வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

தமிழன், தமிழனானால் சாதி ஒழியும்

தெலுக் பங்ளிமா காராங் தேசிய இடைநிலைப்பள்ளியில் 5ஆம் படிவத்தில் பயிலும் தமிழ் மாணவர்களை, அப்பள்ளியின் வரலாற்று ஆசிரியர் (ருசுனிசித்தா அபு அசான்) "கில்லிங்" என்றும் "சாதிப்பெயரைச்" சொல்லியும் திட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, மிகவும் தடிப்பான; தகாத சொற்களை உரத்தக் குரலில் மிகவும் சினத்தோடு கொட்டித் தீர்த்துள்ளார். கடந்த 3.8.2008இல் எல்லா தமிழ் நாளேடுகளும் இந்தச் செய்தியை வெளியிட்டன.

ஆசிரியர் என்னும் பண்புமிக்க பொறுப்பில் இருந்துகொண்டு மிகவும் மட்டமாகவும் கேவலமாகவும் கீழ்த்தனமாகவும் நடந்திருக்கும் அந்த அறிவுநலங்கெட்ட ஆசிரியரை தமிழுயிர் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏழரை கழுதை வயதுக்கு வளர்ந்துவிட்ட ருசுனித்தா என்ற அந்த கரிநாக்கியின் செயல் ஒட்டுமொத்த மலேசியத் (இந்தியர்)தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது; மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு கல்வியை புகட்டும் ஆசிரியர் இவ்வாறு காலாடித்தனமாக நடக்கலாமா? ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் இவ்வாறு ஒழுங்கீனமாக பேசலாமா? புனித மதத்தைப் பின்பற்றும் அந்த ஆசிரியர் இவ்வாறு புத்திக்கெட்டுப் போகலாமா?

அந்த ஆசிரியரின் கடுமையான பேச்சினாலும், துன்புறுத்தலினாலும் பாதிப்புற்ற மாணவர்கள் மிக மிகத் துணிவாகப் பள்ளி முதல்வரிடம் எழுத்துப்படியாகப் புகார் செய்துள்ளனர். மேலும், காவல் துறையிலும் பகிரங்கமாகப் புகார் கொடுத்துள்ளனர்.

தன்னுடைய இனம் பழிக்கப்படுவதை; சிறுமைபடுத்தப் படுவதை; கேவலப்படுத்தப் படுவதைப் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துள்ள அந்த இளம் உள்ளங்களைத் 'தமிழுயிர்' பெருமையோடு வாழ்த்துகிறது. அவர்களின் இன உணர்வையும் மனத் துணிவையும் 'தமிழுயிர்' மனதாரப் பாராட்டுகிறது.

ரோசித்தா என்னும் அந்த மானங்கெட்ட மலாய்க்காரியைக் கண்டிக்க வேண்டியது ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமையாகும். அதே வேளையில், அவள் பேசிய சாதியியல் பற்றி சற்று சிந்திப்பதும் எமது தமிழினத்தின் கடமையாகும்.

குறிப்பாக, இளம் வயதிலேயே இனமான உணர்வுடன் செயல்பட்டிருக்கும் அந்த 'வீரத்'தமிழ் மாணவர்களுக்குத் 'தமிழுயிர்' சில தெளிவுகளைச் சொல்ல விரும்புகிறது. அந்த இளமைச் செல்வங்களின் இன உணர்வை மிகச் சரியாக வடிவமைக்க வேண்டிய பொறுப்பும் வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாடும் 'தமிழுயிருக்கு' இருக்கிறது. அந்த மாணவர்களுக்குச் சாதியியல் பற்றிய உண்மையான வரலாற்றையும் விளக்கத்தையும் சொல்ல வேண்டியது கற்றோரின் கடமையாகும். அந்தக் கடமையுணர்வின் காரணமாகத் 'தமிழுயிர்' சில விளக்கங்களைச் சொல்ல விரும்புகிறது.

தமிழர் கண்ட குமுகவியல்

அதாவது, முதலில் தங்களை இந்தியன் என்றோ அல்லது இந்து என்றோ நம்புவதை அந்த மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். எதோ, சட்ட ஆவணங்களுக்காக நம்முடைய பிறப்புப் பத்திரத்தில் இனம் 'இந்தியா' என்றும் மதம் 'இந்து' என்றும் குறிக்கப்பட்டுள்ளதே தவிர உண்மையில் நாம் தமிழரே! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அவர் தமிழரே! மற்ற இந்திய மொழிக்காரர்கள் வேண்டுமானால் 'இந்தியன்' என்று சொல்லிக்கொள்ளட்டும்.

எப்போது நாம் நம்மைத் தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ, அப்போதே நாம் 'சாதி' அமைப்பிலிருந்து விடுபட்டவராக ஆகிவிடுகிறோம். காரணம், தமிழரிடையே சாதியியல் அமைப்புமுறை கிடையாது. பழந்தமிழர் வாழ்வியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற குமுகாயப் பகுப்புமுறை மட்டுமே இருந்தது. இந்தப் பகுப்புமுறை சாதி அமைப்பியலுக்கு முற்றிலும் மாறுபட்டது.

தமிழரின் குமுக பகுப்புமுறை யாரையும் மோலோர் என்றும் கீழோர் என்றும் பிரிப்பது இல்லை. தமிழர் குமுக அமைப்பில் மேல்சாதி, கீழ்சாதி என்று எதுவும் கிடையாது. அதனால்தான், திருமூலர் பெருமான் "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்றார். உலகப் பொதுமறை ஈந்த வள்ளுவப் பேராசான் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" அதாவது பிறக்கும் எல்லா உயிர்களும் ஒன்றே என்று உறுதிபட மொழிகின்றார். கணியன் பூங்குன்றன் என்ற தமிழ்ப்புலவர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" அதாவது எல்லா மக்களும் உறவினர்களே என கூறுகின்றார்.

தமிழரை வீழ்த்திய ஆரிய சதுர்வர்ணம்

ஆக, தமிழன் கண்ட குமுகவியல் அமைப்பு மிகவும் சிறப்பானது; நீதியானது; நடுநிலையானது; மாந்தநேயம் நிறந்தது. ஆனால், வடமொழி வழிவந்த அதாவது இந்தியக் குமுகவியல் அமைப்பு அப்படியல்ல. வடமொழியாளர்கள் "சதுர்வர்ணம் மயா சிருட்டி" என்ற கீதையின் கருத்தில் ஆழமான நம்பிக்கை உடையவர்கள். அதாவது, உலகில் நான்கு வகையான குலத்தை நானே படைத்தேன் என்று இறைவனே சொல்லுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

அந்த நான்கு குலம் அல்லது சாதி என்னவென்றால் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகியவை. படைப்புக் கடவுள் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், கால் பாதத்தில் பிறந்தவன் சூத்திரன். இந்த நான்கு இடத்திலும் பிறக்காதவனைப் 'பஞ்சமர்' என்று வடநாட்டு இந்தியர்கள் நம்புகிறார்கள்.

தனித்தன்மையோடு வாழ்ந்த காலம் வரையில் தமிழர்கள் எந்தவொரு மாறுபாடும் வேறுபாடும் இல்லாமல் ஒரே குலமாக தமிழ் இனமாக வாழ்ந்திருந்தனர். இந்தியாவின் கைபர் கணவாய் வழியாக ஊடுருவிய ஆரியர்கள் படிப்படியாகத் தென் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழரோடு கலக்கத் தொடங்கினார்கள்.

இங்குதான், தமிழருடைய அத்தனை சீருக்கும் சிறப்புக்கும் கேடுகள் ஏற்பட்டன. அதில் ஒன்றுதான், தமிழரின் குமுகவியல் அமைப்பு அடியோடு அழிந்துபோனது. தமிழரிடையே ஆரியரின் 'வருணாசிரமம்' எனப்படும் சாதி வேறுபாடு முறை புகுத்தப்பட்டது; தமிழினம் பல்வேறு சாதிகளாகக் கூறுபோடப்பட்டது; மேல்சாதி கீழ்சாதி என அடையாளப்படுத்தப்பட்டது.

அன்று தொடங்கி இன்றுவரையில், தமிழனிடமிருந்து இந்த சாதியியல் முறையைப் பிரிக்க முடியவில்லை. காரணம், ஆதிக்கக் கூட்டம் ஒன்று தமிழரை ஒன்றுபட விடாமல் தடுப்பதற்கு இந்த 'சாதி' என்ற கருவையை மிக நன்றாகப் பயன்படுத்தி வருகின்றது.

மலேசியத் தமிழர் சிந்திக்க வேண்டும்

இந்தியாவில் அதுவும் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவிய இந்த சாதி முறை எமது மலேசியத்திலும் குடியேறிவிட்டது. மலேசியத் தமிழன் தன்னை இந்தியன் என்று ஏற்றுக்கொண்டால், சாதி முறையையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். அப்படி ஆகிவிட்ட நிலையில், யாராவது சாதியைப் பற்றி பேசும்போது சினம்கொள்வதும் புகார் கொடுப்பதும் வேண்டாத வேளையாக ஆகிவிடக்கூடும். காரணம். இந்தியனிடம் இருப்பதைத் தானே மற்றவர்கள் சொல்லுகிறார்கள். அதற்கு ஏன் கோவப்பட வேண்டும்? அதற்கு ஏன் மனம் புண்பட வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்!

அதே வேளையில், தன்னைத் தமிழன் என்று நினைக்கின்றவனுக்கு சாதியால் எந்தவொரு சிரமமோ, சங்கடமோ, மனவருத்தமோ ஏற்படப்போவது இல்லை! காரணம், தமிழனிடன் சாதி இல்லை என்பதுதானே பழைய வரலாறு. எந்தச் சாதிப் பெயரைச் சொன்னாலும் அது இந்தியனையும் இந்துவையும் குறிப்பதே ஆகும். மாறாகத், தமிழனை எந்தச் சாதிப் பெயரையும் சொல்லிக் குறிப்பிட முடியாது; குறிப்பிடவும் கூடாது.

தமிழன், தமிழனாக வேண்டும்

ஆக, தமிழனிடன் வந்து புகுந்துவிட்ட ஆரியனுடைய; வடவருடைய; இந்தியனுடைய; இந்துவினுடைய சாதியியல் அமைப்பத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு தமிழன் தன்னைத் தமிழன் என்று துணிந்து சொல்ல வேண்டும். தமிழன், தமிழனானால் சாதி தொலைந்து போகும்!

@ஆய்தன்:-
சாதி இரண்டொழிய வேறில்லை – சாற்றுங்கால்
இட்டார் உயர்ந்தோர் இடாதார் இழிகுலத்தோர்.
(ஔவையார்)
குறிப்பு:- தொடர்பான செய்தியை 'ஓலைச்சுவடியில்' படிக்கவும். (இங்கே சொடுக்கவும்)

4 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சிந்திக்க வைக்கும் பதிவை கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளது நமது தமிழ்குயிலார் கலியபெருமாள் ஐயாவும் அடிக்கடி கூறும் கருத்துக்கள். எவ்வளவு சொன்னாலும் சிந்திக்கத் தவறும் நம் மக்களை என்னென்று சொல்வது... மிதமாய் நடக்கும் நம் சமுதாய மாற்றங்கள் மேலும் வழுவடைய வேண்டும்...

பெயரில்லா சொன்னது…

சாதியைப் பற்றி விளக்கம் ஒரு நல்ல தெளிவை வழங்கியது. இப்படிப்பட்ட செய்தியை தமிழுயிரில் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

-இளஞ்சித்திரன்
வெள்ளி மாநிலம்

பெயரில்லா சொன்னது…

ரத்தத்திலும் சித்தத்திலும் ஊறிக்கிடக்கும் அடிமை எண்ணங்களில் சாதியமும் ஒன்று. தாழ்த்தப்பட்டவன் என்பதே வினையைக் காட்டும் பொருட்பெயர்தானே. தானாய் தாழ்ந்தவன் இல்லையே. விளங்குமா? விளங்கினால் "விளங்கும்"!

முல்லை,
தலைநகரம்

ஆதவன் சொன்னது…

இளஞ்சித்திரன், உங்களின் தொடர்ச்சியான வருகைக்கு நன்றி.

முல்லை, புதியவராக இருக்கிறீர்கள். தங்களை அன்போடு வரவேற்கிறேன். நான்கு வரிகளே எழுதியுள்ள போதிலும் தங்களின் நல்ல தமிழுணர்வுக்கும் இன உணர்வுக்கும் தலைவணங்குகிறேன். தொடர்ந்து வருக! உங்கள் கருத்துகளைத் தருக!