வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 2 ஜூன், 2008

புதிய எழுச்சியை நோக்கித் தமிழ்ப்பள்ளிகள்


2008 மார்ச்சு 8க்குப் பின்னர், எமது நாட்டுத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் புதிய எழுச்சி ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

  • 'பந்துவான் மோடால்' எனப்படும் பகுதி உதவிபெறும் பள்ளிகள் 'பந்துவான் புனோ' என்ற முழு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றம் காணுகின்ற சூழ்நிலைகள் மலர்ந்துள்ளன.

  • பல்லாண்டுகளாக கேட்பாரற்றுக் கிடந்த தமிழ்ப்பள்ளிகளின் தலைவிதிகள் நல்ல நிலைமைக்கு மாறிக் கொண்டிருக்கின்றன.

  • எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தத்தளித்துக் கொண்டிருந்த தமிழ்ப்பள்ளிகளின் மீது தலைவர்கள் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர்.

  • தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்த 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' அமைக்கத் திட்டமிடுகின்றனர்.

  • தமிழ்ப்பள்ளிகளைச் சீரமைப்பதற்கு கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.

இத்தனைக்கும் இடையில், கடந்த 50 ஆண்டுகளில் என்றுமே இல்லாத வகையில் புதிதாக இரண்டு தமிழ்ப்பள்ளிகளைக் கட்டுவதற்கான உரிமத்தை(லைசன்சு) அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பானது, தமிழரிடையே அதிர்ச்சிகலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இதற்கு முன் பொதுமக்களும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என பல காலமாகவே கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், குமுகாயத்தின் அந்தக் காட்டுக்கத்தல்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய் முடிந்துள்ளன.

தமிழ்ப்பள்ளிகளுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நினைப்பு எல்லாரிடமும் அறவே அற்றுப்போய்விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், புதிதாக இரண்டு தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு உரிமம் என்ற அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. தேசிய நீரோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருந்த தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இதனைக் கருதலாம். இந்த இரண்டு உரிமங்களைக் கொண்டு பேரா, சுங்கை சிப்புட்டில் ஒரு பள்ளியும், கெடா பாயா பெசாரில் ஒரு தமிழ்ப்பள்ளியும் கட்டப்பட உள்ளன.

பல ஆண்டு போராட்டங்களுக்குப் பின்னர் இந்த வெற்றியை பெற்றுள்ளதாக ஓர் அரசியல் கட்சி தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. அதே வேளையில், அரசியல் சுனாமியை ஏற்படுத்தியுள்ள மக்கள் கூட்டணி, மக்கள் சத்தி ஆகியவற்றின் எழுச்சியால் கிடைத்ததுதான் இந்த வெற்றி என குமுகாயம் நம்பிக் கொண்டிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும், என்றுமே இல்லாத அளவுக்கு இப்போது தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய எழுச்சியும் புதிய விடியலும் ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 800இருந்து 523ஆக சுருங்கிப் போய்விட்டன. இந்த நிலைமை இனிமேலும் கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி, அதுவும் தேய்ந்து சிற்றெறும்பான கதையாகி விடக்கூடாது.

இனிவரும் 50 ஆண்டுகளுக்கு இப்போது இருக்கும் 523 தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றைக்கூட இழந்துவிடாமல் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். காரணம், தமிழ்ப்பள்ளிகள் நமது உரிமையாகும்.

@ஆய்தன்:
தமிழ்ப்பள்ளி இருக்கும் வரை - இந்நாட்டில்
தொடரும் தமிழர்தம் வாழ்வுரிமை!

கருத்துகள் இல்லை: