வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 19 டிசம்பர், 2008

தமிழில்தான் அறிவியல் கணிதம்:- ம.இ.கா முடிவு


"தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழிமொழியில்தான் கற்பிக்க வேண்டும்" மலேசியன் இந்தியன் காங்கிரசு (ம.இ.கா) நடுவண்(மத்திய) செயலவை முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

18-12-2008இல் ம.இ.கா தலைமையகத்தில் நடந்த நடுவண் செயலவை கூட்டத்தில் இந்த முடிவு காணப்பட்டதாக கூறிய அவர், கடந்த 16-12-2008இல் புத்திராசெயாவில் நடந்த அறிவியல் கணிதப் பாடம் மீதான வட்டமிசை மாநாட்டிலும் ம.இ.காவின் சார்பில் இதே முடிவுதான் வலியுறுத்தப்பட்டதாகவும் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளின் உயர் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆகியோருடன் கடந்த 5-12-2008இல் ம.இ.கா ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினர் "அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்கள்.

"தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு எது நன்மை தருகின்றதோ அதுவே எங்களின் முடிவு" என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலமொழி எதிர்காலத்திற்கு அவசியம் என்றாலும்கூட தமிழ்ப்பள்ளிகளின் தோற்றமும், அடையாளமும் பாதிக்கப்படக் கூடாது. தமிழ்ப்பள்ளி - தமிழ்மொழியின் எதிர்காலம் கருதிதான் அறிவியல் கணிதப் பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என ம.இ.கா. பரிந்துரைத்துள்ளது.

ம.இ.காவின் இந்த முடிவை மனிதவள அமைச்சரும் ம.இ.காவின் தலைமைச் செயலாளருமாகிய டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கல்வியமைச்சர் டத்தோ ‚ இசாமுடின் துன் உசேனிடமும் பின்னர் அமைச்சரவையிலும் ஒப்படைப்பார். இவ்வாறு, டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

ம.இ.காவின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் தமிழ்மொழியிலேயே கற்பிக்கப்படும் நிலைமை ஏற்படுமானால், அது டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் செய்யும் மாபெரும் கைமாறாக அமைவதோடு அவர்தம் புகழ் வரலாற்றில் கண்டிப்பாக இடம்பெறும்.

@ஆய்தன்:-
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல் (அதி:24 குறள்:233)

கருத்துகள் இல்லை: