வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 23 நவம்பர், 2008

சாலைப் பெயர்ப்பலகையில் தமிழ்

கீழே படத்தில் இருப்பது என்ன என்று கவனித்துப் பாருங்கள்..!



கடந்த 21-11-2008இல், மலேசியா – பினாங்கு மாநிலத்தில் திறந்துவைக்கப்பட்ட சாலைப் பெயர்ப்பலகைதான் இது!

மக்கள் கூட்டணி அரசாங்கம் பினாங்கைக் கைப்பற்றிய பின்பு, நீதியாகவும் நடுநிலையாகவும் மேற்கொண்டுவரும் பல்வேறு அதிரடித் திட்டங்களில் இப்படி பன்மொழிகளில் சாலைப் பெயர்ப்பலகை அமைக்கும் திட்டமும் குறிப்பிடத்தக்கது.

பினாங்கின் தலைநகரான சோர்ச்சுடவும் (Georgetown) உலகத் தொல்நகரமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அந்நகரத்தில் உள்ள முக்கியச் சாலைகளின் பெயர்ப்பலகைகளில் மலாய், ஆங்கிலம், சீனம், சாவி ஆகிய மொழிகளோடு தமிழ்மொழியும் பயன்படுத்தப்படும் என மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் அறிவித்தது.

இந்த அறிவிப்பானது, மலாய்க்காரர்கள் மத்தியில் மாபெரும் எதிர்ப்பு அலையைக் கிளப்பியது. பினாங்குச் சட்டமன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையில் இதுபற்றி கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.

அதுமட்டுமா? பல்வேறு மலாய் அமைப்புகள் காவல்துறையில் புகார் செய்தன – உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தன – சாலை மறியல், கண்டனப் பேரணி என எதிர்ப்புகள் காட்டின.


இத்தனையையும் மீறி, பினாங்கு மாநில அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அதிரடியான நடவடிக்கைக்கு மாநில அரசு கொடுத்துள்ள சில வலுவான காரணங்கள்:-

1)சாலைப் பெயர்ப்பலகைகள் அமைக்கும் பொறுப்பு மாநில ஆட்சிக்கு உட்பட்டது.
2)தொல்நகரம் என்ற உலகப் புகழுக்கு ஏற்றதாக உள்ளது.
3)பினாங்கிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வழிகாட்டுவது.
4)நாட்டின் அதிகாரப்படியான மொழிகளை அங்கீகரிப்பது.
5)சொகூர் போன்ற பிற மாநிலச் சாலைப் பெயர்ப் பலகைகளிலும் தேசிய சுற்றுலாத் தளங்களின் பெயர்ப்பலகைகளிலும் பன்மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
6)இத்திட்டமானது நாட்டின் தேசியமொழிக் கொள்கைக்கு எதிரானது அன்று.

எது எப்படியோ! பினாங்கு மாநில அரசு தான் சொன்னதைச் சட்டத்திற்கு உட்பட்ட முறையில் செயல்படுத்தி உள்ளது. இதனால், நாட்டின் மிகப்பெரிய இனங்களாகிய சீனர்களும் தமிழர்களும் (வெளிப்படையாகப் பலரும் – மறைமுகமாகச் சிலரும்) மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை!

இதில், தமிழர்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் மற்றொரு சங்கதியும் உண்டு தெரியுமோ?

Lebuh Acheh – Acheh Street என்பதை

லெபோ ஆச்சே அல்லது ஆச்சே ஸ்திரிட்
என்று தமிங்கிலத்திலோ அல்லது கிரந்த எழுத்திலோ எழுதாமல்
'ஆச்சே வீதி'
என்று தமிழில் எழுதி
தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ள பினாங்கு அரசைத்
தமிழுயிர் மனமார வாழ்த்துகிறது.


பினாங்கு அரசுக்கு ஒரு வேண்டுகோள்

அடுத்து நீங்கள் வைக்கின்ற ஒவ்வொரு பெயர்ப்பலகையிலும் தமிழ் தமிழாக இருக்கட்டும்! தமிங்கிலமும் கிரந்தமும் ஒதுங்கி நிற்கட்டும்!!
**முக்கியக் குறிப்பு:-
சில ஆண்டுகளுக்கு முன்புவரை இதே பினாங்கில் பன்மொழிப் பெயர்ப்பலகைகள் இருந்தன. அவை படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட வரலாறு பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் – தக்கச் சான்றோடு (நிழற்படம்) தமிழுயிருக்குத் தெரிவிக்கவும்.

@ஆய்தன்:-
உண்மையான மலேசியாவின் உருவாக்கத்திற்கு
இதுவொரு முன்னுரை ஆகட்டும்!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது நல்ல தொடக்கம். தொடரட்டும். தமிழ் சீனம் மலாய் யாவும் ஒரு பூவின் இதழாய் இலங்கட்டும்.

அன்புடன்,
இளவேனில்

பெயரில்லா சொன்னது…

எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பெயர் பலகையில் எல்லா மொழிகளையும் இணைத்திருக்கின்ற பினாங்கு மாநில அரசாங்கம் வாழ்க

வாழ்க மக்கள் சத்தி

தமிழுணர்வுடன்
மகிழ்நன்