வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 18 அக்டோபர், 2008

மதுவிளம்பரம் மண்ணுக்குப் போகட்டும்


17-10-2008இல் மலேசிய நண்பன் நாளேட்டில் மதுபான விளம்பரம் முழு பக்கத்தில்; முழு வண்ணத்தில் வெளிவந்தது. அந்தக் கேவலமான விளம்பரத்திற்கு எதிராக தமிழ் மக்கள் வெகுண்டு எழுந்தனர்; அந்த விளம்பரத்தைக் கடுமையாகக் கண்டித்தனர்; இன்னும் ஒருபடி மேலே போய் காவல் நிலையங்களில் புகார்களும் செய்தனர்.

தமிழரின் பண்பாட்டைச் சீர்குலைத்து; தமிழரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த மது விளம்பரத்தை வெளியிட்டதற்காக மலேசிய நண்பன் நாளேடு 18-10-2008இல் கீழ்க்காணும் வகையில் தனது வருத்தத்தைத் தெரிவித்தது.


வருந்துகிறோம்
***************
நேற்றைய மலேசிய நண்பன் 5ஆம் பக்கத்தில் வெளியான மதுபான விளம்பரம் இந்தியர்கள் மனதை புண் படுத்தியிருக்கிறது என மலேசிய இந்து சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள கருத்தை மதித்து ஏற்றுக்கொள்வதோடு அதற்காக வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறோம். இனி இதுபோன்ற விளம்பரங்கள் தவிர்க்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த விளம்பரம் தொடர்பில் நண்பன் வாசகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கூறிய கருத்துகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர்களின் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் - ஆசிரியர்

மதுவிளம்பரத்தை வெளியிட்ட மலேசிய நண்பனின் மானங்கெட்டச் செயலை உடனடியாகக் கண்டித்தவர்கள்:-

1)மலேசிய இந்து சங்கம்
2)சொகூர் மாநில, மலேசிய இந்து சங்கப் பேரவை
3)சொகூர் மாநில, இந்து தர்ம மாமன்றம்
4)மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம்
5)பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
6)ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு
7)பேரா மாநில, ம.இ.கா இளைஞர் பிரிவு

இவர்களோடு சேர்ந்து, தமிழுயிர், ஓலைச்சுவடி, நனவுகள் ஆகிய மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளும் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் – தமிழர் – சமயம் – கலை – பண்பாடு ஆகியவற்றின் மீது அக்கறை கொண்டு குமுகாய நலன்கருதி செயல்பட்ட மேற்கண்ட அனைவரையும் 'தமிழுயிர்' நெஞ்சாரப் பாராட்டுகிறது. தமிழ்க் குமுகாயக் கேடுகளைக் களையெடுக்க ஒன்றிணைந்து பாடுபடுமாறு 'தமிழுயிர்' அனைவரையும் அழைக்கிறது.

@ஆய்தன்:-
மருந்துக்குக் கூட இனி மதுவிளம்பரம் கூடாது - மீறி வந்தால்
ஆர்ப்பாட்டம் செய்யவும் அடித்து நொறுக்கவும் தமிழர் தயங்கக் கூடாது!

7 கருத்துகள்:

Sivaganapathy சொன்னது…

"""........மதுவிளம்பரத்தை வெளியிட்ட மலேசிய நண்பனின் மானங்கெட்டச் செயலை உடனடியாகக் கண்டித்தவர்கள்:-

1)மலேசிய இந்து சங்கம்
2)சொகூர் மாநில, மலேசிய இந்து சங்கப் பேரவை
3)சொகூர் மாநில, இந்து தர்ம மாமன்றம்
4)மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம்
5)பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
6)ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு
7)பேரா மாநில, ம.இ.கா இளைஞர் பிரிவு......"""

அவர்கள் கண்டித்தார்கள்........ இவர்கள் கண்டித்தார்கள்.........எவர் எவரோ கண்டித்தார்கள்........

ஆனால் இந்துக்களின் உரிமைகளை வலைப்போட்டு அலசி அரசாங்கத்தை எதிர்த்த "HINDRAF" அல்லது "மக்கள் சக்தி" ஏன் கண்டிக்கவில்லை ?????

ஒரு வேலை இந்த HINDRAF ம.இ.கா'வை எதிர்ப்பதுதான் கொள்கையாக கொண்டிருக்கிறதோ ???

மிகவும் சிருப்பிள்ளைத்தனமாக இருக்கிறது ?!!...

ஆதவன் சொன்னது…

#சிவகணபதி,

//ஆனால் இந்துக்களின் உரிமைகளை வலைப்போட்டு அலசி அரசாங்கத்தை எதிர்த்த "HINDRAF" அல்லது "மக்கள் சக்தி" ஏன் கண்டிக்கவில்லை ?????//

அவர்கள் மிகப் பெரிய; மிகக் கடுமையான; மிகச் சிக்கலான ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். நமது அடுத்தத் தலைமுறையின் விடுதலைக்காக இன்று சிறைக்குள் சிக்கி துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் போராட்ட உணர்வையும் இந்த குமுகாயத்திற்காக அவர்கள் செய்திருக்கும் ஈகத்தையும் எவரும் சிறுமைப்படுத்திவிடக் கூடாது.

தங்களுக்கும், தங்கள் தலைமுறைக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கொசு வேட்டைக்கு ஏன் யானை வரவில்லை என்று கேட்பது போலிருக்கிறது தங்கள் வினா?

Sivaganapathy சொன்னது…

"........கொசு வேட்டைக்கு ஏன் யானை வரவில்லை என்று கேட்பது போலிருக்கிறது தங்கள் வினா?........"

ஆஹா.... பேஷ்... பேஷ்....மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் "அடைமொழி" ........

இப்படியே அன்று கொசு'வென்று விட்டதால்தானே ஐம்பது ஆண்டுகள் கழித்து இன்று இவ்வளவு போராட்டங்களையும் நடத்த வேண்டியிருக்கிறது ????????

ஆசிரியர் ...
உங்களின் கவனத்திற்கு ....
தமிழுயிர் அரசியல் சாக்கடை கலக்காமல் "பச்சை'யாக" இருப்பது மிகவும் நன்று

ஆதவன் சொன்னது…

#சிவகணபதி,

//இப்படியே அன்று கொசு'வென்று விட்டதால்தானே ஐம்பது ஆண்டுகள் கழித்து இன்று இவ்வளவு போராட்டங்களையும் நடத்த வேண்டியிருக்கிறது//

இன்று கொசு போன்ற சிக்கல்கள் அனைத்துக்கும் போராட்டம் நடத்துவதற்கு கற்றுக்கொடுத்தவர்களும் வித்திட்டவர்களும் அந்த 5 போராளிகள் அல்லவா?

விடியா மூஞ்சியாக கிடந்த தமிழனைத் தட்டி எழுப்பி தன்மானத்தை ஊட்டி விட்டிருப்பதும் அந்த 5 போராளிகள் அல்லவா?

அவர்களின் போராட்டத்தின் தூய்மையை.. நேர்மையை.. உண்மையைக் காலம் கண்டிப்பாக அடையாளம் காட்டும்!

தமிழுயிர் அரசியல் கலவாத ஒரு வலைப்பதிவு என்பதை இந்நேரம் தாங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஏதேனும் ஓர் அரசியல் கட்சியின் பின்னால் நிற்பவனும் அரசியலாளரின் பின்னால் நிற்பவனும் சரியான கொள்கையாளனாக இருக்க முடியாது!

ஆனால் ஒரு விதிவிலக்கு ..! அந்த அரசியலாளரும் கட்சியும் கொள்கைப் பிடிப்போடு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தந்தைப் பெரியார், அண்ணா போல்.. ஈழத்தில் தலைவர் பிரபாகரன் போல்.. மலேசியாவில் பாவலர் அ.பு.திருமாளனார் போல்..!!!

Sivaganapathy சொன்னது…

"........இன்று கொசு போன்ற சிக்கல்கள் அனைத்துக்கும் போராட்டம் நடத்துவதற்கு கற்றுக்கொடுத்தவர்களும் வித்திட்டவர்களும் அந்த 5 போராளிகள் அல்லவா?........"

நீங்கள் கூறும் அந்த ஐயவரும் உங்களைப்போல உள்ளவர்களுக்கு வேண்டுமானால் போராட்டம் நடத்துவதற்கு கற்று கொடுத்து இருப்பார்கள் ....

எங்களை போன்ற தமிழ் பள்ளி படித்தவர்கள் போராட்டம் , உரிமை , என்னவென்பது தமிழ் படித்த காலத்திலேயே புரிந்துகொண்டோம்

ஒரு விண்ணப்பம் ...தயவு செய்து "போராளிகள்" என்று தலை மேல் வைத்து "புரளி" கிளப்பாதிர்கள் ...

போராளிகள் மெழுகுவர்த்தி , கரடி பொம்மை , சமாதான புறா என்று பூச்சாண்டி காட்ட மாட்டார்கள் !!!!!

நம் தமிழர்களின் வரலாறு எதிரிகளை மாண்டியிட வைக்கும் வரை சமாதானம் என்கிற வார்த்தைகளுக்கு இடம் கொடுக்காதவர்கள் .

எங்கள் 23-ஆம் புலிகேசி கூட எதிரி அனுப்பிய சமாதான புறா'வை சமைத்து ருசித்து எதிரிக்கு பாடம் புகட்டியவர்....

போராளிகள் எனும் புனிதமான வார்த்தை விடுதலை புலிகளுக்கு மட்டுமே இக்கால கட்டத்தில் மிகவும் பொருந்தும்........!!!

ஆதவன் சொன்னது…

#சிவகணபதி,

//போராளிகள் எனும் புனிதமான வார்த்தை விடுதலை புலிகளுக்கு மட்டுமே இக்கால கட்டத்தில் மிகவும் பொருந்தும்//

ஆயுதங்களை ஏந்தினால் மட்டும்தான் 'போராளி' என்று தாங்கள் சொன்னால் தங்கள் கருத்தோடு நான் முற்றிலும் மாறுபடுவேன்!

ஆனால்,

//எங்களை போன்ற தமிழ் பள்ளி படித்தவர்கள் போராட்டம் , உரிமை , என்னவென்பது தமிழ் படித்த காலத்திலேயே புரிந்துகொண்டோம்//

என்று சொல்லியுள்ள தங்களின் உணர்வும் ஒரு 'போராளி'க்கு உரிய உணர்வுதான் என்பதில் முழுமையாக உடன்படுகிறேன்.

விடுதலைப் புலிகளைக்கூட 'பயங்கரவாதிகள்' என்று முத்திரைக் குத்தும் தரமறியா தமிழர்களும் இருக்கிறார்களே.. எங்கே ஐயா போய் முட்டிக்கொள்வது?

Sivaganapathy சொன்னது…

ஆயுதங்களை ஏந்தினால் மட்டும்தான் 'போராளி' என்றால் உலகில் பல தீவிரவாதிகளையும் "போராளி" என்று தான் சொல்ல வேண்டும்.

என் கருத்து "போராளி" என்பது தான் எடுத்த போராட்டங்களில் அரசியல்-அரசாங்கம்-பொருளாதாரம்-மொழி-இனம்-மதம், என்று, சார்ந்திருக்காமல் தங்களின் கொள்கையில் இருந்து சற்றும் விலகாமல் போராடுபவர்கலைதான் "போராளி" என்பது என் தனிப்பட்ட கருத்தில் விடுதலை புலிகளை தவிர வேறு யாரும் ஞாபகத்திற்கு வரவில்லை.