வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 19 ஜூலை, 2008

அசுற்றோ:- தகவல் ஊடகமா? தரகர் ஊடகமா?


அசுற்றோ வானவில் தொலைக்காட்சி தமிழர்களின் அறியாமையை மூலதனமாக்கி, மூடநம்பிக்கைகளைப் பேரளவில் பரப்பி வருகின்ற கொடிய செயலைக் கண்டித்து, கடார மாநில, கூலிம் வட்டாரத்தில் இயங்கும் தியான ஆசிரமத்தின் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் எழுதியுள்ள கண்டனச் செய்தி இது. உண்மையான ஆன்மிகப் பணியை நேர்மையாக மேற்கொண்டுவரும் சுவாமிகளின் மனக்கொதிப்பைத் 'தமிழுயிர்' முழுமையாக ஆதரிக்கின்றது.

ஒரு காலக்கட்டத்தில் மக்களுக்கு நல்ல செய்திகளையும் உண்மையான விவரங்களையும் அள்ளித் தந்துகொண்டிருந்த ஊடகங்கள் இப்பொழுது தவறான கருத்துகளைப் பரப்பும் மலிவு சந்தைகளாக மாறி இருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமன்று; கண்டனத்துக்குரிய செயலும்கூட.

குறிப்பாக அசுற்றோ போன்ற ஒளியலை சாதனங்கள் கொஞ்சங்கூட மனசான்றே இல்லாமல் எளிய மக்களின் அறியாமையை மூலதனமாக்கி அவர்களின் அடிப்படை நம்பிக்கைகளை பகடைக் காய்களாக்கி மக்களைத் தப்பும் தவறுமாக வழி நடத்துகிறார்களே என்று மனம் குமுறுகின்றது.

அண்மைக் காலமாகச் சமயச் சான்றோர்கள், சமுதாயக் கேடயங்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி பெற்றவர்கள் என்ற போர்வையில் நிறைய போலி ஆசாமிகள், பொறுப்பற்ற சிற்றறிவாளர்கள், அறைகுறை சோசியர்கள், சராசரி சாமியார்கள் சமய தத்துவங்களைப் பற்றி வாய் வலிக்கப் பேசுகிறார்கள்.

திடீர் இரசவாத மருத்துவர்களும், அதிர்ஷ்டக்கல் விஞ்ஞானிகளும், வாக்குச் சுத்தமில்லா வாஸ்து நிபுணர்களும், நமது பாரம்பரிய சோதிட சாத்திரத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத எண் கணித மேதைகளும், வேத விற்பன்னர்கள் போல பேசித் தொலைக்கிறார்கள். இவர்களைச் சிறுமைப்படுத்துவது நமது நோக்கமன்று. நமது பண்பட்ட பாரம்பரிய நற்சிந்தனைகள் சிறுமைப்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் மனம் கொப்பளிக்கிறது.

இவர்கள் எதற்கெடுத்தாலும் தகடுகள் நல்லது; தாயத்துகள் நல்லது; 'லோக்கேட்'டுகள் வைத்துக்கொண்டால் அவை பாதுகாக்கும்; பிரமிடுகள் வைத்துக்கொண்டால் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்; நவரத்தினக் கல்லை அணிந்துகொண்டால் பொன்னும் பொருளும் குவியும் என்று மக்களைப் புதுவகை மூடநம்பிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு அசுற்றோ வானவில் இடைத்தரகர்களாகச் செயல்படுவது அறுவறுக்கத்தக்க செயலாகப் படுகின்றது. அசுற்றோ என்ன தகவல் சாதனமா? அல்லது தரகர் சாதனமா? இதைப்பற்றி பொது மக்களும் வாளாவிருப்பது பெருத்த வேதனையைத் தருகின்றது.

ஏற்கனவே நம் தமிழ் மக்கள் மூடச்சடங்குகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களுக்குப் போதிக்க வேண்டியது தன்னம்பிக்கையை வளர்க்கும் அடிப்படை இறை நம்பிக்கை. இதை விடுத்து சட சத்தியான பிரபஞ்ச சத்தியையே இறை சத்தியாக முன்மொழிந்து பத்தர்களைக் குழப்புவது நம்முடைய ஆழ்ந்த இறைச்சிந்தனைக்கு இழுக்கு. நாட்டின் இறையாண்மைக்கும் பழுது. சிற்சத்திக்கும் அருட்சத்திக்கும் வேறுபாடு அறியாதவர்கள் தத்துவ ஞானத்தைப் போதித்தால் இப்படித்தான் அபத்தமாக போய் முடியும்.

இனியும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு முன்னால் அசுற்றோ பொறுப்பாளர்களும் தணிக்கைக் குழுவினரும் சமய சான்றோர்களைக் கலந்தாலோசித்து ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

@ஆய்தன்:-
சோதிடம், வாஸ்து, எண்கணிதம்; நவரத்தினம்; ஓமம்; பிரமிடு என்ற பெயர்களில் சில களவாணிகளால் உண்மைச் சமயமும் இறை நம்பிக்கையும் கண்முன்னே கற்பழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சமய இயக்கங்கள் தூங்கிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது? ஒரு காலத்தில் சமயத் தலைவர்கள் சடங்கு, சம்பிரதாய, சமய விளக்கம் அளித்த நிலைமை மாறிப்போய், இன்று நவரத்தின வியாபாரி, ஊதுவத்தி வணிகர், வாஸ்து விற்பனையாளர், எண்கணித 'ஏஜெண்டு' என ஏமாற்றுப் பேர்வழிகள் வாய்கிழிய விளக்கம் அளிகின்றனர். படித்தத் தமிழ் முண்டங்களும் படிக்காத தமிழ் தண்டங்களும் ஏமாறுவதற்கு அணியமாக(தயாராக) இருக்கும்வரை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்!!!

  • மூலம்: செம்பருத்தி மாதிகை - சூலை 2008

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உலகத்தில் சிறந்த சமயம் நமது சமயம் . உலகத்தில் சிறந்த பண்பாடு தமிழர் பண்பாடு. ஆனால் இற்றைய நிலைகளைப் சமயத்தின் பெயரால் நடக்கும் வாணிகமும் வியாபாரமும் தான் பெருகி வருகிறது. மலேசியாவில் சமயம் வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் சங்கங்கள் தங்களுக்குள் சங்கங்களை ஏற்படுத்திக் கொள்வதிலேயே முனைப்புடன் ஈடுபடுகின்றன. உண்மை சமயத்தை வளர்ப்பதாகத் தெரியவில்லை. எனவே தான் நாம் மாற்றாந்தாய் பிள்ளைகளாய் நடத்தப்படுகின்றோம்.

நம்முடைய சமய உண்மைகளை நாமே உணருவதில்லை. எல்லா நிலைகளிலும் பணம் சம்பாதிப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது. " காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" ஒவ்வொரு மலேசிய வியாபாரர இந்தியனும் உணர்ந்து சிந்திக்க வேண்டிய கருத்து இது. சுவாமி அவர்களுக்கு நன்றி.

அன்புடன்
பூந்தமிழன்
கடாரம் கொண்டான்

பெயரில்லா சொன்னது…

ஏழை தமிழ்ச் சமுதாயத்தின் அறியாத்தனத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு பணம் பண்ணும் வியாபாரிகள் சிலருக்கு ஆஸ்ட்ரோ வானவில் துணைபோவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

சமுதாயத்திற்குச் சொல்ல வேண்டிய நல்ல கருத்துகளும் செய்திகளும் ஆயிரமாயிரம் இருக்கிறது. ஆனால், சில அருமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஆஸ்ட்ரோ சில குப்பை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

மேலும், சமுதாயத்தை மூட நம்பிக்கைக்கும் குருட்டு பக்திக்கும் இழுத்துச்செல்லும் சில நிகழ்ச்சிகள் வருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இக்கண்,
இளையவேல் - சிரம்பான்

பெயரில்லா சொன்னது…

அசுற்றோ மூட நம்பிக்கையை வளர்ப்பதில் முதலிடம் வகிக்கின்றது என்பதில் ஐயமே கிடையாது. இராசி பலன், எண் கணிதம், நவரத்தினக் கல் என்று பல பெரிய வணிகர்களைக் கூட்டிவந்து வானவில் கூத்தடிக்கிறது. ஏற்கனவே அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் மக்களை அசுற்றோ நன்றாக மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறது.

தன்னம்பிக்கை, உழைப்பு, உயர்வு, முயற்சி என்று ஒரு பக்கம் பெரிய பேச்சு பேசிவிட்டு மறுபக்கம் இராசி, பலன், வாஸ்த்து என்று முட்டாள் தனத்தை போதிக்கும் அசுற்றோ உடனடியாக திருந்த வேண்டும்.

பணம் வருகிறது என்பதற்காக கல்லையும் புல்லையும் விக்கிறவர்களையும் இராசிபலன் சொல்லுபவர்களையும் பிரமிடு வணிகர்களையும் அழைத்து நிகழ்ழ்சிககளை நடத்தி சமுதாயத்தில் பிற்போக்கான கருத்துகளை அசுற்றோ விதைக்கக் கூடாது.

அசுற்றோ வானவில் தலைவர் ஐயா.இராஜாமணி இந்த விவகாரத்தைக் கவனிக்க வேண்டும்.

தமிழன்பன்,
இளஞ்சித்திரன் - வெள்ளி மாநிலம்