வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 14 ஜூலை, 2007

அசுட்டுரோ குட்டையைக் குழப்புகிறது!

கடந்த 24.06.2007ஆம் நாளன்று அசுட்டுரோ வானவில்லில் ஒளிபரப்பாகிய 360 நிகழ்ச்சியைக் கண்டேன்.

தீமிதி பற்றிய அன்றைய கண்ணோட்டத்தில் பல்வேறு கோணத்தில் அலசி ஆராயப் பட்டிருந்தது மிகவும் சிறப்பாகவே இருந்தது. தீமிதி பற்றிய ஆன்மிகப் பார்வையும் அறிவியல் பார்வையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ப்பட்டது.

தீமிதியின் அறிவியல் கோணத்தை விளக்கிய கல்விமான் அவர்கள் அறிவியலை பேசுவதாக நினைத்துக்கொண்டு, எந்தவித அடிப்படை கோட்பாட்டு மேற்கோள்கள் இல்லாமலும்; அறிவியல் வழிபட்ட ஆய்வுண்மைகளைச் சாராமலும் பேசிய கருத்துகள் மக்களைக் குழப்புவதாக இருந்தன. அந்தக் கல்விமான் அவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதாக தயவுகூர்ந்து நினைத்திடக் கூடாது. பேராசிரியர் அவர்கள் கல்வித்தரத்தில் உயர்ந்தவராக இருப்பினும், இந்தத் துறைபோகிய அறிவும் ஆற்றலும் கொண்டவராகத் தெரியவில்லை. அன்னாருடைய பேச்சே இதனைத் தெளிவுபடக் காட்டிவிட்டது.

அவர் கூறிய கருத்துகளை மிக கீழ்நிலை நூலறிவு கொண்டோரும் கூட கூறிவிடலாம். மிக ஆழமான கருத்துகளையோ சிந்திக்க வைக்கும் அறிவியல் வழிபட்ட சான்றுகளையோ அல்லது யாருமே அறிந்திடாத புதிய கருத்த்களையோ அவர் முன்வைத்ததாகத் தெரியவில்லை. மேலும், தீமிதியை இன்றைய அறிவியல் கருத்துகளோடு ஒப்பிட்டுக் காட்டிப் பேசியவை அறிவுக்கு ஏற்றதாக இல்லை! ஆய்வின் வழிபட்டதாகவும் இல்லை! தீமிதியை நியாயப்படுத்துவதற்காகக் கட்டிய சப்பைக் கட்டாகவே அவருடைய பேச்சுகள் அமைந்தன.

சமயத்தை விட தனிமனித நம்பிக்கையும் மனத்திடமும் உயர்ந்தவை என்பது போன்ற கருத்தையே அப்பேராசிரியர் முன்வைத்தார். இக்கருத்தானது சமயத்தைப் புறந்தள்ளுவதாக இருந்தது. சுருங்கச் சொல்லப்போனால், இறைமறுப்புக் கொள்கை சார்ந்த கருத்தை சமய சாயம் பூசி வழங்கியுள்ளார். இதுபோன்ற பொய்ப் பரப்புரைகள் காலங்காலமாக நம் சமயத்தை இருட்டடிப்புச் செய்ததும் மக்களை மேலும் மேலும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தியதும்தான் மிச்சம். எனவே, சமயப் பூச்சுப் பூசிக்கொள்ளும் ஆன்மிகக் கருத்துகளைத் தவிர்த்து உண்மையான மெய்யியல் கருத்துகளை மக்களுக்குச் சொன்னால் நலமானது என்பதை மதிப்புமிகு பேராசிரியர் அவர்களையும் அசுட்டுரோவையும் வேண்டுகிறேன்.

அடுத்து, இதே நிகழ்ச்சியில் தீமிதியைப் பற்றிய ஆன்மிக நோக்கை எடுத்துப் பேசிய ஐயா ந.தர்மலிங்கனார் அவர்களின் கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கனவாக இருந்தன. நமது சமய கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தெளிவான, அறிவான, ஆய்வின் வழிபட்ட கருத்துகளை ஐயா அவர்கள் முன்வைத்தார். நமது சமயப் பெருமக்கள், அருளாளர்கள், அடியார்கள் யாவருமே சொல்லாததை சமய நூல்கள் சொல்லாததை மக்கள் கடைப்பிடித்து வருவதை மிக நேர்மையாக எடுத்துரைத்த அன்னவரின் மனத்துணிவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தீமிதி பற்றிய மக்களின் நம்பிக்கையை வெறுமனே சாடாமல், சிறுமைப்படுத்தாமல் ஆனால் ஆன்றோர்களின் கருத்துகளைத் துணைகொண்டு சான்றுகளோடு அதனை மறுத்துப்பேசி தெளிவைக் கொடுத்த ஐயா அவர்களின் கருத்துகள் வரவேற்கத்தக்கன. நமது சமயத்தின் உண்மை நிலைகளை எடுத்துக்காட்டும் இவர் போன்றவர்களை மேலும் ஊக்கப்படுத்தி அசுட்டுரோ நிகழ்ச்சிகளைப் படைக்க முன்வர வேண்டும். செய்வீர்களா?

தவிர, நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மக்களை மீண்டும் மூடநம்பிக்கைச் சாக்கடையில் தள்ளிவிடுகின்ற வகையில் முடிவினைக் கூறி நிகழ்ச்சிக் கெடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இறைவனின் பெயரில் நம்பிக்கையோடு எதனைச் செய்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தனை அடியோடு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இறைமையின் உயரிய நிலையை கேவலப்படுத்தும் செயல்களையும், கிரியைகளையும், பூசனைகளையும், வழிபாடுகளையும் இறைவனின் பெயரில் முழு நம்பிக்கையோடு செய்வது ஏற்கக்கூடிய ஒன்றல்ல. இதுபோன்ற கொள்கைகளால் இன்னும் அதிக அளவுக்கு மக்கள் மூட பழக்கங்களுக்கே இட்டுச் செல்லப்படுவர் என்பதை உணர வேண்டும்.



நிகழ்ச்சியின் முடிவில் எப்போதும் மக்களுக்கு உண்மை வழியைக் காட்ட வேண்டும்; சரியான தெளிவைத் துணிவோடு சொல்லவேண்டும்; நியாயமான தீர்ப்பை எவருக்காகவும் எதற்காகவும் அஞ்சாமல் வழங்கவேண்டும்; நேர்மையான கருத்தை தக்கச் சான்றுகளோடும் அடிப்படை களோடும் முன்வைக்கவேண்டும்.
  • ஆய்தன் : ஒன்றே சொல்லனும்! அதை நன்றே சொல்லனும்! அதையும் நல்லதுக்கே சொல்லனும்!

கருத்துகள் இல்லை: