வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 16 டிசம்பர், 2008

அறிவியல், கணிதம் தமிழ்மொழியில் வேண்டும்


தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழ்மொழியிலேயே கற்பிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம், கல்வி சமூக நல ஆய்வு நிறுவனம் ஆகிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:-

மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ரெ.சு.முத்தையா அறிக்கை

மலாய் – சீன பள்ளிகளில் அவர்களின் தாய்மொழிகளில் பாடம் நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதுபோல, தமிழ்ப் பள்ளிகளிலும் தாய்மொழியில் கற்பிக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியில் கற்பிக்கப்படும் நேரம் குறைந்து வருவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழ்மொழிக்கு மாற்ற வேண்டும். தொடக்கப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே எந்தக் கல்வியையும் எளிதாக அறிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பர் என்பதை அரசு உணர வேண்டும்.

இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்குச் செவிசாய்த்து அவ்விரு பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்க வழிவிடவேண்டும்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத் தேசியத் தலைவர் பி.பொன்னையா அறிக்கை

அறிவியல் – கணிதப் பாடங்களைத் தாய்மொழியாம் தமிழிலேயே கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் உறுதியாக இருக்கிறது.

'தமிழோடு உயர்வோம்' என்பது மணிமன்றத்தின் மூலமந்திரமாகும். தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து நிலைபெறுவதற்குத் தாய்மொழிக் கற்றல் கற்பித்தல் மிக அவசியமாகும்.

ஒவ்வொரு மாணவனும் தனது தாய்மொழியில் அறியும் பாடங்களே பின்னர் அவனுக்கு விளங்கக்கூடிய வகையில் அமையும். நாட்டிலுள்ள அனைத்து இந்திய அமைப்புகளும் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழில் கறிபிக்க பேராதரவு வழங்க வேண்டும். அதோடு, அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டுசென்று அவ்விரு பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்கக் குரல்கொடுக்க வேண்டும்.

தமிழ்ப்பாட பயிற்றுமுறை தமிழ்ப்பள்ளியில் குறைந்து வருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்ப்பள்ளி என்பது பெயருக்கு மட்டும் இருக்குமே தவிர, அங்கே தமிழ்மொழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று பொன்னையா எச்சரித்துள்ளார்.

கல்வி சமூக நல ஆய்வு நிறுவனத் (EWRF) தலைவர் வழக்கறிஞர் பசுபதி அறிக்கை

'தமிழே தமிழனுக்கு உயிராம்; அந்தத் தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்' என்று கவிஞர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போது உண்மையாகிவிடும் போல் இருக்கிறது.

அரசாங்கமும் கல்வி அமைச்சும் காலம் தாழ்த்தாமல் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தாய்மொழியில் நடத்துவதற்குரிய ஏற்பாட்டை உடனே செய்ய வேண்டும். எந்தவொரு பாடத்தையும் தய்மொழியில் படித்தால்தான் அந்தச் சிறுவயதில் மாணவர்களுக்கு விளங்கும். அதை வேற்றுமொழியில் படிக்கவைத்து விளங்கச் செய்வது கடினமாகும்.

கல்வி அமைச்சு குறிப்பிட்ட சிலரின் கருத்தை மட்டும் கேட்டுக்கொண்டிராமல், நாடிலுள்ள தமிழ் சார்ந்த அமைப்புகளின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தமிழ்க்கல்வி தொடர்பான சிக்கல்கள் குறித்து தமிழ்க் கல்விமான்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசியல்வாதிகளின் கருத்துகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதுவொரு தாய்மொழிச் சிக்கல் என்பதால் அரசாங்கம் இந்தியச் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுக்க வேண்டும்.
  • (நன்றி:மக்கள் ஓசை 16.12.2008)
@ஆய்தன்:-
வாய்மொழி பலவும் வழித்துணை யாகலாம்
தாய்மொழி என்பது தடயம் அன்றோ!
காலணி தொலைந்தால் வேறணி வாங்கலாம்
கால்களை இழந்தால் முடந்தான் ஆகலாம்

1 கருத்து:

Sathis Kumar சொன்னது…

அறிக்கை விடுவது சுலபம்...

அரசாங்கம் நம் வேண்டுகோளை மதிக்காமல் தொடர்ந்து எதிர்ப்பாக செயல்பட்டால் இவ்வியக்கங்கள் 'ஒத்துழையாமை' திட்டத்தை கையிலெடுக்க வேண்டும்.

தாய்மொழியைக் காப்பத்தில் இவர்களுக்குள்ள வேகத்தை நடவடிக்கையில் எப்படி காட்டப்போகிறார்கள் என்று பார்ப்போம்..