வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

தெலுங்கர் - மலையாளிகளுக்குத் தனிச்சலுகை தரவேண்டும்


மலேசிய தெலுங்கு சங்கம் (ம.தெ.ச) கடந்த 5-4-2008இல் உகாதி சந்தடி நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய ம.தெ.சவின் தேசியத் தலைவர் தெலுங்கர்களுக்குத் தனி வானொலி, தொலைக்காட்சி அலைவரிசையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ம.தெ.சவின் இந்தக் கருத்தைத் தமிழுயிர் முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோல், மலையாளிகளுக்கும் தனியாக வானொலி, தொலைக்காட்சியோடு கல்வி, கலை, பண்பாட்டு வாய்ப்புகளையும் சலுகைகளையும் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் எனத் தமிழுயிர் முன்மொழிகிறது.

இதன் வழியாக, தெலுங்கு, மலையாள மக்களின் மொழி, கல்வி, கலை, இலக்கியங்களுக்குப் பாதுகாப்பு கிட்டும். அதேவேளையில், மலேசியத் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளும் சலுகைகளும் முழுமையாக தமிழருக்கே கிடைப்பதற்கான சூழலும் ஏற்படும். இதனால், தமிழின் வளர்ச்சியையும் தமிழரின் வளர்ச்சியையும் மேலும் வேகப்படுத்த முடியும் எனத் தமிழுயிர் நம்புகிறது.

தற்போது உள்ள நடைமுறையில் இந்தியர் என்ற பெயரில் தமிழர், தெலுங்கர், மலையாளிகள், சீக்கியர் என பல்வேறு இனத்தவரையும் ஒருங்கிணைத்து எல்லா வாய்ப்பும் சலுகையும் உரிமையும் வழங்கப்படுகிறது. அப்படி இல்லாமல், இனிமேல் தமிழரைத் தனியாகவும் தமிழரல்லாத மற்றைய இந்தியரை தனித்தனிப் பெயரிலோ அல்லது இந்தியர் என்ற பெயரிலோ பிரித்து வைத்து அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். இப்படிச் செய்வதால்:-

1. தமிழர் – இந்தியர் என சுட்டப்படாமல், தமிழர் என்றே சுட்டப்படுவர்
2. இனம் – இந்திய இனம் என்றில்லாமல், தமிழினம் என்றாகும்
3. கலை – இந்தியக் கலை என்றில்லாமல், தமிழ்க்கலை என்றாகும்
4. பண்பாடு – இந்தியப் பண்பாடு என்றில்லாமல், தமிழ்ப்பண்பாடு என்றாகும்
5. உடை – இந்திய உடை என்றில்லாமல், தமிழ் உடை என்றாகும்
6. உணவு - இந்திய உணவு என்றில்லாமல், தமிழ் உணவு என்றாகும்
7. விழா - இந்தியர் விழா என்றில்லாமல், தமிழ்விழா என்றாகும்
8. வானொலி – இந்திய வானொலி என்றில்லாமல், தமிழ் வானொலி என்றாகும்
9. நிகழ்ச்சி – இந்திய நிகழ்ச்சி என்றில்லாமல், தமிழ் நிகழ்ச்சி என்றாகும்
10. தலைவர் – இந்தியர் தலைவர் என்றில்லாமல், தமிழ்த் தலைவர் என்றாகும்
11. மாணவர் - இந்திய மாணவர் என்றில்லாமல், தமிழ் மாணவர் என்றாகும்
12.நிறுவனம் – இந்தியர் நிறுவனம் என்றில்லாமல், தமிழர் நிறுவனம் என்றாகும்


இப்படியாக, பொருத்தமில்லாத இந்திய, இந்தியர் என்ற அடைமொழியைத் தூக்கி எரிந்துவிட்டு தமிழ், தமிழர் என்ற மரபுவழியான பெயரைத் தாங்கிக் கொள்வதற்கான சூழ்நிலை உருவாகும். தமிழர்தாம் ஒற்றுமை உணர்வு கருதி தங்களை இந்தியர் என்று சொல்லிக்கொள்கிறார்களே தவிர தமிழரல்லாத மற்றவர் அவ்வாறு சொல்வதில்லை. மாறாக, தங்களைத் தெலுங்கர், மலையாளி, சீக்கியர் என்றே சொல்லிக்கொள்கின்றனர்.

எனவே, அவர்களுக்குத் தனி வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ், கல்வி வாய்ப்பு என அனைத்து வகையான சலுகைகளையும் கொடுத்து நீக்கிவிட்டால், இனிமேல் தமிழர் தங்களைத் தமிழர் என்று நெஞ்சுயர்த்திச் சொல்லிக்கொள்ளலாம். இந்தியர் என்று ஊரான் வீட்டுப் பெயரில் ஒளிந்துகொண்டு வாழும் இழிவான நிலை இனி இருக்காது. இதனால், அனைத்து வகையிலும் தமிழுக்கும் தமிழருக்கும் மிகச் சிறந்த பாதுகாப்பு கிடைப்பதோடு மாபெரும் முன்னேற்றமும் உண்டாகும்.

@ஆய்தன்: தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற வரலாறு உண்மை உலகுக்குத் தெரிய தமிழர் தங்களை இந்தியர் என்று சொல்வதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இன்னும் கொஞ்சம் காலம் போனால் சாதிக்கோரு உரிமை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அதன் பின் தனி மனிதனுக்கோர் உரிமை கேட்பார்கள். இது சரிபடுமா ஐயா?? என்னால் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... சற்று விளக்கவும்...

பெயரில்லா சொன்னது…

அன்பர் விக்னேஷ்வரன் அவர்களுக்கு ஆய்தன் பதில்:-

மலேசியத்தைப் பொருத்தவரையில் அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவிலிருந்து இங்கு புலம்பெயர்ந்தவர் அனைவரும் ஒட்டுமொழ்த்தமாக இந்தியர் என்றே குறிக்கப்படுகின்றனர். இந்தியர்களில் பெரும்பான்மை அதாவது 80% மக்கள் தமிழர்கள். மீதமிருப்போர் தெலுங்கர், மலையாளி, சீக்கியர், கன்னடர் என இன்னும் சில இந்திய வழிமரபினர் ஆவர்.

இந்நிலையில், அனைவரையும் ஒன்றுசேர்த்து இந்தியர் என்று அடையாளப்படுத்துவதால் அவரவரின் தனித்தன்மைகளும் தனிச்சிறப்புகளும் அடிப்பட்டுப் போகின்றன. அவ்வந்த இனத்தினர் தங்களுடைய மரபுவழியான விழுமியங்களை முன்னெடுக்க முடியாமல் போகிறது.

இந்தப் பின்னடைவைத் தடுக்க வேண்டுமானால் இந்தியர் என்ற பெரும் பிரிவுக்குள் இருக்கும் பல இனத்தவரும் தங்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தி கொள்வதே சிறப்பு. இப்படிச் செய்வதால் மட்டுமே, தமிழ் மொழி, இன, சமய, கலை, இலக்கிய, பண்பாடு, வரலாறு, வாழ்வியல் சிறப்புகள் வெளிப்பட்டுத் தோன்றும்.

இல்லையேல், அன்னியரின் அடையாளங்கள் தமிழ் - தமிழர் மீது படிந்துபோகும்; கலந்துபோகும். இதனால் தமிழ் - தமிழரின் அடையாளங்கள் காலப்போக்கில் மாறிப்போகும்; மறைந்துபோகும்.

தற்போதையச் சூழலில் தமிழ் - தமிழர் விழுமியங்கள் பல இந்திய விழுமியங்களாகச் சொல்லப்படுகின்றன; பரப்பப்படுகின்றன; நம்பவைக்கப்படுகின்றன. இந்த இழிநிலைய கண்டிப்பாக மாற்றியமைக்க வேண்டும்.

ஆரிய வழிமரபான இந்தியர் என்னும் அடையாளச் சிறையிலிருந்து தமிழையும் - தமிழரையும் மீட்டெடுக்க வேண்டியது தமிழரின் தலையாயக் கடமை என கருதுகிறேன்.

விக்னேஸ்வரன் அவர்களே, தங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

நன்றி.