வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 30 நவம்பர், 2008

வாக்கெடுப்பு (5) முடிவு


தமிழர்கள் தங்கள் மொழி இன வரலாற்றை
அறிய விரும்புகின்றனர்?


ஆம்:- 42%

இல்லை:- 58%


@ஆய்தன்:-

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத மானங்கெட்டவர்கள் அதிகமாக இருக்கும் ஓர் இனம் உலகில் உண்டென்றால், அது தமிழினமாகத்தான் இருக்கும்.


அதனாலேயே, தான் ஒரு தமிழன் என்று அறியாமல் – புரியாமல் – தெரியாமல் தன்னைத் திராவிடன் என்றும் – இந்தியன் என்றும் தமிழர்களே சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்.

மொழி இன வரலாற்றை அறிந்த தமிழர்களில் ஒரு பகுதினர்தாம் இன்னமும் தமிழினத் தொப்புள்கொடி அறிந்துவிடாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களால் மட்டுமே இன்னமும் உலகத்தில் தமிழினம் – தமிழ்மொழி வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் மிகையன்று.

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத நிலையிலும் – அறிந்துகொள்ள விரும்பாத நிலையிலும் இன்று தமிழர்கள் பலவகையிலும் தாழ்ந்து போயிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது, அன்னிய மொழி, இன, பண்பாடு, கலை, நாகரிகத்திற்கு அடிமைகளாகவும் அடிவருடிகளாகவும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மொழி இன வரலற்றை அறியாத இந்தக் குருட்டுத்தமிழர்கள், ஆரியம் - சமற்கிருதம் - வட இந்தியாவுக்குச் சொந்தமான வரலாறு, மொழி, சமயம், பண்பாடு, கலை, இசை, உடை, உணவு, இலக்கியம் ஆகியவற்றை எல்லாம் தங்களுக்குச் சொந்தனமானது – தமிழருக்குச் சொந்தமானது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் தன்னுடைய சொந்தக் கால் இருப்பதே தெரியாமல் செயற்கைக் காலில் நின்றுகொண்டிருக்கிறனர்.

எவ்வளவு பெரிய பரிதாபம்!! எவ்வளவு பெரிய அறியாமை!!

இப்படிப்பட்ட மூடத்தனமான நம்பிக்கையின் காரணமாக தமிழையும் தமிழின மரபுகளையும் எதிர்க்கவும் துணிகின்றனர் – வேரோடு அழித்துவிட முயற்சியும் செய்கின்றனர்.

இப்படி, சொந்தக் கண்ணையே குத்திக் குருடாக்க யாராவது முனைவார்களா?

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறிந்திருக்கிறதோ, அந்த இனமே தன்னம்பிக்கை கொண்ட இனமாக இருக்கும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை உயர்த்திப் பிடிக்கிறதோ, அந்த இனமே தன்மானத்துடன் வாழும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை முன்னெடுக்கிறதோ, அந்த இனமே தலைநிமிர்ந்து முன்னேறும்.
மொழி இன வரலாறு அறியாமல் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என எப்படி முன்னேறினாலும் அது முழுமையான முன்னேற்றமாக அமையாது.

கருத்துகள் இல்லை: