு சிலாங்கூர், காப்பார் நகரிலும் வீரவணக்கம் செலுத்த்ப்பட்டது. காப்பார் மாரியம்மன் ஆலையத்தில் மாலை மணி 7.30 க்கு தொடங்கிய வீரவணக்க நிகழ்வில் தமிழ் அறவாரியத்தின் நிருவாக இயக்குநர் இளந்தமிழ் சிறப்புரை ஆற்றினார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இந்நிகழ்வுக்கு தலைமையேற்று முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினார். இறுதியாக, முத்துக்குமாருக்கு வீரவணக்கம் கூறி, நன்றியுரை வழங்கினார் நகராட்சிமன்ற உறுப்பினர் எல். சேகரன்.

@ஆய்தன்:-
தமிழா ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு!
தமிழுக்காக ஒன்றுபடு!
தமிழர் நலனுக்காக ஒன்றுபடு!
தமிழீழ விடுதலைக்காக ஒன்றுபடு!
  • நன்றி: மலேசியாஇன்று.காம்

கருத்துகள் இல்லை: