வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 3 மே, 2008

தென் ஆப்பிரிக்கத் தமிழன் கதை!!!


தமிழன் இல்லாத நாடில்லை என்பது உண்மை. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவிலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் பல அண்டுகளுக்கு முன்னர் தென் ஆப்பிக்காவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள்.

இன்று மூன்றாம் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் தங்களின் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகியவற்றை மறந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். சொந்த மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் கண்முன்னாலேயே செத்துக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாததுபோல வாழ்ந்து வருகிறார்கள்.

தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் இன்று தாய்மொழியாம் தமிழை மறந்தவர்களாக உள்ளனர். ஓர் இனத்தின் உயிர் என மதிக்கப்படும் தாய்மொழியை மதிக்கத் தெரியாதவர்களாக இருந்து வருகின்றனர். தாய்மொழியை மறந்துபோனதால் இன்று சொந்த இனத்தின் அடையாளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் 6ஆம் வகுப்பு வரை தமிழைப் படிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழ் வானொலி இருக்கிறது. ஊடகங்களில் தமிழுக்கென்று இடம் இருக்கிறது. பல தமிழ் அமைப்புகள் இயங்கிவருகின்றன. மேலும், அரசாங்கம் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளில் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. நாடாளுமன்றத்தில் ஊடகத் துறை அமைச்சராகத் தமிழர் ஒருவர் இருக்கின்றார்.

தமிழுக்கும் தமிழருக்கும் இத்தனை உரிமைகளும் சலுகைகளும் இருந்தபோதிலும், அங்குள்ள தமிழர்கள் மொழி, இனப் பற்று இல்லாத காரணத்தினால் அனைத்தையும் இழந்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் தமிழ்க்கல்வியை மதிப்பதில்லை; தமிழ்மொழியைப் போற்றுவதில்லை. அங்குத் தமிழ் ஆர்வலர்கள் இல்லை. தமிழ் வகுப்புகளில் தமிழ் மாணவர்களைவிட ஆப்பிரிக்க இனச் சிறுவர்கள் ஆர்வமுடன் தமிழ் கற்று வருகின்றனர் என்பது கொடுமையாக உள்ளது. தமிழ் இயக்கங்கள் அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் ஒரு குறிப்பிட்ட மக்களே வந்திருந்து ஆதரவு தருகின்றனர். அவ்வாறு வருபவர்களும் நிகழ்ச்சி முடிந்த கையோடு தமிழையும் மறந்து விடுகின்றனர். வானொலி நேயர்களில் 90 விழுக்காடு பேர்கள் தமிழைவிட இந்திப் பாடல்களையும் அன்னியமொழிப் பாடல்களையும் தங்களின் விருப்பப் பாடல்களாக விரும்பிக் கேட்கின்றனர்.

மேலேயுள்ள அத்தனை விவரங்களையும் மனவேதனையோடு தெரிவித்திருக்கிறார் குறுகியக் கால வருகை மேற்கொண்டு மலேசியத்திற்கு வந்திருக்கும் ஆப்பிரிக்கத் தமிழரான திரு.சக்தி முரளிதரன்.

@ஆய்தன்:-
ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான – அவன்
இருப்பவன் கண்களைத் திறக்கின்றான் என ஒரு பாடல் உள்ளது.
மொழியின சமய பண்பாட்டு மரபுகளை மறந்து செத்துக் கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கத் தமிழரைப் பார்த்தாவது எமது மலேசியத் தமிழர் திருந்தட்டும். இல்லையேல், இன்றைய ஆப்பிரிக்கத் தமிழர் நிலை நாளைய மலேசியத் தமிழருக்குக் கண்டிப்பாக வந்துவிடும்.
எச்சரிக்கை!!!

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தென் ஆப்பிரிக்காவில் தமிழர்கள் நிலை குறித்து கவலையாக உள்ளது. ஏன் தான் இந்தத் தமிழன் எங்கே இருந்தாலும் சொரனை இல்லாமல் இருக்கிறானோ தெரியவில்லை. இருக்கும் உரிமையை பறிகொடுத்துவிட்டு மற்றவன் போல் நடிப்பது தமிழனுக்கே கைவந்தை கலை போல தோன்றுகிறது.

தென் ஆப்பிரிக்க தமிழர்கள் நிலையைப் பார்த்தாவது மலேசியத் தமிழர்கள் திருந்த வேண்டும். இல்லையேல், ஆய்தன் ஐயா சொல்வது போல நமது கதை 2020இல் அதோ கதைதான்.

இப்படிக்கு,
சித்தன் சிவாசி

பெயரில்லா சொன்னது…

ஆப்பிரிக்கா தமிழன் கதை பரிதாபம். தமிழனுக்கு தமிழ் உணர்வு வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

ஆப்பிரிக்கா தமிழன் கதை பரிதாபம். தமிழனுக்கு தமிழ் உணர்வு வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

தமிழ்ப்பணியை உயிர்ப்பணியாக முன்னெடுக்கும் ஆய்தன் அவர்களுக்கு வணக்கம்.

இன்றைய நாளில் உலகம் முழுவதும் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். எனினும், எந்த ஒரு நாட்டிலும் தன்னாட்சி உரிமையோடு தமிழர்கள் வாழவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

அதுபோலவே, தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற தமிழர்கள் தமிழ் மொழி, இன, சமய, வாழ்வியல், வரலாற்றுச் சிறப்புகளை மறந்து வாழ்ந்து வருகின்ற நிலைமை உலகத் தமிழர் அனைவருக்கும் வருத்தமான செய்தியாகும்.

தனது சொந்த அடையாளங்களைக் காத்துக்கொள்வதில் அக்கறை இல்லாத ஏதிலி இனமாகத் தமிழினம் இருப்பது வெட்கக்கேடானது. கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவொரு கொடிய நோய்போல தமிழர்களைப் பீடித்துள்ளது.

தமிழனுக்கு என்று தனிநாடு ஒன்று அமைவதே இந்த நூற்றாண்டு கால நோய்க்கு நல்மருந்தாக அமையும்.

அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்