வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

வினை தீர்க்கும் விநாயகருக்கு வந்த வினை!


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா!


விநாயகக் கடவுளரைப் பற்றி தமிழ்மூதாட்டி ஔவை பாடியதாகச் சொல்லப்படும் செய்யுள் இது. விநாயகர் தமிழர்களின் கடவுளாக இல்லாத போதிலும் அவரைப் பழந்தமிழர்கள் பழித்தது இல்லை! ஆனால், மொழி, இன, சமய வரலாறு எதுவுமே அறியாத இன்றைய அறிவுகெட்டத் தமிழர்கள், விநாயகரைக் முழுமுதற் கடவுளராக ஏற்றுக்கொண்டு விட்டனர். அப்படித் தமிழர்களின் கடவுளாகி போய்விட்ட விநாயகரை இன்றையத் தமிழர்கள் எப்படி மதிக்கிறார்கள் தெரியுமோ?

இப்போதுதான் முடிந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று, ஔவை பாடியது போல பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் மட்டுமல்ல இன்னும் கொள்ளுக்கட்டை, பழம், தேங்காய், பொங்கல், கரும்பு என என்னவெல்லாமோ படைத்து, மனமுறுக பூசை செய்து, மன்றாடி வரம் வேண்டி, கூட்டமாகக் கும்பலாகச் சேர்ந்து ஊர்வலம் நடத்தி, பசனைப் பாடல்களைப் பாடி ஆடி ஓடி ஓடோடி போய் இறுதியில் பத்தர்கள் செய்தது என்ன தெரியுமா?

நீங்களே பாருங்கள்!!!

வினை தீர்க்கும் விநாயகருக்கு வந்த வினைகண்டு, நல்லோர்கள்.. உண்மை பத்தர்கள்.. ஆன்மிக அன்பர்கள் உள்ளமெல்லாம் கண்டிப்பாக வேதனையில் அழும்!

கல்லாகட்டும்.. மண்ணாகட்டும்..
சாணியாகட்டும்.. சந்தனமாகட்டும்..
சிலையாகட்டும்.. சித்திரமாகட்டும்..

எதுவாக இருந்தாலும் கடவுளாக மதித்து கைக்கட்டி; வாய்பொத்தி; மந்திரம் ஓதி; திருநீறு பூசி விழுந்து விழுந்து வணங்கும் பத்தர் பேர்வழிகளுக்குப் பத்தி(பக்தி) இருக்கின்ற அளவுக்குப் பகுத்தறிவு இல்லை.. அறவே இல்லை என்பதற்கு இதனைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?
பத்தியின் பெயரால் நடக்கும் இந்த அவலங்களைத் தடுக்கப் போவது யார்?
பத்தியின் போர்வைக்குள் தலைவிரித்தாடும் பித்தலாட்டங்களைக் கண்டிப்பது யார்?
பத்தியின் முகமூடி அணிந்து நடமாடும் பிற்போக்கு எண்ணங்களை மாற்றப் போவது யார்?

@ஆய்தன்:-
பத்தி இருந்தால் போதுமா – தமிழா
பகுத்தறிவு வேண்டாமா?
உனக்குப் பகுத்தறிவு வேண்டாமா?
பத்தியோடு பகுத்தறிவு இருந்தால் – தமிழா
பழிவந்து சேர்ந்திடுமா?
உனக்குப் பழிவந்து சேர்ந்திடுமா?

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

விநாயகன், பிள்ளையார், கணபதி, கணேசன் இப்படி பல்வேறு புனைப் பெயர்களில் இருக்கிற கலவர நாயகன் தமிழகத்திற்கு எப்போது வந்தார், என்பது பெரும் விவாதமாகத்தான் இருக்கிறது.

மதவாதிகள், ஜாதிய அபிமானிகள் தங்கள் மதத்தை, ஜாதியை, கடவுளை மிகப் பழமையானவர், பழமையானவை என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமை கொள்வார்கள்.

அப்படித்தான் விநாயகனை வழிபடுகிற, வழிபட பரிந்துரைக்கிற இந்து கண்ணோட்ட ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், 5 நூற்றாண்டு என்றும் இல்லை அதற்கு முன்பே 2 நூற்றாண்டிலேய வந்து விட்டார் என்றும் பெருமை பட்டுக் கொள்கிறார்கள். (’கடவுள் கொண்டுவரப்பட்டவர்‘ என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்)

சைவசமயத்தின் கட்டுக்கதையான பெரியபுராணத்தை சேக்கிழர் எழுதுவதற்கு காரணமாக இருந்தது, சுந்தரரின் பாடல்தான் என்று சொல்கிறார்கள். சுந்தரருக்கு அது எப்படி தெரியும் என்றால், அவருக்கு ஒரு கல்லு பிள்ளையார் அந்தக் கதையை சொன்னதாக ‘விட்டலாச்சாரியார்‘ பாணியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் பிள்ளையார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

வட இந்தியாவில் ஏன் முதலில் விநாயகன் அவதரித்தார் என்பதை தெரிந்து கொண்டால் அவர் தமிழகத்திற்கு எதற்காக வந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

மகாவீரரின் சமணமும், அதன் பிறகு புத்தரின் எழுச்சியும் பார்ப்பன வேதங்களை, வேத மதத்தை அதன் ஜாதிய கண்ணோட்டத்தை பொத்தல் ஆக்கியது. ‘பிறப்பால் எவனும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை‘ என்று இந்து மத அல்லது வேத மத எதிர்ப்பாக வீறு கொண்டு நின்றது பவுத்தம். புத்தருக்கு பிறகும் அவரின் சீடர்களால் இந்தியா முழுக்க இந்த அலை ஓயாது பார்ப்பனியத்திற்கு எதிராக அடித்துக் கொண்டே இருந்தது.

அதன் தாக்கத்தால்தான் தமிழகத்து திருவள்ளுவரும்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்று வேத மதத்தின் மீது காறி உமிழ்ந்தார்.

பவுத்ததின் இந்த அலை, பார்ப்பனியத்தை நிலை குலைய வைத்தது. பார்ப்பனியத்தை காப்பதற்காகத்தான் பெருமாள் பத்து அவதாரங்களை எடுக்கிறார். சிவன் மனித உருவம் (பார்ப்பன) கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஆனாலும் பெருமாலும், சிவனும் வீதியில் இறங்கி பக்தர்களோடு நெருக்கமாக இருக்க ஆகம விதிகள் இடம் தரவில்லை. அப்படி இடம் தருவதாக மாற்றிக் கொண்டால், பிறகு அவர்களின் மீதுள்ள ஒரு பயம் கலந்த பக்தி அற்றுப் போகும்.

அல்லது பார்ப்பனர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக கடவுளை வழிபட வேண்டிய முறை உண்டாகும் என்பதால், பவுத்தத்தை எதிர் கொள்ள அதுவரை இல்லாத முறையில் ஒரு புதிய ஜனரஞ்கமான கடவுள் தேவைப்படுகிறார்.

அதன் பொருட்டு பவுத்ததிடம் இருந்து இந்து மதத்தை மீட்க, தோழமையான, யார் வேண்டுமானாலும் தொட்டு உருவாக்க, வழிபட, எங்கு வேண்டுமானாலும் வைத்து புழங்க, நிறுவ ஒரு கடவுளாக உண்டாக்கப்பட்டவர்தான் விநாயகர்.

அதனால்தான் விநாயகர் அரசமரத்தடியிலும் அமர்ந்திருக்கிறார். அரசமரம் என்பது புத்தருக்கு உரியது. அரசமரத்தின் இன்னொரு பெயர்தான் போதி மரம்.

விநாயகர் என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டாரோ அதை அவர் சிறப்பாக நடத்தி முடித்தார்.

(சைவர்களிடமும் வைணவர்களிடமும் பேதமிருந்தாலும் அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்.)

அதன் பிறகு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள் ஜாதிய ஒடுக்குமுறையை கண்டித்து இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு குறிப்பாக இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அப்பொதெல்லாம் விநாயகர் அவர்களை போய் தடுத்தாட் கொள்வார்.

அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அவர்களுக்கு அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதை இஸ்லாமியர்கள் வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கலவரம் செய்வதற்கு அவர்களையே பயன்படுத்துகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே.

விநாயகன் தீண்டாமையையும், பார்ப்பனியத்தையும் பாதுகாப்பதற்காக ‘தோழமையோடு‘ எந்த கலவரத்தையும் செய்யத் தயாரானவன்.

விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.
-வே. மதிமாறன்
http://mathimaran.wordpress.com/

பெயரில்லா சொன்னது…

மும்பையிலே பாலகங்காதர திலகர் என்ற பார்ப்பனர் விநாயகர் என்ற கடவுளைப் பிடித்துக் கொண்டு - அதை மய்யப்படுத்தி மக்கள் மத்தியில் புத்துயிர் கொடுக்க முன் வந்தார். விநாயகர் சதுர்த்தி என்று கூறி, அந்த மாநிலத்திலேயே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார் - பெரிய அளவு ஊர்வலங்களை நடத்தினார்.

அதே முறையை அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி வகையறாக்கள் முன்னின்று தமிழ்நாட்டிலும் பிள்ளையார் ஊர்வலம் நடத்திட முற்பட்டுவிட்டன.
விநாயகர்பற்றி எந்த புராணத்திலும் கண்டிராத வகைகளில் எல்லாம் - புதுப்புது பெயர்களைச் சூட்டி - மிகப்பெரிய உருவத்தில், உயரத்தில் உருவங்களைச் செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லுகின்றனர். மக்கள் மத்தியில் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும்.

நீர் நிலைகளில், ஏரிகளில், குளத்தில், ஆற்றில், கடலில், கடைசியாக அந்தப் பிள்ளையார் உருவங்களைக் கரைக்கின்றனர். அதற்கு முன்பெல்லாம் வீட்டின் கொல்லைப் புறத்தில் உள்ள கிணறுகளில் போடுவார்கள். அதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தத்தான் பல இடங்களிலும் ஊர்வலமாக வந்து கடலில் கரைக்கும் ஒரு ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தனர்.
சர்வசக்தி வாய்ந்ததாகப் பீற்றிக்கொள்ளும் மதவாதிகள், மக்களிடம் மகேசன்களைத் தூக்கிச் செல்லும் ஒரு பிரச்சார யுக்தியைக் கையாளுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
சுற்றுச்சூழல் பாதிப்பைப்பற்றியெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் பார்ப்பன ஏடுகள், இந்தப் பிள்ளையார் ஊர்வலத்தாலும், ரசாயனப்பூச்சு பூசப்பட்டுள்ள பிள்ளையார் உருவங்களை நீர் நிலை களில் கரைப்பதாலும் ஏற்படுகின்ற பாதிப்பைப்பற்றி மூச்சுவிட மாட்டார்கள். காரணம், பார்ப்பான் உயிர் இந்தக் கடவுள் பொம்மைகளிடத்தில் தான் இருக்கிறது!

தந்தை பெரியார் கடவுள்மீது கை வைத்த இரகசியமும் இதுதான். கடவுள் நம்பிக்கையால் புத்தி பறிபோய், பொருளும் நாசமாகி, பொழுதும் விரயமாகிறதே - இதுபற்றி மக்கள் சிந்திப்பார்களாக!

பெயரில்லா சொன்னது…

பிள்ளையாரே பிள்ளையாரே
ஊர்வலமா போனவரே
ஊரைச் சுத்திப் பார்த்தவரே
ஒதுங்கி வந்து கடற்கரையில்
உடைஞ்சி போயி கிடக்கிறீரே!
யாரு பண்ண வேலையிது?
எவரு வந்து கேட்கிறது?
உன்னை நம்பி வந்தோமே
உருக்குலைந்து கிடக்கிறியே
எங்களை யாரு காக்கிறது?

-அன்பன் இனியன்.
இரவுப்பு, பகாங்கு.