வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 16 நவம்பர், 2008

சிறீலங்காவைக் கண்டித்து மலேசியத் தமிழர்கள்

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கடந்த 14-11-2008இல் பிற்பகல் 2மணி அளவில், மலேசியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் ஏறக்குறைய இரண்டாயிரம் தமிழர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி நடத்தினர்.

மலேசியத் தமிழர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள், அரசு சார்பற்ற இயக்கங்கள், சமுக அமைப்புகள், தமிழ்ப்பற்றாளர்கள், தனியாட்கள் என பல்வேறு தரப்பு தமிழ் மக்கள் அணிதிரண்டு வந்து இந்தக் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர்.

கடந்த 2007இல் நவம்பர் 25ஆம் நாள் நடந்த மாபெரும் உரிமைப் போராட்ட பேரணியில் சற்றேறக்குறைய ஐம்பதாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டு நாட்டை மட்டுமல்லாது உலகத்தையே அதிரவைத்த வரலாறு படைத்தனர். அதன்பிறகு, அதிகமான தமிழர்கள் ஒன்றுகூடிய மாபெரும் கண்டனப் பேரணியாக இந்தப் பேரணி அமைந்தது.

"ஈழத்தமிழர்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்".
"அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி"
போன்ற பதாகைகளைக் காணமுடிந்தது.

"கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே" என்று வானமே அதிரும் வகையில் உரக்க முழக்கமிட்டனர்.

இறுதியில், இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் கண்டனத் தீர்மானம் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் கொலைவெறிபிடித்த சிறீலங்கா அரசுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் கலந்துகொண்ட முன்னணித் தலைவர்கள் சிலரின் முழங்கங்கள் பின்வருமாறு:-

1)துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்:- நாட்டில் கடசி, இயக்கம், மொழி, இனம் ஆகிய வேற்றுமைகளை மறந்து மலேசியத் தமிழர் அனைவரும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது பாராட்டுக்குரியது. இரண்டாவது முறையாக நாம் நமது ஒற்றுமையைக் காட்டி உள்ளோம். இந்த ஒற்றுமை தொடர்ந்தால் மலேசியத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் யாரும் அசைக்க முடியாது.

2)மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா:- ஈழத்தில் நடக்கும் வன்கொடுமைகளை கண்டு மானமுள்ள தமிழர்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இனியும் தமிழன் உதைபடுவதைவிட அவன் உயர்வதற்குரிய வழிகளைக் காண வேண்டும். தமிழ் ஈழம் மலரும் நாளே தமிழர்களின் துயர் தீரும் நாளாகும்.

3)மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன்:- உலக வரலாற்றில் சொந்த மக்களை சித்திரவதை செய்யும் கொடிய அரசாங்கம்; இறையாண்மை பேசிக்கொண்டே நாட்டு மக்களை பட்டினிப் போட்டுக் கொல்லும் வஞ்சக அரசாங்கம் இலங்கை அரசாங்கமாகத்தான் இருக்கும்.

4)உலகத் தமிழர் நிவாரணநிதி மையத் தலைவர் வழக்கறிஞர் பசுபதி:- இலங்கை அரசாங்கம் பகிரங்க பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழர் படுகொலை, பொதுமக்கள் சித்திரவதை போன்ற மனித உரிமை அத்துமீறல்களை உடனே அந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

5)மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் பி.பொன்னையா:- இலங்கை அரசாங்கம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நிறுத்தும் வரையில் மலேசியத் தமிழர்கள் யாரும் இலங்கைப் பொருள்களை வாங்கக் கூடாது. குறிப்பாக, ஏர் லங்கா ஏர்லைன்சு விமானச் சேவை, சிறீகங்கா தேயிலை போன்றவற்றை புறக்கணிக்க வேண்டும்.

6)உலகத் தமிழர் மாமன்றப் பொதுச் செயலர் எசு.பி.மணிவாசகம்:- "மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். ஆனால், குடிசையிலிருந்து துப்பினால் மாடியே விழும்" என்று ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் கூறியது விரைவில் நடக்கப் போகிறது. மலேசியத் தமிழர்களின் இந்த உணர்வுப்பூர்வமான கண்டனம் அதிபர் இராசபக்சேவை தட்டியெழுப்ப வேண்டும். தமிழர்களுக்கு இன்னல் என்றால் ஒவ்வொரு தமிழனும் துடித்தெழ வேண்டும்.

7)தமிழர் உதவும் கரங்கள் சமூக இயக்கத் தலைவர் முரளி:- சொந்த நாட்டிலேயே அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் எங்கள் இயக்கத்தினர் ஒருநாள் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொள்கிறோம்.

மலேசியத் தமிழர்களின் இந்தக் கண்டனக் குரல் சிறீலங்கா அரசின் மரத்துப்போன காதுகளுக்கு எட்டவேண்டும்..!

ஈழத் தமிழர்களுக்காக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வெளிப்படுத்தும் கண்டனக் குரல்கள் சிங்கள மரமண்டைகளைத் தட்ட வேண்டும்..!

உலகத் தமிழர்களின் அழுகையும் கண்ணீரும் சிறீலங்கா கொலைவெறியர்களின் இரக்கமற்ற இதயத்தைப் பிளந்துப் போட வேண்டும்..!


@ஆய்தன்:-
இயற்கையும் இறைமையும் இருப்பது உண்மையென்றால்...
தமிழரின் இன்னல்கள் மறைந்து போகட்டும்!
தமிழரின் துயரங்கள் தொலைந்து போகட்டும்!
தமிழரின் விடுதலை விரைவில் வரட்டும்!
தமிழரின் தனிநாடு தமிழீழம் மலரட்டும்!

கருத்துகள் இல்லை: