வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 20 ஜூன், 2008

கல்வி கற்கத் தமிழ் மாணவருக்குத் தடை!


பிறப்பு பத்திரம் இல்லாத தமிழ்ச் சிறுவர்கள் பள்ளியில் சேர அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்கள். இச்செயல் அச்சிறுவர்களின் பிறப்புரிமையைப் பறிப்பதாகும்.

சிறுவர்கள் கல்வி கற்பதற்கான உரிமையை எக்காரணத்திற்காகவும் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்று இன்று காலை 11.00 மணிக்கு தமிழ் அறவாரியத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கல்வி,பொதுநல ஆய்வு அறவாரியத்தின் (EWRF) தலைவர் சி. பசுபதி கூறினார்.

அவரைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் பேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன், “தேர்தலுக்குமுன் கல்வி அமைச்சர் எக்காரணத்திற்காகவும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். தேர்தல் முடிந்து விட்டது. ஆனால், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பிறப்பு பத்திரம் இல்லை என்ற காரணத்திற்காக பள்ளியில் சேருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை; சேர்க்கப்பட்டிருந்தவர்கள் நீக்கப்படுகிறார்கள். இச்செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்”, என்று கூறினார்.

பிறப்பு பத்திரம் இல்லை என்ற காரணத்தால் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் ஏற்படும் சிக்கல் எல்லா இனத்தவரையும் பாதிக்கிறது என்ற போதிலும் மிக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மாணவர்களே.

  • மன்னிக்க முடியாத குற்றம்

எந்த இனத்தவர் என்பது பிரச்னை இல்லை. எந்த குழந்தையும் பள்ளிக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படக்கூடாது. பிறப்பு பத்திரம் இல்லாதிருப்பது குழந்தையின் தவறல்ல. பிறப்பு பத்திரம் இல்லாத குறைக்கு குழந்தையைப் பள்ளியில் சேர்க்க மறுப்பது அக்குழந்தையைத் தண்டிப்பதாகும். இச்செயல் மடைமையிலும் மடைமையாகும். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார் பசுபதி.

நடந்த தவறுக்கு தீர்வு காண வேண்டுமேயன்றி பள்ளியில் இருக்க வேண்டிய மாணவர்களை வீதிக்கு விரட்டியடிக்கக்கூடாது. பிறப்பு பத்திரம் இல்லாதிருப்பது ஒரு பழையச் சிக்கல். ஆனால், இந்தச் சிக்கல் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

சிலாங்கூரில் பல பள்ளிகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பதுடன் சேர்க்கப்பட்டிருந்த மாணவர்களை வெளியேற்றியுள்ளன. ஜாலான் காப்பாரிலுள்ள வாலம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி, மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுடன இன்னும் பல பள்ளிகள் இருக்கின்றன. நிலைமை மோசமடைவதற்குமுன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • வேட்டு வைப்பார்கள்

“தெருவில் தூக்கி எறியப்படும் மாணவர்கள் தெருவுக்கே வேட்டு வைப்பார்கள் என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்”, என்று எச்சரிக்கை விடுத்த கா. உதயசூரியன் இவ்விவகாரத்திற்கு ஒரு தீர்வு காண தமிழ் அறவாரியமும் கல்வி, பொதுநல ஆய்வு அறவாரியமும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

  • இனியும் பொறுக்கமுடியாது

“தமிழ் மாணவர்கள் அவர்கள் செய்யாத தவறுக்காக தண்டிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள நமது சமுதாயம் இனிமேலும் தயாராக இல்லை”, என்று திட்டவட்டமாக பசுபதி கூறினார். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கல்வி அமைச்சர் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

கல்வி அமைச்சர், கல்வித் துறை, தமிழ்ப்பள்ளிகள், அரசு சார்பற்ற அமைப்புகள் இவ்விவகாரத்தைத் தீர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு, எல்லா வகையிலும் ஒத்துழைக்க தமிழ் அறவாரியமும் கல்வி, பொதுநல ஆய்வு அறவாரியமும் தயாராக இருப்பதாக பசுபதியும் உதயசூரியனும் உறுதியளித்தனர். தேவைப்பட்டால், மாநில அளவிலும் நாடுதழுவிய அளவிலும் பிறப்பு பத்திரம் இல்லாத குழந்தைகளின் பெற்றோர்களின் கூட்டத்தை நடத்தவும் தயாராக இருப்பதாக அவர்கள் இருவரும் அறிவித்தனர்.

  • தொடர்பு கொள்ளுங்கள்

பிறப்பு பத்திரம் இல்லை என்ற காரணத்திற்காக எந்த ஒரு மாணவராவது பள்ளியில் சேர்க்கப்படாவிட்டாலோ அல்லது பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாலோ, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள், உறவினர்கள் அல்லது ஈடுபாடுடையவர் தமிழ் அறவாரியத்துடன் அல்லது கல்வி, பொதுநல ஆய்வு அறவாரியத்துடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு பசுபதியும் உதயசூரியனும் வேண்டுகோள் விடுத்தனர்.

  • நன்றி: மலேசியா இன்று

@ஆய்தன்:
தனியொரு மனிதனுக்குக் கல்வி இல்லையேல்
சகத்தினை அழித்திடுவோம் என இனி பாடவேண்டுமோ?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என்ன கொடுமை ஐயா இது!