வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 20 ஜூன், 2008

விண்வெளியை நோக்கி வீரத்தமிழன்


“என்ன நடந்தாலும் சரி, இன்னும் பத்து ஆண்டுகளில் அதாவது 2018க்குள் விண்வெளிக்குச் சென்று ஆய்வு நடத்துவேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்”, என்று 20 வயதான செரடாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் முகிலன் ரெ. கோ. இராசு திட்டவட்டமாகக் கூறினார்.

“எனது ஐந்தாவது வயதிலிருந்து இது எனது இலட்சியமாக இருந்து வந்திருக்கிறது. இதனையடையாத வரையில் நான் மகிழ்ச்சியடையமாட்டேன் என்பதை நான் அறிவேன்”, முகிலன் மேலும் கூறினார்.

அவரது ஐந்தாவது வயதில் அவருக்குக் கொடுக்கப்பட்ட விண்வெளிப் பயணம் பற்றிய படப்புத்தகத்தால் கவரப்பட்டு அதுவே அவரது விண்வெளி ஆய்வுக்கான குறிக்கோளின் அடிப்படையாக அமைந்தது என்று முகிலன் விளக்கம் அளித்தார்.

விண்வெளியிலிருந்து தாய் பூமியைப் பார்க்க வேண்டும் என்ற அவரது இளமைக்கால கனவை நனவாக்கும் திண்மையில் முகிலன் அவரைப் போன்ற மற்ற இளைஞர்களைவிட மாறுபட்டிருக்கிறார்.

  • தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
“பெரிய சிந்தனை, பெரிய இலக்கு இருக்க வேண்டுமென்று எனது தந்தை எனக்கு கற்பித்துள்ளார். ஒருவர் அவரது சிந்தனையில் திடமாக இருந்தால், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை”, என்று வலியுறுத்திய முகிலன் அவரது பெற்றோர்கள் அளித்துவரும் ஊக்கமும் ஆதரவும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினார்.

இவரது முதல் பள்ளி சிலாங்கூரிலுள்ள செரடாங் தமிழ்ப்பள்ளியாகும். தமிழ்ப்பள்ளி மாணவர் என்றாலே இவ்வாறான உயர்ந்த இலட்சியங்களை கொண்டிருக்க இயலாதவர்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகின்ற காலத்தில் முகிலன் அதற்கு மாறுபட்டவராக இருக்கிறார்.
எஸ்பிஎம் தேர்வில் 11ஏக்கள் பெற்ற முகிலன் உள்ளூர் தனியார் கல்லூரியில் சேர்ந்து அமெரிக்க பட்ட மாற்று திட்ட வழியில் உயர்க்கல்வியைத் தொடங்கினார்.

பின்னர், அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள எம்பிரி ரிடல் ஏரோனோட்டிக்கல் (Embry Riddle Aeronautical University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இப்போது அப்பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு "விண்வெளிப் பொறியியல் மற்றும் விண்வெளி அறிவியல்" (Aerospace Engineering and Space Science) மாணவராக இருக்கிறார் முகிலன். அவரது இலக்கை அடைய இப்பட்டப் படிப்பு அடிப்படையாக அமையும்.

11ஏக்கள் பெற்று சிறந்த மாணவராக விளங்கிய மற்றும் உயர்ந்ததோர் இலக்கைக் கொண்டிருந்த முகிலன் மலேசிய அரசாங்கத்திடமிருந்து கல்விக்கடன் உதவி எதனையும் பெறவில்லை. பல முயற்சிகளை மேற்கொண்டார். பலன் ஏதுமில்லை.

“அமெரிக்க பட்ட மாற்று திட்ட படிப்பு முடிந்தவுடன் 2006 அம் ஆண்டில் மலேசியப் பிரதமர், கல்வி அமைச்சு மற்றும் மலேசிய விண்வெளிக் கழகம் ஆகியவற்றிடம் உபகாரச் சம்பளம் கோரி விண்ணப்பம் செய்திருந்தேன். தனியார் நிறுவனங்களிடமும் விண்ணப்பம் செய்தேன். கடனாவது கொடுக்குமாறு கேட்டேன். எவ்வித பதிலும் இன்றுவரையில் கிடைக்கவில்லை”, என்று ஒருவிதமான புன்னகையோடு அவரது முயற்சிகள் பற்றி முகிலன் விளக்கம் அளித்தார்.
தனது முயற்சிகள் பலனளிக்காததால் ஏமாற்றம் அடைந்திருந்த போதிலும் இலட்சியத்தைக் கைவிட வேண்டும் என்ற எண்ணம் அவரது சிந்தனையில் ஒரு கணம்கூடத் தோன்றவில்லை. மாறாக வேறு வழிகளைக் காண முடிவெடுத்ததாக முகிலன் கூறினார்.

எம்ஐஇடி(MIED) மற்றும் சில தனியார்களிடமிருந்து கடன் பெற்றதோடு அவரது தந்தையும் உதவியதாக முகிலன் கூறினார். இன்னும் ஓர் ஆண்டில் தனது பட்டப் படிப்பை முடிக்கவிருக்கும் முகிலன் அதன் பின்னர் தனது இலட்சியத்தை அடைய கடுமையாக உழைக்கப் போவதாகக் கூறினார்.

“சூழ்நிலைகள் தடங்களாக இருக்குமானால், வேறு வழியில் எனது இலட்சியத்தை அடைய முயற்சிப்பேன். ஒரு வழி அடைக்கப்பட்டால், இன்னொரு வழியைப் பாவிப்பேன். விட்டுவிடுவது என்ற எண்ணமே கிடையது”, என்று தனது நிலையைத் தெளிவாக விளக்கினார்.

பெரும் இலட்சியத்தை கொண்ட இந்த மாணவனுக்கு உதவ மலேசிய அரசாங்கம் தவறிவிட்ட போதிலும், இந்நாட்டின் மீதான அவரது விசுவாசம் உறுதியானது என்று கூறிய முகிலன் இந்த நாட்டின் விண்வெளித்துறை வளர்ச்சிக்கு தனது பங்கையாற்ற என்றும் தயராக இருப்பதாக முகிலன் மேலும் கூறினார்.

  • நன்றி: மலேசியா இன்று
@ஆய்தன்:
மண்ணகத்தில் தமிழன் கொடி பறக்கப் போகிறது!
கூடவே விண்ணகத்திலும் தமிழன் கொடி பறக்கட்டும்! பறக்கட்டும்!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வெற்றிக்கொடி கட்டு..
மலைகளை முட்டும் வரை முட்டு..
லட்சியம் எட்டும் வரை எட்டு..
முடிவெடு முகிலா..!