வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

உலகத் தமிழருக்குக் கேணல் ரூபன் கடிதம்


சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

"தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

------------------------------------------------------------

15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இசுரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.
------------------------------------------------------------

@ஆய்தன்:-
உலகத் தமிழர்கள் ஓயாது குரல்கொடுப்போம்!
உலக உருண்டையில் ஒருதனி நாடு சமைப்போம்!

  • கேணல் ரூபனுக்குத் தமிழுயிரின் வீரவணக்கம்
@நன்றி: புதினம்

2 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

வீரத் தமிழர் அன்பர் கேணல் ரூபன் அவர்களின் கடிதத்தைப் படித்து கண்கள் குளமாகின்றன. கேணல் ரூபன் வீரச்சாவு எய்திய இடத்தில் ஆயிரம் கேணல் ரூபன்கள் உருவெடுப்பார்கள்..

பெயரில்லா சொன்னது…

மாவீரன் தி்லீபனின் வழியில் தோன்றிய மற்றுமொரு மரத்தமிழன். இந்த வீரனின் வீர முழக்கம் இப்புவியெங்கும் முழங்கட்டும்...

தமிழ் ஈழம் பூக்கும் வரை உறங்காது இந்தத் தமிழ் உயிர்கள்....

இதுபோன்ற வீரத் தமிழர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலிகள்..

tamilan66@gmail.com
தமிழ் குமரன்,
கோல கெட்டில், கெடா.