வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 14 அக்டோபர், 2007

மலேசியத்தில் தமிழ்க் காக்கும் நால்வர்

கடந்த 30.9.2007இல் தலைநகர் பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் மிக அமைதியாக மாபெரும் தமிழ் எழுச்சி நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியக் கழகம், தமிழ்நெறிக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம் ஆகியன ஒன்றிணைந்து பிறதோழமை தமிழ் அமைப்புகளின் ஒத்துழைபோடும் நடத்தப்பட்ட இந்த எழுச்சிக் கூட்டத்திற்குத் தமிழை உயிரென மதிக்கும் மலேசியத் தமிழறிஞர்களும் உண்மைத்தமிழ்ப் பற்றாளர்களும் உணர்வாளர்களும் இந்த அருமை நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அரங்கம் நிறைந்த கூட்டத்தில் அன்றைய அந்த அறைநாள் நிகழ்ச்சி மாபெரும் மொழி எழுச்சியை ஏற்படுத்தியது என்பது உண்மை. வந்திருந்த தமிழ் உள்ளங்களில் தமிழ் உணர்வை மீண்டும் அழுத்தமாக பதியவைத்தது என்பதும் உண்மை.

1.பாடநூலின் எதற்கு பண்டிதத் தமிழ்?
2.தமிழ்மொழியைப் பற்றிய தொன்மை வெறும் கற்பனையே!
3.தமிழின் வாழ்வு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில்தான் உள்ளது.
4.வானொலி அறிவிப்பில் சுழியத்தை அகற்றிவிட்டு பூஜ்யம் நிலைப்படுத்தப்பட்டது
5.அன்னிய மொழிக்கலப்பால் தமிழ் வளரும்.
6.தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளை இணைக்க வேண்டும்.

இப்படி, அண்மையக் காலத்தில் நம் நாட்டில் தமிழ்மொழிக்கு எதிராக தமிழ்ப் பகைவர்கள்; தமிழ்த் துரோகிகள்; தமிழ்ப் பேதைகள் சிலர் முன்வைத்த கருத்துகள் தொடர்பில் விரிவான ஆய்வு விளக்கங்களும் ஆழமான தெளிவுகளும் இந்த அருமை நிகழ்ச்சியில் தமிழ்விருந்தாகப் பரிமாறப்பட்டது.

மெத்தப் படித்தவர்கள், உயர்ப்பதவியாளர்கள், மேலதிகாரிகள், பேராசிரியர்கள், இதழாளர்கள், எழுத்தாளர்கள் என்ற உரிமையில் தமிழ்மொழியின் அடித்தளங்களில், அடிப்படைக் கொள்கைகளில் கைவைத்த தமிழ்ப் பேதையர்கள் சிலருடைய முகத்திரைகள் கிழி கிழியெனக் கிழித்தெரியப்பட்டது. அந்தப் பேதையர்களின் குறையறிவு படம்பிடித்துக் காட்டப்பெற்றது. மேற்கண்ட அனைத்து விவகாரங்கள் தொடர்பில் அறிவான விளத்தங்களும் ஆழமான விளக்கங்களும் சான்றுகளுடன் அன்றைய அரங்கில் முன்வைக்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.

தமிழ் – தமிழர் வரலாறுகளில் திருப்பல்கள், மறைப்புகள், ஆகியன திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளன. தமிழ் – தமிழர் சிறப்புகள் மிக நுட்பமாக இழித்தும் பழித்தும் கூறப்பட்டுள்ளன. தமிழ் – தமிழர் அடையாளங்கள் உருதெரியாமல் வஞ்சகமாக அழிக்கப்பட்டன. தமிழ் – தமிழர் என்ற சிந்தனைகளும் உணர்வுகளும் கொஞ்சங் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டன. தமிழ் – தமிழர் என்ற நம்பிக்கைகள் நசுக்கப்பட்டு அன்னிய மொழி, இன, சமய, கலை, இலக்கிய, பண்பாட்டு நெறிகள் பெருமளவில் விதைக்கப்பட்டன. இப்படியாக, தமிழுக்கும் தமிழர்க்கும் எதிராக வரலாற்றுக் காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி அடுக்கடுக்காக நிகழ்ந்துவருகின்ற அவலம் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் விளக்கிச் சொல்லப்பட்டது மிகச்சரியான வினைத்திட்பம்.

தமிழுக்கு இந்த நாட்டில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் கேடுகள் ஏற்படும்போது முன்னின்று குரல்கொடுக்கும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் தமிழ்நெறி அறிஞர் இரா.திருமாவளவன், மலேசியத் திரவிடர் கழகத் தேசியத் தலைவர் தமிழ்மானமிகு ரெ.சு.முத்தையா, தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் தமிழ் இலக்கியப் பண்பாட்டுக் காவலர் மு.மணிவெள்ளையன், தமிழியல் ஆய்வுக் களத் தலைவர் தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம் ஆகிய நால்வர் இந்த நிகழ்ச்சியில் தமிழ் எழுச்சிப் பேருரை நிகழ்த்தினர். வைதீக, புத்த, சமண சமய அழுத்தங்களிலிருந்து அன்று தமிழைக் காத்தவர்கள் சமயப்பெரியோர் நால்வர்; அந்த நால்வரின் அடியொற்றி மலேசியத்திலும் நால்வர் என்று இவர்களுக்குப் புகழாரம் சூட்டுவதில் தமிழுயிர் பெருமையடைகிறது.

இந்த நால்வருடைய எழுச்சி உரைகளானது, இந்த நாட்டில் தமிழுக்கு எதிராகக் கேடுகளும் கீழறுப்புகளும் சூழ்ச்சிகளும் எட்டப்பத்தனங்களும் செய்துவரும் தமிழ்ப் பகைவர்கள்; தமிழ்த் துரோகிகள்; தமிழ்ப் பேதைகள் ஆகியோரை நேரடியாகக் கண்டிக்கும் வண்ணமாக அமைந்தது. இது மிகவும் துணிகரமான செயலாகவும் இருந்தது.

தமிழையும் தமிழரையும் காப்பதற்கு வாழையடி வாழையென வந்த தமிழ்த் தலைவர்கள் வரிசையில் எமது மலேசியத்தில் வந்துதித்த அறிவுடைச் சான்றோராக; ஆற்றலுடை அறிஞராக; மொழியின சமயப் பண்பாட்டு நாட்டமுடைய மறவோர்களாக இந்த நால்வரும் விளங்குகின்றனர். இவர்களைத் தவிர இவர்களின் அடியொற்றிய பெரியோர் இன்னுஞ்சிலர் இந்த நாட்டில் உள்ளனர் என்பது பெருமைக்குரியதாகும். இவர்களின் பின்னால் தமிழ் மொழியின சமய பண்பாட்டுப் பற்றாளர்கள் அனைவரும் திரண்டு நின்று தமிழை உயர்த்திப் பிடிப்போம் வாரீர்.

மேலும், இனி இந்த நாட்டில் தமிழைப் பற்றி பேசத்துணியும் எவரும் நன்றாக சிந்தித்துப் பேச வேண்டும்; சரியான சான்றுகளோடு பேச வேண்டும்; தமிழ்நலத்திற்குக் கேடு செய்யாமல் பேச வேண்டும்; தமிழுக்குக் கீழ்படிந்து பேச வேண்டும் என்பதை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். காரணம் தமிழையும் தமிழனையும் எதிர்க்கும் எந்தவொரு 'பீரங்கிக்குண்டு'களையும் சமைலறையில் 'முள்ளங்கித்தண்டாக' முறித்துப் போடுவதற்கு அறிவாற்றலுடையத் தமிழ்ப் பற்றாளர் படையொன்று எமது மலேசியத்தில் உருவாகி இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் நேரில் கண்ட தமிழுயிர் தமிழ்ப் பகைவர்கள்; தமிழ்த் துரோகிகள்; தமிழ்ப் பேதைகள் அனைவருக்கும் அறிவிக்க விரும்புகிறது.

(பின் குறிப்பு: தமிழ் வெறியர்கள் என்று இந்தப் படையைக் குறைமதியர் எவரும் பிதற்றித் திரிய வேண்டாம். பற்று வேறு வெறி வேறு என்று தமிழ்ப்பற்றாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.)

  • ஆய்தன்: "கெடல் எங்கே தமிழின் நலம், அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க" நால்வரே! உங்கள் பின்னால் இருப்பார் நல்லவரே!

கருத்துகள் இல்லை: