வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 29 ஜனவரி, 2009

ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழக இளைஞர் தீக்குளிப்பு




இலங்கையில் தமிழருக்கு எதிராக நடக்கும் உச்சக்கட்ட போரில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழக இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.


உயிரை உறையவைக்கும் இந்தச் செய்தி உலகத் தமிழர் அனைவரையும் உலுக்கியுள்ளது; உணர்வுள்ள தமிழரின் உள்ளத்தைக் கலங்கடித்துள்ளது; ஒவ்வொரு தமிழனுக்கும் கண்ணைத் திறந்துள்ளது.

விரிவாகப் படிக்க கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.

1.ஈழத்தமிழர் படுகொலை: தமிழக இளைஞர் முத்துக்குமார் தீக்குளிப்பு

2.தீக்குளித்த முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்

3.இனமானத் தமிழன் முத்துக்குமார் பற்றி சில வரிகள்...

4.முத்துக்குமாரின் தீக்குளிப்பும் சில கருத்துகளும்

5.ஒரு பேனா தீக்குச்சியானது - இரங்கற்பா

6.கண்ணீரை அடக்க முடியவில்லையே தோழா..

7.ஈழத்திற்காகத் தீக்குளித்துத் தியாகியானான் ஒரு தமிழன்

8.உடன்பிறப்பே முத்துக்குமாரா.. நீ யார்?

ஈழத்தமிழன் உயிர்காக்க தமது இன்னுயிரை ஈகப்படுத்திக்கொண்ட இளைஞர் முத்துகுமாரின் ஆதன்(ஆத்மா) அமைதிபெற தமிழர் அனைவரும் இறைவனை இறைஞ்சுவோம்.

குறிப்பு:-ஈழத்தமிழர் சிக்கல் என்பது, உண்மை உணர்வுள்ள தமிழர்களின் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் உணர்ச்சிமயமான - உருக்கமான - உயிர்ப்போராட்ட சிக்கல்தான். இருந்தாலும்கூட, இதுபோன்ற முடிவுகளை எவரும் நாடவேண்டாம் என தமிழுயிர் அன்பொழுக வேண்டிக்கொள்கிறது.

@ஆய்தன்:-
ஈழத்தில் போர் ஓய்ந்து - தமிழர்
இன்னுயிர்கள் வாழட்டும்...!
எங்கிருக்கிறாய் இறைவா..? - தமிழர்
இன்னல்கள் தீரட்டும்...!!

8 கருத்துகள்:

தமிழ் ஓவியா சொன்னது…

முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.

இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:

“அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:
சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்

தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு
அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!
தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.

எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

———நன்றி “விடுதலை” 29-1-2009

Sathis Kumar சொன்னது…

இவர் நினைத்திருந்தால் ஒரு மனித உரிமைப் போராளியாக சிறப்பாக சமுதாயத்திற்கு செயலாற்றியிருக்க முடியும். தீக்குளித்து உயிரை விட்டதில் என்ன பயன்? சமுதாயத்திற்கும் பயனில்லாது காலத்தால் மறக்கடிக்கப்பட்டு விடுவாரே...

இவரின் வாக்குமூலம் சர்வாதிகார அரசு காதுகளில் கேட்குமா? என்றுமே அஞ்சி வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு பயனுள்ளதாய் அமையுமா?

போரில் உயிரை விட்டிருந்தாலாவது பாராட்டலாம். ஆனால் தீக்குளிப்பு செய்து சாதித்தது என்ன?

இனி உயர் துறக்க எண்ணம் கொண்டால், அவ்வுயிர் போர்க்களத்தில் போகட்டும்!

மகனை, சகோதரனை இழந்த அவரது குடும்பத்தினருக்கும், போராட்டவாதியை இழந்த தமிழ் சமுதாயத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆதவன் சொன்னது…

@சதீசு குமார்,

//போரில் உயிரை விட்டிருந்தாலாவது பாராட்டலாம். ஆனால் தீக்குளிப்பு செய்து சாதித்தது என்ன?//

இந்தக் கூற்றை உயிரோடு இருக்கும் 'முத்துக்குமார்களுக்கு' வேண்டுமானால் பயனளிக்கும். ஆனால், உள்ளத்தின் மிக ஆழத்தில் உணர்வுகளால் கடுமையாக அழுத்தப்படும்போது இரண்டு வகை முடிவுகளே நமது தேர்வாக இருக்கும்.

ஒன்று, எதையாவது செய்ய வேண்டும்.

மற்றொன்று, செத்து மடிய வேண்டும்.

முத்துக்குமாரின் மரண அறிக்கையையும் உயிர்ப் பிரியும் முன்னர் அவர் வழங்கிய வாக்குமூலத்தையும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

அவர் எத்துனை தெளிவோடும் உறுதியோடும் இந்த முடிவை நாடியுள்ளார் என புரியும்.

தயவுகூர்ந்து இந்த இணைப்பில் ஐயா.நாக.இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ளதையும் படிக்கவும்.

http://nayanam.blogspot.com/2009/01/blog-post_4033.html

போரில் உயிரை விடுவது எவ்வளவு வணக்கத்திற்கு உரியதோ.. அந்த அளவுக்கு முத்துக்குமாரின் துணிவும் வணக்கத்திற்குரியதே..!

புறநிலையில் போராடுபவர்கள் போலவே.. அகநிலையில் உண்மையாகப் போராடுபவர்களும் வீரவணக்கத்திற்குரிய போராளிகளே..!

போர்க்களங்கள் மண்ணில் மட்டுமல்ல.. பல வேளைகளில் மனத்தில் அமைவதுண்டு..!

ஆதவன் சொன்னது…

@தமிழ் ஓவியா,

தமிழீழம் நம்மை உறவுகளாக இணைத்துள்ளது.

//வெறுமனே, "எனக்கு இதில் உடன்பாடு இல்லை,
நான் தற்கொலையை வெறுக்கிறேன் - இது
கோழைத்தனம்..." என்றெல்லாம் நினைப்பதை
விட்டு விட்டு, அவன் உணர்வினைப் போற்றவேண்டும்.
அதனை மதிக்க வேண்டும். நாமும் உணர்வு கொள்ள
வேண்டும். அதுவே அந்த ஆன்மாவுக்கு நாம்
செய்ய வேண்டிய மரியாதை.//

இப்படிச் சொன்னவர் நயனம் வலைப்பதிவின் ஐயா.நாக.இளங்கோவனார்.

இதில் ஆழமான பொருள் புதைந்துள்ளதாகவே நானும் கருதுகிறேன்.

Unknown சொன்னது…

//அவர் எத்துனை தெளிவோடும் உறுதியோடும் இந்த முடிவை நாடியுள்ளார் என புரியும்.//

அவரது அறிக்கையில் தெளிவும் உறுதியும் இருக்கலாம். அதே தெளிவோடும் உறுதியோடும் தொடர்ந்து போராடியிருக்கலாம். தீக்குளித்துதான் எதனையும் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.

பெயரில்லா சொன்னது…

அன்புத் தமிழர்களே!

சகோதரர் முத்துக்குமாரின் உயிர்தியாகத்தை மதிக்கும் அதேவேளை , இதன் பின்விளைவுகளை சற்று ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இதுவரை நாடகமாடிவரும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் இந்தியத் தலைவர்களும் இதனால் திருந்திவிடுவார்களா? கையில் நெய்யை வைத்துக்கொண்டு வெண்ணெய்க்கு அலைவது போலல்லாவா இருக்கிறது தமிழக அரசியல் தலைவர்கள் / தமிழக அரசாங்கத்தின் போக்கு. ஆற்றலைத் தங்களிடத்த்தே வைத்துக்கொண்டு மத்திய அரசாங்கத்திடம் கெஞ்சுவது பேரவலமல்லவா! எப்போதோ செய்திருக்க வேண்டியதை தற்போது செய்வத்போல நடிப்பது இனத்துக்கு செய்யும் துரோகமல்லவா! வள்ளுவர் அன்றே சொன்னாரே " செய்தக்க அல்ல செயக்கஎடும் செய்தக்க செய்யாமையானும் கெடும்" இது தெரியாதா உலகத் தமிழினத் தலைவர் என அழைக்கப்படுகிறவருக்கு !! ( எல்லாருமே சுயநலவாதிகள் என்றல்லவா நிரூபித்திருக்கிறார்கள்) . எத்தனை முத்துகுமார்கள் தோன்றினாலும் இவர்கள் திருந்துவது இயலாத காரியம் எனவே அன்புத் தமிழ் உள்ளங்களே , முத்துக்குமாரின் உயிர்தியாகத்தை மதிப்போம். இருப்பினும் இதுப்போல இன்னுயிரை இளையோர் அழுத்துக்கொள்ளாமல் காப்போம் .

அன்புடன்,
சமு

ஆதவன் சொன்னது…

@குரு

//அவரது அறிக்கையில் தெளிவும் உறுதியும் இருக்கலாம். அதே தெளிவோடும் உறுதியோடும் தொடர்ந்து போராடியிருக்கலாம். தீக்குளித்துதான் எதனையும் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.//

தீக்குளித்து இருப்பதும் ஒரு போராட்டமே என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

முத்துக்குமார் தம் மரண அறிக்கையில்,

//அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்.//

என்று தன்னுடைய மரணமே ஒரு போராட்டம்தான் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

மேலும்..

//நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள்//

என்றும் நமக்கெல்லாம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

முடிந்தால் அதனைச் செய்வோம்.

அதைவிட்டு.. தமிழகச் சுயநலமிகள் சிலரும்.. ஓட்டுப்பொறுக்கிகள் சிலரும்.. அந்த ஓட்டுப் பொறுக்கிகளின் அரசியல் அடிவருடிகளாக இருக்கும் வலைப்பதிவர்கள் சிலரும்.. தமிழின மொழி மானங்கெட்ட வலைப்பதிவர்கள் சிலரும்.. சிங்களவனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் சிலரும்.. மிக முக்கியமாக தமிழ்ப்பகைவர்கள் சிலரும்.. முத்துக்குமாரின் உயிர் ஈகத்தை மாசுபடுத்தி - திசைதிருப்பும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Sathis Kumar சொன்னது…

//தீக்குளித்து இருப்பதும் ஒரு போராட்டமே என்பதை புரிந்துகொள்ளுங்கள்.//

இது ஒரு தவறான கருத்தாகும். போராட்டத்தை கையிலெடுப்பதற்கு எத்தனையோ ஆக்ககரமான வழிகள் பல உண்டு. இவரின் தீக்குளிப்பை ஆதரிப்பவர்களும் சரி, அதை வைத்து அரசியல் செய்பவர்களும் சரி, காலாகாலத்துக்கும் முத்துகுமாரின் குடும்பத்தை எவரும் வந்து எட்டிப் பார்க்கப் போவதில்லை.

போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்றுமே பிறருக்கு நல்லதொரு உதாரணமாக திகழ வேண்டுமே ஒழிய, தவறான பாதையினைக் காட்டிவிடக் கூடாது.

முத்துகுமார் தீக்குளித்ததை அடுத்து இன்று அவரின் பாணியைப் பின்பற்றி மற்றொருவரும் தீக்குளித்திருக்கிறார். உயிரை இப்படி வெறுமனே மாய்த்துக் கொள்வதில் ஒன்றையும் சாதித்துவிட முடியாது.

சொந்த உயிரை இப்படி மாய்த்துக் கொள்ளுதலும் ஒருவகையில் மனித உரிமை மீறலே..!